Monday, September 24, 2018

முன்னால் நீதிபதிகளை எங்கே தேடப் போகிறோம்?


மானுவேல் வேல்ஸ் 9வருட சிறைவாசத்திற்கு பிறகு 2014இல் விடுதலை செய்யப்பட்டார். 2009இல் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட பொழுது, பிராயன் ஸ்டெல் எனும் மனித உரிமைகள் போராளி  சொன்னது தான்.

“ஒரு நிரபராதி தூக்குதண்டனையின் முன் நிறுத்தப்படுகிறான் என்றால், அந்த நாட்டின் மொத்த சட்டதிட்டமும் செத்துவிட்டது என்று அர்த்தம். மேலும் குற்றம் சுமற்றப்பட்டவரைக் காப்பாற்ற வேண்டிய வழக்குரைஞர் தோற்றுவிட்டார் என்றும், சட்டத்தை காப்பாற்ற வேண்டிய அரசு தரப்பு வழக்குரைஞரும் தனது வேலையில் இருந்து தவறிவிட்டார் என்றும். ஏன் நீதிபதி கூட தவறிவிட்டார் தவறான ஒரு வழக்கில் தவறாக தீர்ப்பளித்து” என்றார்


மானுவேல் வேல்ஸ் ஒரு கட்டிடத் தொழிலாளி ஸ்பானிஷை தாய்மொழியாக கொண்டவர், அவருக்கு இரண்டு மகன்கள் மனைவியை பிரிந்து வாழ்ந்துவந்தார், அப்பொழுது அசீலா மாரீனோ எனும் மெக்சிகன் பெண் நண்பருடன் இணைந்து வாழ முடிவெடுத்து அசீலாவின் வீட்டில் சென்று தங்குகிறார். அவர் சென்று தங்க ஆரம்பித்த 2 வாரங்களில் அசீலாவின் 11மாதம் கைக்குழந்தை மகன் ஏஞ்சல் மாரீனோ உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையின் அனுமதிக்கப்படுகிறார். ஏஞ்சல் 4 நாட்கள் கழித்து மருத்துவ சிகிச்சை பயனில்லாமல் இறந்துவிடுகிறார். மரணத்திற்கு காரணம் குழந்தை ஏஞ்சலின் தலையை பலமாக சுவற்றிலோ தரையிலோ மோதியதால் தான் ஏற்பட்டது என்று பிரதேப்பரிசோதனை அறிக்கையில் கூற்ப்பட்டு, ஏஞ்சல் மரணம் கொலைவழக்காக மாற்றப்பட்டு மானுவேல் மற்றும் அவரது பெண் நண்பர் அசீலாவும் கொலைக் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மானுவேலிடம் பெறப்பட்ட இரண்டு வாக்குமூலங்களின் கீழாக அசீலா மற்றும் மானுவேலுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. வழக்கில் ஏகப்பட்ட ஓட்டைகள் மானுவேல் ஸ்பானிஷை தாய்மொழியாக கொண்டவர், மேலும் 7வது கிரேடில் தோல்வியுற்றவர். அவருக்கு ஸ்பானிஷும் முழுமையாக தெரியாது ஆங்கிலமும் பேச்சு வழக்கு மட்டுமே இந்த நிலையில் அவரிடம் இரண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாக்குமூலங்களை கொடுத்து கையெழுத்து வாங்கி அவரை குற்றவாளி ஆக்கியிருந்தனர். மேல் முறையீட்டிற்கு இந்த வழக்கு போன பொழுது அசீலாவை அப்ரூவராக மாற்றி அவரது வாக்குமூலத்தின் கீழாக மானுவேலை குற்றவாளியாக்கினர். அசீலாவின் வாக்குமூலத்தில் மானுவேல் தனது வீட்டிற்கு வந்த பிறகு தான் ஏஞ்சலின் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்ற வாக்குமூலத்தின் கீழாக மானுவேலுவின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அசீலாவிற்கு 10 வருட தண்டனை அளிக்கப்பட்டது 2010இல் அவர் 5 வருட தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு அவரின் தாய்நாடான மெக்சிக்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அனைத்து வகையிலும் வஞ்சிக்கப்பட்டவராக ஒரு நிரபராதியான மனுவேல் நிராதரவாக நின்றார். ஆனால் தனது சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார். அதன் பிறகான போராட்டத்தில் அரசு தரப்பின் வாதங்களை உடைக்கும் வகையில் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன, ஏஞ்சலின் தலையில் காயம் பட்ட பொழுது அவர் டெக்சாஸ் மாகணத்திலிருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் இருந்த டென்னஸில் கட்டிடவேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டது. அதன் பிறகு குற்றவாளியாக்கப்பட்ட மானுவேலுக்கு தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற முதலில் இருந்து விசாரணைக்கு உத்திரவிடப்பட்டது. அதன் கீழாக விசாரணை திரும்பவும் நடத்தப்பட்டு மானுவேல் குற்றவாளியில்லை என்று நிருபிக்கப்பட்டு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இடையில் 9 வருடங்கள் தூக்குகயிற்றின் கீழும் சிறையிலும் அவர் அடைந்த மன உலைச்சலுக்கான பதில்கள் இன்னும் சட்டத்தையும் அதன் நேர்மையும் மதிக்கும் யாராலும் விடை கூறவியலாது. 

                                          

இது அமெரிக்காவில் நடந்தது மிகவும் கடுமையாக காவல்துறையினர் தங்கள் மீதான விதிமுறைகளை பின்பற்றும் இடத்தில் நடந்தது. அமெரிக்காவில் தவறாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு வழக்கு அல்ல இது, 35 வருடங்களுக்கு பிறகு ஒருவர் நிரபராதி என்று 2009 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளார். 1974இல் அன்று 18 வயதான ஜேம்ஸ் பெய்ன் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து 9வயது சிறுவன் ஒருவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறையில் ஆயுள் தண்டனை கொடுத்து அடைக்கப்பட்டார். அவர் தான் நிரபராதி என்பதை போராடி நிருபிக்க 35 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. 2009ஆம் ஆண்டு டி.என்.ஏ டெஸ்ட் மூலமாக நிருபித்து விடுதலை ஆனார். அவருக்கு ஃப்ளோரிடா மாகணத்தின் தவறாக குற்றம் சாட்டப்பட்டவருக்காக நஷ்ட ஈட்டுத் தொகையாக 10 கோடியே 20 லட்ச ரூபாய்  வழங்கப்பட்டது. இது ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்ததால் ஜேம்ஸ் பெய்னுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஈழப்பீடு இல்லாத மாகணங்கள் அமெரிக்காவில் பல உள்ளது. இழப்பீடு கிடைத்ததால் ஜேம்ஸுக்கு நியாயம் கிடைத்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது 18 வயதில் சிறைக்கு சென்று 53 வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார், அவரின் ஒட்டுமொத்த இளமைக் காலத்தையும் சிறையில் கழித்துவிட்டார். இதை எதைக் கொடுத்து சரி செய்ய முடியும்.

