Saturday, November 10, 2012

க்யூ பிராஞ்ச் வயிறு வளர்க்க


தமிழ்நாட்டின் காவல்துறையின் ஓர் அங்கமாக இயங்கி வருவது க்யூ ப்ராஞ்ச், இவர்கள் வைத்தது தான் சட்டம் என்று சென்று கொண்டிருக்கிறது நமது நிலை. சமீப காலமாக பலரை கைது செய்கிறார்கள் பல காரணங்களை சொல்லி, நேற்று கூட ஒரு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு ஆவணப்பட இயக்குனரை கைது செய்யப்பட்டதாக தகவல் வந்தது. இவர்கள் கைது செய்பவர்களை நக்சலைட் இந்தியாவுக்கு எதிராக சதி செய்தார்கள் என்று காரணம் சொல்லி தான் கைது செய்வது இவர்களின் வாடிக்கை. ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் சட்டபூர்வமாக பல வழிமுறைகள் உண்டு ஆனால் அவற்றை எல்லாம் கடந்து தங்கள் விருப்பபடி இவர்கள் யாரை வேண்டும் என்றாலும் கைது செய்வார்கள் இவர்களுக்கு இந்த உரிமை எப்படி வந்தது.

1973ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில் தான் முதன் முதலில் இந்த பிரிவு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது, காரணம் நக்சல் பாரி இயக்கங்கள் என்று அழைக்கப்படும் மக்கள் இயக்கங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் க்யூ பிராஞ்ச். இது தனது முழு செயல்பாட்டை எம்.ஜி.ஆரின் ஆட்சிகாலத்தில் தமிழகத்தில் காட்டி பலரை ஒழித்துக் கட்டியது. மக்களுக்காக போராடுபவர்களை ஒடுக்கவே உருவாக்கப்பட்ட பிரிவு தான் இது. ஆனால் இதே போன்ற ஒரு பிரிவு சட்டவிரோதமாக ரவுடிதனம் பண்ணும் சிலருக்கு எதிராக பயன்படுத்தியிருந்தால் இன்று அமைச்சர்களாக இருந்த இருக்கும் பலர் அமைச்சர்கள் ஆகாமல் என்றோ சவக்குழிக்குள் சென்றிருப்பார்கள். மக்களை மிரட்டி கொள்ளை அடிப்பவர்களுக்கு எதிராக இப் பிரிவு உருவாக்கப்படாமல் மக்களுக்கு ஆதரவாக போராடும் தோழர்களை ஒடுக்கும் பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

70கள் 80களில் நக்சல் பாரி இயக்கங்கள் தமிழகத்தில் இருந்தன அதனால் இந்த பிரிவின் தேவை இருந்தது ஆனால் அதன்பிறகு சொல்லிக்கொள்ளும் படியான  இயக்கங்கள் தமிழகத்தில் இல்லை. மக்கள் அரசின் எந்த விதமான மக்கள் விரோத திட்டங்களையும் புரிந்து கொள்ளாமல் அதன் கீழாக வாழப் பழகிவிட்டனர், இந்த பிரிவு தொடர்ந்து செயல்பட வேண்டிய தேவையும் இல்லாமல் போய்விட்டது ஆனால் அதன் பிறகு இந்த பிரிவு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு என்று தனியாக அரசில் இருந்து பணம் ஒதுக்கப்படும் மேலும் எல்லையற்ற அதிகாராங்களும் இருந்தது இதை இழக்க விரும்பாத இவர்கள் 1991க்கு பிறகு ஈழத்தமிழர்களின் பெயரை சொல்லி பிழைக்க ஆரம்பித்தனர். ஆமாம் அவர்கள் இங்கு தீவிரவாதத்தை உருவாக்குகிறார்கள், ஆயுத கலாச்சாரத்தை உருவாக்குகிறார்கள் என்று கதை கட்டி தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொண்டனர்.



நமக்கு அனைவருக்கும் தெரியும் தங்களின் தேசிய விடுதலைகாக போராடிய தோழர்கள் அதற்கான பணத்தேவைகளை நிறைவு செய்துகொள்ளவே நிறைய சிரமப்பட்டார்கள் அவர்கள் பணம் செலவழித்து தமிழகத்தில் ஒரு போராட்டத்தை வளர்க்கும் நிலையில் இல்லை. ஆனால் அவர்கள் எதோ பெரும் பணக்காரர்கள் போலவும் அவர்கள் இங்கு ஒரு ஆயுதப்போராட்டத்தை ஊக்குவிக்க முயன்றனர் என்று சொல்லி க்யூ ப்ராஞ்ச் என்று பிரிவு தனது இயக்கத்தை தக்க வைத்துக் கொண்டது. ஒரு ஆயுதப்போராட்டத்தை ஒரு நாடே உருவாக்க முடியும் 1980களில் ஈழத்தில் ஆயுதப்போராட்டதை இந்தியா ஊக்குவித்தது போல்,  அமெரிக்கா பின்லேடனை தனது தேவைகாக ஆதரித்து ஊக்குவித்து விட்டு பின்னர் அவர் தங்களுக்கு எதிராக திரும்பியபொழுது அழித்தது. இவ்வாறு ஒரு நாடு தான் அடுத்த நாட்டில் ஆயுதப்போராட்டத்தை ஊக்குவிக்க முடியும். ஆனால் தமிழகத்தில் ஆயுதபோராட்டத்தை தனது தேசத்தின் விடுதலைகாக போராடிய விடுதலை போராளிகள் ஊக்குவித்ததாக சொல்லி தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது க்யூ ப்ராஞ்ச்.

