Tuesday, October 15, 2013

இண்டியானா தாயும் இந்தியத் தாயும்



இந்தியாவாக இருந்தாலும் சரி இண்டியானாவாக இருந்தாலும் சரி சட்டம் தனது கடமையை சரியாக செய்யும். ஆம் அப்பாவிகளை தூக்கு கயிற்றின் நிழலில் நிறுத்தும் என்பதற்கு ஜஸ்டின் ஒரு மிகச்சிறந்த உதாரணம். ஆம் இங்கு அற்புதம் என்ற ஒரு தாய் கடந்த 22 வருடங்களாக போராடி வருகிறார், இண்டியானாவில் ஸ்டெய்ண்பெர்க் எனும் தாய் கடந்த 11 ஆண்டுகளாக போராடி வருகிறார் தன் நிரபராதி மகனை தூக்கு கயிற்றின் நிழலிருந்து வெளிக் கொணர.

ஆம் நான்கு குழந்தைகளை பெற்று,  தனது கடின உழைப்பால், மினிவேன் ஓட்டி தன் குழந்தைகளை காப்பாற்றிய, தாய் தான் ஸ்டெய்ன் பெர்க், அவரின் மூத்த மகன் தான் ஜஸ்டின். இந்த ஜஸ்டின் 2002ம் ஆண்டிலிருந்து மின்சார நாற்காலியில் உட்கார காத்துக் கொண்டிருக்கிறார் நாட்கள் குறிக்கப்பட்டு பலமுறை தள்ளிவைக்கப்பட்டு.

மார்ச் 15, 2001ம் ஆண்டு டானி பெட்ரோலே என்பவர் ஓவன் பார்பர் என்பவரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். டானி பெட்ரோலே மிகப்பெரிய கஞ்சா வியாபாரி, இவரை 9 முறை சுட்டு கொலை செய்த ஓவன் பார்பரும் ஒரு கஞ்சா வியாபாரி தான். ஆனால் டானி மிகப்பெரிய அளவில் செய்து வருபவர், ஓவன் சிறிய அளவில் வியாபரத்தை நடத்தி வந்தவர். இந்த தொழில் போட்டியே கொலையில் முடிந்திருக்கிறது. இண்டியானாவில் கொலைக் குற்றத்திற்கு மட்டும் தான் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. அந்த மரண தண்டனையில் இருந்து தப்பிக்க இவர் செய்த தந்திரமே ஜஸ்டினை இன்று மின்சார நாற்காலியில் அமர வைத்திருக்கிறது.

ஆம் கொலை செய்து போலீசாரிடம் மாட்டிய பிறகு, இவர் ஜஸ்டின் தான் தனக்கு பணம் கொடுத்து டானியை கொலை செய்ய சொன்னதாக சொல்லிவிட்டார். இதை தவிர வேறு ஆதாரம் என்பது கொலை நடந்த அன்று ஓவன் ஜஸ்டினுக்கு பல முறை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் என்பதும், இதே போல் சக கஞ்சா வியாபாரிகள் நான்கு பேரின் சாட்சியங்கள் இதில் ஓவன் பார்பரின் சாட்சியமும் இருக்கிறது. இதை தவிர காசு கொடுத்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் கொலை செய்த ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜஸ்டினுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஓவனுக்கு 60 வயது வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை விதிக்கப்படுகிறது. ஓவன் 2040ல் சிறையில் இருந்து வெளியில் வந்து விடுவார். ஆனால் ஜஸ்டின் கடந்த பதினோரு ஆண்டுகளாக போராடி கொண்டிருக்கிறார் தான் நிரபராதி என்பதை நிருபிக்க.

நீதிமன்றம் ஓவன் பார்பர் ஜஸ்டினுக்கு மொபைலில் தொடர்பு கொண்டு பல முறை பேசினார் என்பதை வைத்தும், தொழில் போட்டி காரணமாக நடந்த இந்த கொலையில் சாட்சியங்களும் இதே தொழிலை செய்பவர்கள் அவர்கள் ஜஸ்டினையும் தொழிலிருந்து ஒழித்துக் கட்ட பொய் சொல்லலாம் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் இவர்களின் வாக்குமூலங்களை ஏற்று ஒரு உன்னதமான உயிரை பறிக்க துடித்துள்ளது. நல்ல வேளை இன்னும் ஜஸ்டினின் உயிர் பறிக்கப்படவில்லை, போராடிக் கொண்டிருக்கின்றனர் தாயும் மகனும்...

2007ம் ஆண்டு சிறையில் தன்னுடன் இருந்த சக கைதியான கார்ல் ஹாப் என்பவரிடம் ஓவன் தான் நீதிமன்றத்தில் சொன்ன பொய்யை ஒப்புக் கொண்டார். ஆம் மரணதண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக ஜஸ்டினை இந்த வழக்கில் சம்பந்தபடுத்தி அவர் தான் டானியை கொலை செய்ய சொன்னதாக சொல்லி தான் மரண தண்டனையிலிருந்து தப்பித்த கதையை சொல்லிவிட்டார். கார்ல் ஹாப் உடனடியாக ஜஸ்டினின் வழக்குரைஞர்களை தொடர்பு கொண்டு இந்த தகவலை தருகிறார், அவர்களும் உரிய முறையில் சட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதே வேளையில் ஓவன் பார்பரும் தான் நீதிமன்றத்தில் சொன்ன பொய்யை தனியாக ஒரு மனுவாக சமர்ப்பிக்கிறார்.

இதனால் இப்பொழுது இந்த வழக்கு மறுபடியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது ஆனால் இதற்கு நடுவில் பல முறை ஜஸ்டினின் மறு விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தாயும் விடாமல் போராடி வருகிறார் இண்டியானாவில். இந்தியாவிலும் ஒரு தாய் போராடி வருகிறார், அமெரிக்க சட்டமாவது மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டது ஆனால் இந்திய சட்டம் எத்தனை முறை கதவை தட்டினாலும் கிணற்றில் போட்ட கல்லாக தான் இருக்கின்றது. இன்று தூக்கு கயிற்றின் நிழலில் இருக்கும் அனைவரையும் குற்றவாளியாக மாற்ற பதியப்பட்ட சாட்சியங்களில் ஒன்றை கேட்டால் கூட வெளிநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் என்று பதில் கொடுக்கிறது இந்திய அரசாங்கம். இவர்களின் வெளிநாட்டு உறவுக்காக நம் சொந்தங்களை பலி கொடுக்க கேட்கிறது இந்திய அரசு...

இந்த இரண்டு தாய்மார்களிடம் இன்னுமொரு ஒற்றுமை மரண தண்டனை தங்கள் மகனுக்கு மட்டும் வேண்டாம் என்று போராடவில்லை இருவரும் ஒட்டுமொத்தமாக மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.. ஒருவர் இண்டியானாவில் மற்றொருவர் இந்தியாவில்...

2 comments:

  1. இவர் இந்தியத்தாய் அல்ல தமிழ்த்தாய்! நீங்கள் இந்திய அடிமை என்பதை வெளிப்படுத்திருக்கின்றீர்கள். எவ்வாறு இந்திய அடிமையாக இருந்து தமிழர்களுக்காக போராடப்போகின்றீர்கள் ??

    ReplyDelete
  2. நல்லது அனானி, தமிழ் தாயாக இருக்கட்டும் அவர் மகனை கூட்டிட்டு வந்து முதலில் அவரிடம் கொடுங்கள் அப்புறம் தமிழன் என்று மார் தட்டுங்கள்..

    ReplyDelete