இதைப் போன்று ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன 40 வருடங்கள் செய்யாத குற்றத்திற்கு உள்ளே இருந்த ரிக்கி ஜாக்சன், வில்லி பிரிட்ஜ்மேன் உட்பட பலர் அமெரிக்காவில் உள்ளனர். இது அமெரிக்கா மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் நடக்கும் தவறு தான், ஏன் ஜுரிகள் என்று சிலர் நியமிக்கப்பட்டு நீதிபதிக்கு உதவ நியமிக்கப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே நீதி சிலருக்கு அநீதியாகியுள்ளது. நீதிபதிகளோ அல்லது சட்டமோ தவறே இழைக்காதவர்கள் அல்ல. இந்தியாவிலும் இத்தகைய நீதித் தவறுகள் நடந்து கொண்டே வருகின்றன. ஆறுமுகம் என்பவர் ஒரு சிறு பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்தார் என்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார் மும்பையில் அவரின் மீது குற்றம் சாட்டிய ஆய்வாளர், பல வருடங்கள் கழித்து தான் செய்த தவறை நினைத்து வருந்தி தற்கொலை செய்து கொண்ட பொழுது தான் ஆறுமுகம் நிரபராதி என்று உலகிற்கு தெரியவந்தது.

2012ஆம் ஆண்டு 14 முன்னாள் நீதிபதிகள் ஜனாதிபதிக்கு தனித்தனியாக கடிதம் எழுதினார்கள், அதில் 9 பேருக்கு தாங்கள் கொடுத்த தூக்குதண்டனையானது தவறானது என்று எழுதினார்கள். அதில் ஏற்கெனவே இருவர் சிறைச்சாலையில் இயற்கை மரணம் அடைந்திருந்தனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் அதாவது தனது முழுமையான மேல் முறையீடுகள் எல்லாம் முடிந்து உச்ச நீதிமன்றத்தாலும் குற்றவாளி என்று கடைசி வாய்ப்பிலும் தீர்ப்பளிக்கப்பட்டவர், சட்டத்தின் கீழாக தன்னை நிரபராதி என்று நிருபித்துக் கொள்ள சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால் இந்தியாவில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் கடைசியாக உச்சநீதிமன்றம் என்ற மூன்றே வாய்ப்புகள் தான். அது முடிந்தால் அதன் பிறகு எந்த வாய்ப்புமே ஒரு நாட்டின் குடிமகனாக இருக்கும் இந்தியனுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.

இதில் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முதலில் இருந்தே அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் பூந்தமல்லியில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் எந்த முறையீடும் செய்ய இயலாது, நேரடியாக உச்சநீதிமன்றம் தான் விசாரித்தது. இதில் கீழமை நீதிமன்றத்தில் தான் சாட்சியங்கள் நேரடியாக விசாரிக்கப்படும் மற்றவைகளில் ஆவணங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ராஜிவ் மரண வழக்கில் கீழமை நீதிமன்றம் அதற்கடுத்து உச்சநீதிமன்றம் என்பது மட்டுமே, அனைவருக்கும் வழங்கப்பட வேண்டியும் மூன்று படிகளில் இருந்து இரண்டு படிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதில் மொத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 41 பேர் இதில் 12 பேர் தற்கொலை செய்துகொண்டனர் சிவராசன் உட்பட, 3 பேர் தலைமறைவானவர்கள் என்று அறிவிக்கப்பட்டு 26பேர் மீது தான் வழக்கு தொடரப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 19 பேரை உச்ச நீதிமன்றம் விடிவித்தது, இதில் இவர்களுக்கு தடை செய்யப்பட்ட உயர்நீதிமன்ற விசாரணையும் நடந்திருந்தால் இன்று அனைவரும் வெளியில் விடுதலை ஆகி இருந்து இருப்பார்கள்.

இவற்றை எல்லாம் மறைத்து இந்தியா ஒரு ஜனநாயக நாடு, சட்டத்தின் கீழ் செயல்படுகிறது என்று நமக்கு சொல்லிக் கொண்டுள்ளனர். இங்கு பார்த்த மிக முக்கியமான மானுவேல் வழக்கில் ஏற்பட்ட நீதிப்பிழைகளே இங்கேயும் ஏற்பட்டுள்ளது, இதில் உச்சநீதிமன்றம் தனது கடைசித் தீர்ப்பில் தடாசட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரித்தது தவறு என்று சொல்லிவிட்டு, தடாவின் கீழாக வாங்கப்பட்ட வாக்குமூலங்களையே சாட்சியமாக எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கியது. இதே நிலை தான் மானுவேலுக்கும் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களில் கையெழுத்திட்டதாலேயே தூக்குகயிற்றை முத்தமிட்டு திரும்பி வந்திருக்கிறார். சட்டம் என்பது தன்னை குற்றமற்றவராக ஆக்கிக் கொள்ள மிகக் கடுமையான விதிமுறைகளை தனக்கு தானே விதித்துக் கொள்ள வேண்டும் அதை விடுத்து நீதித் துறை சுத்தமானது என்று மனப்பால் குடித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தவறுகளுக்கு உயிரிழப்புகளுக்கு நீதிபதிகள் தான் பொறுப்பாளிகள் ஆவார்கள்.

இங்கே ஆறுமுகத்திற்கு தண்டனை வாங்கி கொடுத்தமைக்காக தற்கொலை செய்து கொண்ட காவல்துறை ஆய்வாளர் போல் மனம் திருந்தி தற்கொலை செய்து கொள்வது என்றால் இந்தியாவில் முன்னாள் நீதிபதிகளை கல்லறைகளிலேயே தேட வேண்டிய நிலை ஏற்படும்.

Friday, October 9, 2015

மெளனிக்கப்பட்ட ஆயுதங்களும் வாயடைக்கப்பட்ட தமிழர்களும்.

ஐ.நாவின் அநீதி - 1

2009 மே மாதம் தமிழீழ சுதந்திரப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் என்று அடுத்த நகர்வுகளாக பாதிக்கப்பட்ட மக்களின் குரல் சர்வதேச மக்களுக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் மிகக்கவனமாக செயல்பட ஆரம்பித்துவிட்ட வல்லாதிக்க அரசுகளும், உலக அமைதிக்கான அமைப்புகளாக தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் வல்லாதிக்க அரசுகளின் அடிமை அமைப்புகளும் தொடர்ந்து தங்களின் நகர்வுகளை செய்து வருகின்றன. அதில் ஒன்று தான் சமீபத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணயத்தின் 30வது அமர்வில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையும் (OISL) அதன் பின்னால் நிறைவேற்றப் பட்ட தீர்மானமும். 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு இவர்களின் சதி திட்டத்திற்கு எதிராக ஒழிக்க ஆரம்பித்த தமிழர்களின் குரல் அதன் பிறகும் தொடர்ந்து இன்று வரை தமிழீழ மக்கள் சுதந்திர வேட்கையை குறைந்துவிடாமல் கட்டிக் காத்து வருகின்றனர். மெளனிக்கப்பட்ட ஆயுதங்களுக்கு பதிலாக தங்களின் அறவழி மற்றும் சட்டப் போராட்டங்களின் மூலமாக தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டங்களையும் நமக்கு எதிரான சர்வதேச நகர்வுகளையும் நாம் உற்று நோக்க வேண்டிய தேவை உள்ளது,

2009ம் வருடம் மே 17ம் தேதி தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டது. ஆனால் அப்பொழுதிலிருந்து இன்று வரை கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழர்களின் வாயை அடைக்கும் முயற்சியும் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆம் மே 19ம் தேதி சிங்கள பேரினவாத இலங்கை அரசு தமிழர்களின் சுதந்திர போராட்டத்திற்கு எதிரான தனது வெற்றியை உலகிற்கு பறைசாற்றி அறிவித்தது.  அன்றிலிருந்து 7ம் நாள் மனித உரிமைகளை உலகில் இருக்கும் அனைத்து நாடுகளில் நிலை நாட்டுவதற்காக அமைக்கப்பட்ட உலக மனித நேயர்களால் நம்பப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் 2009ம் வருடம் மே மாதம் இலங்கை குறித்த ஒரு சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது, மே 26, 27ம் தேதிகள் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 11வது சிறப்பு அமர்வு இலங்கை குறித்து விவாதித்தது, 27ம் தேதி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் ஓர் அவசரகதியில் என்ன நடந்தது என்ன நடக்கிறது என்ற எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் போகிற போக்கில் இலங்கையை பாராட்டிவிட்டும் சென்றது. அந்த தீர்மானம் தான் 2009க்கு பிறகான தமிழர்களின் சுதந்திர தமிழீழ போராட்டத்திற்கு எதிரான முதல் படியாக வல்லாதிக்க அரசுகளுக்கு அமைந்தது. 

உலகில் எந்த மூலையிலும் இப்படி ஒரு போர் நிகழ்விற்கு பிறகு மனித அவலங்களை கணக்கில் எடுக்க வேண்டிய உலக மனித உரிமைகளை கட்டிக் காக்கும் ஓர் அவை இத்தகைய தீர்மானத்தை இயற்றியதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழர்களின் வாயை அடைக்கும் முதல் கையாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையம். இலங்கையை பாராட்டி சீராட்டி தட்டிக் கொடுக்கும் வேலையை தொடங்கியது.

மனித உரிமைகளை கட்டிக்காக்கவும் மற்றும் வளர்த்தெடுக்கவும் இலங்கைக்கு உதவுவோம் என்பது தான் தீர்மானத்தின் தலைப்பு. இந்த தலைப்பே சொல்லி விடும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட எந்தவிதமான அநீதியையும் கணக்கில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்ட ஓர் தீர்மானம் என்பதை. எந்த ஒரு போரையும் இப்படி ஒருதலைப் பட்சமாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கணக்கில் எடுத்துச் செயல் பட்டதாக தெரியவில்லை. ஆனால் 2009ல் ஈழத்தின் சுதந்திரப் போராட்ட ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே இப்படி ஒரு தீர்மானத்தை இயற்றி உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஆதரவாக ஓரணியில் நிற்க ஐ.நாவின் மனித உரிமை ஆணையமே முதல் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கூட்டப்பட்ட 11வது சிறப்பு அமர்வில் தான் இலங்கையில் நடந்த போர் குறித்த முதல் தீர்மானம் இயற்றப்பட்டது. இதற்கு பிறகு பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன அவைகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை. ஒன்றை ஒட்டி ஒன்றாகவே அனைத்து தீர்மானங்களும் வந்தன. இந்த தொடர்புகள் என்பது சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் வர்த்தகம், அரசியல் மற்றும் இராணுவத் தேவைகளை நிறைவேற்றுவதாக இருந்து வருகிறது. அவைகளைப் பார்க்கும் முன்பாக போர் முடிந்த ஒரே வாரத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் மிக முக்கியமான ஓர் இடத்தைப் பெறுகிறது. ஆம் சர்வதேச மக்களின் மனித உரிமைகளை கட்டிக் காக்கும் ஓர் அமைப்பு போர் முடிந்த பிறகு அங்கிருக்கும் மக்களின் உரிமைகளைப் பற்றி பேசும் ஓர் தீர்மானம் என்று எடுத்துக் கொண்டால், இத் தீர்மானம் போருக்குப் பிறகு மக்களின் மீள் கட்டமைப்பிற்கு உதவும் ஒரே நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இத் தீர்மானம் சர்வதேச அளவில் 2002ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டப் பட்டு,
CFA (Cease Fire Agreement) மூலமாகவும், தமிழீழப் பகுதியினை தன்னாட்சி (De-Facto) அதிகாரம் கொடுக்கப்பட்டு இருந்த்து என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாதிகள் என்ற கண்ணோட்டத்துடனே அணுகுகிறது.  தன்னாட்சி அதிகாரத்தின் கீழ் ஓர் தனி இறையாண்மை கொண்ட ஆட்சி பிரதேசமாக அதன் நிர்வாகத்தினை கவனித்து வந்த ஒரு அமைப்பை அரசு நிறுவனமாக கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, சர்வதேச அரசியல் நகர்வுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஒதுக்கிவிட்டு தமிழர்கள் சார்பாக யாரும் பங்கு பெற இயலாத ஓர் நிலையை உருவாக்கியுள்ளனர். இதன் பிறகான நகர்வுகளைப் பார்க்கும் முன்பு இந்த இலஙகை குறித்தான சிறப்புக் கூட்டம் நடைபெற்ற விவரங்களைப் பார்ப்போம்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் மே 26,27 இலங்கை குறித்தான் சிறப்பு அமர்வு அறிவிக்கப்பட்டவுடன் இலங்கையிலிருந்து 19 பேர் கொண்ட ஒரு குழு தயான் ஜெயதிலகேவுடன் இந்த அமர்வில் கலந்து கொள்ள சென்றது. ஜெர்மனி சார்பில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது, கியூபா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது, ஐ.நா மனித உரிமைகள் அவையில் தயான் ஜெயதிலகே பொதுமக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை இந்த சிறப்பு கூட்டம் தேவையே இல்லாதது என்று பேசுகிறார். தீர்மான வரைவு முதலில் வைக்கப்பட்ட பொழுது மொத்தம் 22 நாடுகள் ஆதரவு தெரிவித்தன பிறகு சுவிட்சர்லாந்து மற்றும் சில நாடுகள் கொண்டுவந்த திருத்தங்களுக்கு பிறகு ஒட்டெடுப்பில் 29 ஓட்டுகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டது மொத்தம் 12 பத்திகள். இதில் பத்து பத்திகளில் இலங்கையை ஓக்குவிப்பதிலும் பாராட்டுவதிலும் செலவழிக்கிறார்கள். மிச்சம் இருக்கும் இரண்டு பத்தியும் இலங்கை அரசுக்கு எதிரானதா என்று பார்த்தால் அதுவும் இல்லை, ஒரு பத்தியில் ஒரே வாக்கியத்தில் இலங்கை அரசை சிறுபான்மையினர் அனைத்து உரிமைகளுடன் வாழும் வகையை மிகவிரவில் ஏற்படுத்துமாறு கூறுகிறது. மிச்சம் இருக்கும் இன்னொரு பத்தி இலங்கை அரசுக்கு மிகவிரைவில் பொருளாதாரரீதியாக உதவுமாறு சர்வதேச நாடுகளை கோருகிறது.

இப்படித்தான் 2009 மே மாத்த்தில் இருந்து ஐ.நா மன்றம் கொண்டுவரும் தீர்மானங்களில் இலங்கைக்கு எதிரானது என்று கட்டமைத்து, இலங்கைக்கு நிதி உதவிகளையும் இனப்படுகொலையையும் மறைக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன சர்வதேச உலக அமைதிக்கான அமைப்புகள். இவர்களைப் பொருத்தவரை செத்தவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவதைவிட சாகடித்தவர்களுக்கு நிதியைப் பெற்றுதருவதே முதன்மையான நோக்கமாக இருக்கிறது.

குறிப்பு - மே 26 மற்றும் 27ஆம் தேதி 2009ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் கீழ்கண்ட முகவரியில், மாற்றம் இல்லாமல் முதலில் வைக்கப்பட்ட தீர்மானம் அடுத்து மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்ட்ட தீர்மானம் இரண்டும் உள்ளது. 
http://www.tchr.net/PR_First_anniversary_HRC_ressolution.pdf
        

(மேலும் 2009லிருந்து நம் கண்களை கட்டிவிட்டு வாயை பொத்தும் தீர்மானங்களும், சர்வதேச சபைகள் நிர்பந்ததிற்கு உள்ளாகப்பட்டு அமைக்கப்பட்ட மனித உரிமை அமர்வுகளின் நடவடிக்கைகளையும் அடுத்த பகுதிகளில் தொடர்ந்து பார்ப்போம்
.)














Thursday, October 1, 2015

பிரபாகரன் மதிவதனி - போராட்டமே வாழ்க்கையாக


காவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம். அரைகுறையாக வரலாற்றை தெரிந்து வைத்துக் கொண்டு எதுவும் புரியாமல் திரியும் சிலருக்காக வரலாற்றை தெரிந்து கொள்ள வைக்கவே இந்த பதிவு.

பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர், தென் இலங்கையில் படித்த மாணவர்கள் யாழ் பல்கலையில் படிக்க முயன்ற பொழுது சிங்கள பேரினவாத அரசு அதற்கு மறுத்தது, அவர்கள் படித்துக் கொண்டிருந்த பழைய பல்கலைக்கே செல்ல காலக்கெடு வைத்தது.  மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. யாழ் நகரம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

ஜெயவர்தனா இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலி அந்த மாணவர்கள் சாவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றார். 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றனர். ப்ளாட் மாணவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக குறை கூறியது, புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர்.

உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு சென்றனர். மாணவிகள் ஜெயா, லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி உட்பட நான்கு பேரும் ஆண்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தான் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்றி விளையாடினார் மதிவதனி, அதற்கு கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது கொண்டிருந்தார், ஆண்டன் அண்ணையிடம் பேசிவிட்டு திரும்பி வந்த பிரபாகரன் அழுது கொண்டிருந்த மதிவதனியை சமாதானம் செய்துவிட்டு சென்றார். இதன் பிறகே இருவருக்கும் இடையிலான காதல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் திருமணம் செய்ய தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி அந்த தடையை நீக்கி திருமணத்திற்கு அனைவரின் சம்மதத்தையும் ஆண்டன் பாலசிங்கம் வாங்கினார். பிரபாகரன் மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றபிறகு தான் திருமணம் என்று கூறியதால், யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டது.

மாப்பிள்ளை வீட்டில் இருந்து தான் தாலி செய்ய வேண்டும் என்பது முறை, எனவே பிரபாகரன் தனது மாமாவிற்கு தகவல் அனுப்பினார் அவரும் மிகவும் மகிழ்ந்து தாலி செய்து அனுப்பி வைத்தார். தாலிக்கு கூட தன் இயக்கத்தில் இருந்து பணம் பெறாமல் தன் மாமாவிடம் இருந்தே பணம் பெற்றார். இதே சமயத்தில் டெலோ பெண்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பலரை தமிழகத்திற்கு கூட்டி வந்தது, அவர்களுக்கு தங்கும் வசதியோ எதுவும் செய்யாமல் நிராதரவாக தமிழகத்தில் விட்டிருந்தது. அவர்களும் ஆண்டன் பாலசிங்கம் வீட்டிலேயே மதிவதனியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் ஒருவர் தான் சோத்தியா என்று அழைக்கப்பட்ட மாவீர்ர் சோத்தியா. இதன் பிறகே இவர்களுக்கான பயிற்சி பாசறை அமைக்கப்பட்டு பெண் விடுதலைப் புலிகள் அணி உருவாக்கப்பட்டது.

இதன் பிறகு தனது கணவரின் ஒவ்வொரு போராட்டத்திலும் தான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்திலும் தொடர்ந்து பிரபாகரனுக்கு தோள் கொடுத்து நின்றவர் மதிவதனி. மதிவதனியும் பிரபாகரனும் வேறு வேறு உருவங்களாக இருக்கலாம் ஆனால் உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத் தமிழர்களுக்காக தங்களின் காதலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள், போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள். இவர்களின் குழந்தைகளுக்கு இறந்த மாவீரர்களின் பெயரையே வைத்துள்ளனர். சார்லஸ் ஆண்டனி, துர்கா போன்ற மாவீரர்களை நமக்குத் தெரியும், ஆனால் பாலச்சந்திரன் யார் என்ற தகவல் பலருக்கு தெரியாது, இவர் வேறு யாரும் அல்ல மதிவதனியின் தம்பி இந்திய அமைதிப்படை காலத்தில் களத்தில் நின்று போராடிய வீரர்களில் ஒருவர். பல்லாண்டுகளுக்கு முன்பாகவே தன் தம்பியை சுதந்திர தமிழீழத்திற்காக கொடுத்த தமக்கையான மதிவதனி தன் பிள்ளைகளையும் தமிழீழத்திற்காக கொடுத்துவிட்டார்.

தம் மக்களின் சுதந்திரத்தையே தம் காதலாகவும் வாழ்க்கையாகவும் அமைத்துக் கொண்டவர்களே பிரபாகரனும் மதிவதனியும்.



Wednesday, August 5, 2015

சமணர் கழுவேற்றம்


சமணர் கழுவேற்றம் குறித்தான விவாதம் என்பது பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பது. இத்தகைய விவாதங்கள் நம்மை நமது வரலாற்றுடன் பொருத்தி பார்ப்பதற்கானது அல்ல, நாம் அந்த வரலாற்றில் இருந்து பாடம் படித்துக் கொள்ளவே.

சமணர் படுகொலை என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை என்று கூறி பலர் மறுத்து வருகின்றனர். இவர்களுக்கு எத்தனை சான்றுகள் கொடுத்தாலும் இல்லை என்று தான் திரும்ப திரும்ப கூறுவார்கள். அதற்கு காரணம் தங்களை மேல்நிலையில் வைத்துக் கொண்டு நாங்கள் சமணர்களை கழுவிலேற்றும் அளவிற்கு கொடுமையானவர்கள் இல்லை என்று தங்களின் இந்து பரம்பரையை தூக்கிப்பிடிப்பது இல்லாமல் வேறு எதுவும் இல்லை. எந்த ஒரு சமூகம் தான் செய்த தவறுகளை உணர்ந்து அதிலிருந்து திருத்திக் கொள்ளமல் தன்னை போலி அடையாளங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறதோ அந்த சமூகம் என்றும் பண்பட்டதாக மாறும் வாய்ப்பு இல்லை. வேண்டுமென்றால் ஹிடலர் ஆரிய இனத்தை வலுவுள்ளதாக ஆக்குகிறேன் என்று சொல்லி, அவர் காலத்தில் தன் இனத்தில் இருந்த ஊனமுற்றவர்கள், வலிமையில்லாதவர்கள் அனைவரையும் கொன்று குவித்த பாசிச மனப்பான்மையை தங்களுடையதாக மாற்றிக் கொள்ள மட்டுமே இவர்களால் முடியும். 

ஐரோப்பிய அறிஞர்கள் தமிழர்கள் வரலாறு இல்லாதவர்கள் என்று ஓரு காலத்தில் குறிப்பிட்டதை உடைத்து உலகில் பழமையான வரலாறு தமிழர் வரலாறு எனபதை நமது இலக்கிய, மற்றும் கல்வெட்டு சான்றுகளின் மூலமாகவும் நிருபித்துள்ளோம். இதில் எந்த மன்னனும் தான் தோல்வியடைந்த போர்களைப் பற்றி கல்வெட்டில் குறிப்பிடவில்லை, தான் வெற்றி பெற்றவைகளையே பறைசாற்றும் வகையில் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். ஒரு மன்னன் தோல்வியுற்றதை மற்றொரு மன்னனின் வெற்றி குறித்தான கல்வெட்டுகள் மூலமாகவே அறிந்து வருகிறோம். பாரி வள்ளலை மூவேந்தர்கள் இணைந்து முறியடித்ததையும் அவர் மரணத்தையும் இவ்வாறாகவே நம்மால் இலக்கிய ஆதாரங்களின் கீழ் அறிந்து கொள்ள முடிகிறது. அதே போல் தான் சமண கழுவேற்றம் என்பதை சைவ சமய ஸ்தாபித வரலாறாக நமக்கு கிடைக்கிறது.

ஒரு பகுதி மக்களின் பண்பாடு என்பது அவர்களின் வாழ்க்கை முறையில் இருந்து தெரியும், சைவ சமய கோட்பாடுகளின் சைவ சமய மக்கள் தங்களின் வெற்றியாக சைவ சமய ஸ்தாவித வரலாற்றை கொண்டாடுகிறார்கள். இதை கழுவேற்றம் என்ற பெயரிலேயே இது வரை கொண்டாடி வருகின்றனர்.

மதுரையின் பெரும் திருவிழாக்களில் ஒன்று சித்திரைத் திருவிழா இதன் தோற்ற காலத்தை நம்மால் அறிய இயலாவில்லை ஆனால் இந்த திருவிழாவில், அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்ந்து நடக்கும் சித்திரை திருவிழாவில் ஆறாம் நாள் விழாவாக சிவனும் மீனாட்சியும் கோயிலுக்குள்ளேயே இருக்கும் சிவகங்கை ஜமீன் மண்டகப்படிக்கு எழுந்தருளுவார்கள். அப்பொழுது அங்கே சைவ சமய ஸ்தாபித வரலாறு பாடலாக ஓதப்படும். இந்த நிகழ்விற்கு பெயர் “கழுவேற்றம்”

இது மட்டுமல்ல திருப்பரங்குன்றத்தில் தெப்ப திருவிழாவின் போது இதே போல் ஆறாம் நாள் சுப்பிரமணிய சுவாமியும், தெய்வானையும் 16 கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள், இவர்களுடன் திருஞான சம்பந்தரும் எழுந்தருளுவார். அப்பொழுதும் சைவ சமய ஸ்தாபித வரலாற்று பாடல்கள் ஓதுவார்களால் ஓதப்படும்.

இந்து மதத்தின் உள்ளடக்கிய சிவன், மீனாட்சி, முருகன், தெய்வானை சம்பந்தப்பட்ட திருவிழாவில் இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுவது சாதரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிறு தெய்வ வழிபாடு முறை என்பது இந்து மத சம்பிராதயங்களுக்குள் அடங்காது ஆனால் திருமங்கலம் பத்திரகாளியம்மன் திருக்கோயிலிலும் வைகாசி மாத திருவிழாவில் ஆறாம் நாள் திருவிழாவாக கழுவேற்றம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோயில் 18ம் நூற்றாண்டில் எளிய தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கோயில் இதையும் பார்ப்பனியத்தின் பிடியில் இன்று விட்டுவிட்டோம். காளியம்மன் ஸ்ரீ பத்திரகாளியம்மனாக உருவெடுத்துவிட்டார்.

சரி சமணர் கழுவேற்ற வரலாறுக்கும் இந்த கோயில் திருவிழாக்களுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நின்றசீர் நெடும் பாண்டியன் சமணத்தை போற்றி வளர்த்து வருகிறார், அவருடைய மனைவி மங்கையற்கரசி சைவத்தை போற்றுகிறார். ராணி மங்கையற்கரசி வேண்டுகோளின் கீழ் சம்பந்தர் மதுரை வருகிறார். அப்படி மதுரைக்கு வந்த சம்பந்தரை மதுரையில் கொலை செய்ய சமணர்கள் முயல்கிறார்கள். அதில் இருந்து தப்பிய சம்பந்தர் மன்னனுக்கு ஏற்பட்டிருந்த வெக்கை நோயை சமணர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை எனும் பொழுது திருநீற்றுப் பதிகம் பாடி மன்னனை நோயிலிருந்து விடுவிக்கிறார் இது தான் கதை.

“மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே”

இந்த கதை பெரியபுராணத்தில் இருக்கிறது, திருநீற்றுப் பதிகமும் நம் கையில் இருக்கிறது. இதைப் போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரைந்த ஒவியமும் இருக்கிறது பல கோயில்களில் சிற்பங்களாகவும் இந்த கழுவேற்றம் நமக்கு ஆதாரங்களாக இருக்கிறது. சமணத்தை வென்று சைவம் தலைத் தோங்கியதை குறிக்கவே இன்று வரை பல கோயில்களில் திருவிழாக்களில் இந்த நிகழ்வை சைவ சமய தோற்ற நிகழ்வாக கழுவேற்றம் என்ற பெயரில் இன்று வரை கொண்டாடியும் வருகிறோம். ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அவர்களின் பண்பாட்டில் அன்றாட நடவடிக்கையிலும் இருந்தும் நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு சமூகத்தின் நாகரீகம் என்பது அவர்களின் பல நூற்றாண்டு காலமாக கடைபிடித்து வரும் பழக்கவழக்கங்கள் தான்.

இத்தகைய ஒன்று தான் சமணர் கழுவேற்றத்திற்கான ஆதாரங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயில் போன்றவற்றில் மட்டுமில்லாமல் மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சமணர் கழுவேற்றம் அந்த அந்த கோயில் திருவிழாக்களின் ஒரு பகுதியாக நடந்து வருகிறது. இதையெல்லாம் மறுப்பது என்றால் இந்த சமணர் கழுவேற்றம் நடக்கவில்லை என்றோ கூறுபவர்கள். மொட்டையாக இதற்கான ஆதாரம் இல்லை ஆனால் இன்று வரை சமணக் குன்றுகள் இருக்கின்றன என்ற ஆதாரத்தை மட்டும் கொடுக்கிறார்கள் ஆனால் இவ்வாறு மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய்விட்ட திருவிழாக்களில் கண்ணுக்கு முன்பாக சமணர் கழுவேற்றத்திற்கு ஆதாரமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் நிகழ்வை மறந்துவிடுகிறார்கள்.

இப்படி மறுப்பவர்கள் சைவத்தையும் இந்துத்துவா தத்துவத்தை குற்றமற்றவர்களாக சித்தரிக்கும் மதவாதிகளாகவே இருக்கின்றனர். இந்து மதத்தின் குற்றங்களை மறைத்து அதனை தன் மதமாக தூக்கிப் பிடிப்பதே இவர்களின் நோக்கம். எவ்வாறு இன்று இந்து மத கூறான ஆர்.எஸ்.எஸ் இப்பொழுது அம்பேத்காரை தூக்கி வைத்துக் கொண்டு நால் வர்ண பேதத்தை பாதுகாக்க முயல்கின்றனரோ அவ்வாறே தான் இவர்களும். அம்பேத்காரும் ஒடுக்கப்பட்ட மக்களும் இந்து மதத்தை தூக்கி எறிய காரணமே நால் வர்ணத்தில் ஓரு இடம் கூட கொடுக்காமல் பஞ்சமர்களாக ஒதுக்கியதுடன் இல்லாமல், ஒட்டுமொத்தமாக ஒரு மனித இனத்தின் கூறுகளாக கூட அவர்களை பார்க்கவில்லை என்பது தான் ஆனால் இன்று அம்பேத்கர் படத்தை தாங்கி பிடித்துக் கொண்டு வரும் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் தமிழ் மன்னர்கள் செய்த தவறுகளை மறைத்து வெறும் பழம்பெருமை பேசும் இந்த கூட்டமும் ஒன்றே.

எந்த ஒரு கருத்தியலும் தன் தவறுகளை உணர்ந்து அதைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் அந்த கருத்தியல் மட்டுமில்லை அதைச் சார்ந்த சமூகமும் விழ்ந்துவிடும் 

Monday, April 20, 2015

எது திராவிடம் - கருப்புச் சட்டை



சத்தியமூர்த்தி அய்யர் சென்னை கடற்கரையில் சர். முகமது உஸ்மான் அவர்களைப் பற்றி பேசிய அதே இடத்தில் மேடை போட்டு எரிமலை எம்.கே. குப்தா “சர். முகம்மது உஸ்மானைப் பற்றி சத்தியமூர்த்தி பேசிய வர்த்தைகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் சத்தியமூர்த்தி வாபஸ் வாங்க வேண்டும் இல்லையென்றால் சத்தியமூர்த்தியின் காலிலே போட்டிருக்கின்ற பூட்சை அல்ல என்னுடைய காலிலே போட்டிருக்கின்ற பூட்சை கழற்றி அடித்து சத்தியமூர்த்தியை வாபஸ் வாங்க வைப்பேன்” என்று எம்.கே.குப்தாவும், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியும் முழங்கினார்கள். இதன் பின்னர் சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

தமிழக காங்கிரஸின் மிகப்பெரும் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் சத்தியமூர்த்தி அவர்களின் தொண்டர் படைபலமும் கணக்கிலடங்காதது, அதுவும் இந்த நிகழ்வு நடந்த காலம் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம் அப்பொழுது காங்கிரஸின் ஒரு தலைவரை நோக்கி சவால் விட்டு அவர் பேசியதற்கு மன்னிப்பு கோர வைத்தார்கள் என்றால் எத்தகைய நெஞ்சுரம் இருந்து இருக்க வேண்டும் இந்த பெரியார் தொண்டர்களுக்கு. கருப்புச் சட்டைக்காரன் என்றாலே ஒர் மக்களிடையே ஓர் மரியாதையும், எதிரிகளின் மனதில் ஒரு பயமும் என்றும் குடிகொண்டிருக்கும். அப்படியான கருப்புச் சட்டை அணிந்து கொள்ளும் பழக்கம் ஆரம்பிக்கப்பட்டது எப்பொழுது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.

1930 களில் தீபாவளி நமது மன்னன் நரகாசுரனின் மரணமடைந்த தினம் இதை நாம் கொண்டாடக் கூடாது, அது நமக்கு துக்க தினம் என்று அறிவித்து கருப்புச் சட்டை அணிந்தார்கள் முதலில். அது தான் 1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29, 30ம் நாட்களில் திருச்சியில் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தொண்டர்கள் நிரந்தரமாக கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்றும் அதற்கான காரணத்தை வலியுறுத்தியும் பெரியார் பேசினார். 

“நமது இழிநிலையை விளக்கிட எப்போதுமே கருப்புச் சட்டை அணியலாம், பெண்டிரும் கருப்புத் துணியில் புடவை ரவிக்கை அணியலாம். கூட்டங்களில் இனி மாலைக்கு பதில் கருப்புத் துணிகளே போடலாம். இந்தியாவில் பிற இடங்களில் ராமதண்டு, அனுமான் சைன்யம், செஞ்சட்டை, நீலச்சட்டை இந்துஸ்தான் சேவதள் இருப்பது போல் இங்கும் கருப்புச் சட்டைப்படை தமிழ்நாடு முழுவதும் இருக்கும்.”

இதன் பிறகே கருப்புச் சட்டைப்படை உருவாக்கப்பட்டது, 1946ம் ஆண்டு மே மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் மதுரையில் முதல் கருப்புச்சட்டை மாநாடு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. மாநாட்டின் முதல் நாள் மிகவும் அமைதியாக நடந்தது ஆனால் மே 11ம் தேதி மாநாட்டு பந்தலுக்கு தீ வைக்கபப்ட்டது, பெரியாரின் தொண்டர்கள் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாநாட்டு பந்தலை தாக்க முயன்ற இந்துமத காங்கிரஸ் வெறியர்களுக்கு  “கொடியே தடியாகவும் தடியே கொடியாகவும்*” பதிலடி கொடுக்கப்பட்டது. இப்படித் தான் கருப்புச்சட்டையும் அதன் கீழாக ஒரு படையாகவும் பெரியாரின் தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து கொள்ள ஆரம்பித்தனர். இந்து மத வெறி பிடித்த காங்கிரஸ் காரர்களுக்கு எதிராக கொடியை தடியாக மாற்றிய பிறகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்த் துறை காங்கிரஸ் அடியாட்களை கைது செய்தது.

மதுரையில் இப்படி கருப்புச் சட்டைப் படைக்கு எதிர்ப்பு தெரிவித்தது யார் என்று பார்த்தோம் என்றால், இன்றைய தமிழ்நாட்டு ஆலய நுழைவுப் போராட்ட வரலாற்றில் கதாநாயகனாக சித்தரிக்கப்படும் ‘வைத்தியநாத அய்யர்’ தான் கருப்புச் சட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்த முற்போக்கு பிராமணன். ஆம் கக்கனை தன் மகன் போல் வளர்த்தவர், ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர் என்று எல்லாம் வரலாற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ள இவர் இராஜகோபாலச்சாரியாரின் ஒரு கைப்பொம்மை. இராஜகோபாலச்சாரியின் விரலசைவுக்கு ஆடும் ஒரு பொம்மையாகவே ஆலாய நுழைவுப் போராட்டம் என்ற கண் துடைப்பு நாடகத்தை நடத்தினார், அரசாங்க அதிர்காரிகள் வருகிறார்கள் என்று சொல்லி கக்கன் உட்பட மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார், அங்கிருந்த அய்யர்களும் விமர்சையாக வரவேற்பு அளித்தனர்.

ஆலய நுழைவுப் போராட்டம் முடிந்த பிறகே அய்யர்களுக்கு விசயம் தெரிந்தது, வந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அதன் பிறகு கிட்டத்தட்ட 10 நாட்கள் கோயிலை இழுத்து மூடினர். கோயில் தீட்டு பட்டுவிட்டது என்று பரிகார பூஜைகள் எல்லாம் நடத்தப்பட்டு அதன் பிறகே கோயில் திறக்கபப்ட்டது. இவ்வாறான ஒரு நுழைவுப் போராட்டம் எதற்கு என்று தெரியவில்லை, ஆனால் இதே முற்போக்குவாதியாகவும் புரட்சியின் அடையாளமாகவும் வரலாற்றில் சித்தரிக்கப்பட்ட வைத்தியநாத அய்யர் தான் மதுரையில் கருப்புச் சட்டை மாநாடு கூடாது என்று தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்தார். மதுரை கீழ்பாலத்தின் அருகில் கருப்புச் சேலை கட்டி வந்த பெண்களை அடித்து உதைத்தார்கள் இந்த வைத்தியநாத அய்யர் கூட்டம். இப்படி 10ம் தேதி மற்றும் 11ம் தேதி என்று மாநாடு நடந்த இரண்டு நாளும் மிகப்பெரும் கலவரங்களை நடத்திவிட வேண்டும் என்று முயன்றனர்.

ஆனால் பெரியார் தன் தொண்டர்களை கட்டுக்குள் வைத்து எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் பார்த்துக் கொண்டார். இப்படியான கருப்பு சட்டைப் படை ஆரம்பித்த இரண்டாவது வருடத்தில் 1948ம் ஆண்டு அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சுப்புராயன் காலத்தில் தடை விதிக்கப்பட்டது. கருப்புச் சட்டைப் படை என்பது தமிழகத்தை ஆண்டவர்களைவிடவும், காவல்துறையை விடவும் பெயர் பெற்றிருந்த காலம் அது. மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் இல்லை காவல் துறையினரால் பிரச்சனை என்றாலும் அவர்கள் அணுகியது கருப்புச் சட்டைகளையே. இந்த நிலை 1990கள் வரை நீடித்தது.

பேரறிவாளன் 1991ம் ஆண்டு ஜுன் மாதம் 11ம் தேதி சிபிஐயிடம் தந்தை ஞானச்சேகரன் என்ற குயில் தாசனாலும், அவரது அம்மா அற்புதம் இருவரும் சேர்ந்தே ஒப்படைத்தனர். மறுநாள் காலையில் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என்று சொன்ன சிபிஐ அதிகாரிகள் 15நாள் பெற்ற தாய் தந்தைக்கும் பிள்ளையை கண்ணில் காட்டவில்லை, ஏன் சட்டப்பூர்வமாக 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க அனுமதிக்க கோர வேண்டும் என்ற சட்ட விதிமுறையையும் பின்பற்றாமல் 15 நாட்கள் சட்டவிரோதமாக கடத்தி வைத்து இருந்தனர். அந்த சமயத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு பேரறிவாளனை அழைத்து வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது, அதற்கு முன்பே பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது உலகிற்கே தெரியும். பேரறிவாளனை நீதி மன்றத்திற்கு அழைத்து வரும்பொழுதாவது பார்க்கலாம் என்று பேரறிவாளன் குடும்பத்தினர் செங்கல்பட்டு நீதிமன்றம் செல்ல முடிவெடுத்தனர்.

ஆனால் அவர்களுடன் ஜோலார்பேட்டை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200 பேருக்கும் அதிகமானவர்கள் ஒன்றிணைந்தனர் நாங்களும் வருகிறோம் என்று சொல்லி. பேரறிவாளன் சம்பந்தப்பட்ட வழக்கு ராஜிவ் கொலை வழக்கு என்ற பொழுதிலும் 200 ஊர்க்காரர்கள் பேரறிவாளன் குடும்பத்துடன் இணைந்து நீதிமன்றம் வந்தனர் என்றால் பேரறிவாளன் தந்தை குயில்தாசனின் கருப்புச்சட்டையும் அந்த சட்டையுடன் அவரும் அவர் குடும்பமும் ஆற்றிய தொண்டே. 1990கள் வரை ஒருவரை காவல்துறை கைது செய்துச் சென்றால் என்ன ஏது என்று விசாரிக்க ஒரு கருப்புச் சட்டைகாரரை கூப்பிட்டுக் கொண்டு ஒட்டுமொத்த தெருவே காவல் நிலையம் செல்லும். ஆனால் 1991க்கு பிறகு இந்த நிலையை தலைகீழாக மாற்றியது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு, பேரறிவாளனையும் அவர் குடும்பத்தையும் திராவிடர் கழகத்தையும் பிரித்து நிறுத்தியது. ஒட்டுமொத்தமாக தன் இயக்கத் தோழர் ஒருவரை கைகழுவினர் திராவிடர் கழகத்தில் பெயருக்கு கருப்புச் சட்டை போட்டு உலாவருபவர்கள்.

உண்மையான கருப்புச் சட்டைக் காரர்கள் பலர் பெரியார் காலத்திலேயே வெளியேறிவர்களும், பேரறிவாளன் கைதுக்கு பிறகு வெளியேறியவர்களும் தொடர்ந்து கருப்புச் சட்டையுடன் களத்தில் நின்றனர், 26 பேருக்கு தூக்கு கொடுக்கப்பட்டபொழுதும் அதில் 26 பேரின் தூக்கு கயிறை அறுத்து எறியும் வரையில் தொடர்ந்து நின்றனர். ஆனால் திராவிடர் கழகம் கருப்புச் சட்டையை ஒரு சீருடையாக மாற்றிவிட்டது.

அது இன்று கருப்புச் சட்டை என்பது ஓர் அடையாளம் அல்ல என் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவிற்கான எதிர்ப்பு என்பதை மிகத் தெளிவாகவும் ஆணித் தரமாகவும் சொல்லும் விதத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அணுகு முறையே. ஆனால் இதை அறியாத சிலர் இன்று பச்சைத்துண்டையும் கருப்புச் சட்டையையும் ஒருங்கே அணிந்து கொண்டு பண்பாட்டுப்புரட்சி கலாச்சார புரட்சி என்று கிளம்பிவிட்டனர். பெரியார் காலத்தில் இருந்து இன்று வரை கருப்புச் சட்டை என்பது எதிர்ப்பின் அடையாளமாக பின்பற்றபப்டுவது. சமூகத்தின் இழிவை துடைக்கும் வரை உண்மையான கருப்புச் சட்டைகள் ஏ.ஜி.கே, சுவரெழுத்து சுப்பையா போன்றவர்களாய் பயணிக்க இன்னும் பல கருப்புச் சட்டைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர், மேலும் புதிதாய் பல கருப்புச் சட்டைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.


முதல் பகுதி
http://kumarikantam.blogspot.in/2015/04/blog-post_16.html