இப்பொழுது 2009க்கு பிறகு அந்த பிரச்சனையும் இல்லை என்று ஆன பிறகு இந்த க்யூ ப்ராஞ்ச் தொடருவதற்காக உருவாக்கப்பட்டதே ஈழ அகதிகள் சிறப்பு முகாம். இவர்கள் மேல் பதியப்படும் வழக்குகள் ஒன்றுக்கும் உதவாத விசா, பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்கு வந்தார்கள் என்பது. உலகில் இல்லாத எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறை இது அகதியாக அதாவது தனது சொந்த நாட்டில் வாழ வழி இல்லை என்று அரசியல் தஞ்சம் கேட்டு வருபவர்களிடம் ஆவணங்களுடன் வரவேண்டும் என்று கேட்கும் கொடுமை. எந்த அரசு தன்னை அழிக்க முயல்கிறதோ அந்த அரசிடம் அனுமதி பெற்று வரவேண்டும் என்று சொல்கிறது இந்த க்யூ ப்ராஞ்ச் நீதிமன்றம் பல வழக்குகளை தள்ளுபடி செய்தாலும் இவர்கள் மீது வேறு வழக்குகள் பதிவு செய்து திரும்பவும் இந்த சிறப்பு சிறைகளிலேயே வைக்கின்றனர். இதை தவிர நமது ஊரில் பலருக்கு போடப்படும் பொய் வழக்கான கஞ்சா கடத்தினார்கள் என்ற வழக்கும் போடப்பட்டுள்ளது, ஏன் உயிர்காக்கும் மருந்துகளை கடத்தினார்கள் என்று கூட வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஒரு தோழர் 2010ம் ஆண்டு ஈழத்திலிருந்து தமிழகம் வருகிறார் அவரை கைது செய்து ஆவணங்கள் இல்லாமல் வந்தார் என்று இந்த சிறப்பு சித்திரவதை முகாமுக்கு அனுப்புகிறார்கள். வழக்கு நடக்கிறது வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராது என்பதை உணர்ந்து கேரளாவில் ஆஸ்த்ரேலியாவுக்கு செல்ல முயன்ற பொழுது பிடிக்கப்பட்ட அகதிகளுடன் கொண்டு சேர்த்து கேரளாவில் போலிஸிடம் ஒப்படைக்கிறார்கள், அங்கும் நீதிமன்றத்தில் எதிராக தீர்ப்பு வந்தபின் விடுதலை செய்யபப்ட்டவரை சிறை வாசலில் திரும்பவும் கைது செய்து கொண்டு வந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கிறார்கள். இப்படி சட்டபூர்வமில்லாத கட்டுபாட்டில் சிறப்பு முகாமில் வைக்கிறார்கள். இந்த சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு என்று தனியாக இவர்களுக்கு நிதி ஆதராமும் கேட்டு அதை இவர்கள் உபயோகித்து வருகிறார்கள்.

தங்களுடைய எல்லையற்ற அதிகார போதைகாகவும், நிதி ஆதாரங்களில் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும், மேலும் ஈழ விடுதலை போராட்ட வீரர்கள் விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி இந்தியாவில் தடை செய்வதற்கு வழிவகை செய்யவே இந்த சிறப்புமுகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பொழுது அரசு உத்தரவின்படி செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்கள் மூடப்பட்டு அவைகள் இரண்டையும் திருச்சி மத்திய சிறைச்சாலைக்குள் மாற்றும் ஆணையையும் பெற்று விட்டார்கள். இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்பது ஒன்று தான் க்யூ ப்ராஞ்ச் எனும் அதிகாரிகள் தங்களின் பிழைப்பிற்காக ஈழத்தமிழ் அகதிகளை கொடுமைப்படுத்தி தங்களின் வயிற்றை வளர்ப்பது தான்.


Tuesday, November 6, 2012

உள்ளூர் பொய் ஐநாவில் செல்லுபடியாகுமா

ஐநாவில் தோசை மாநாட்டு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன கொடுத்தார்கள் என்றால் “Beats of Bleeding Hearts" என்ற தலைப்பில் மொத்தம் 48 பக்கத்திற்கு ஓர் ஆவணமும் ஒரு சிடியும்.  ஆவணத்தின் முதல் பக்கம் கருணாநிதியின் படமும் தலைப்பும் அதன்பிறகு மூன்று பக்கத்து சமீபத்திய ஆத்ம நண்பர்கள் ஸ்டாலின், பாலு அவர்க்ள் தங்களின் தலைவரை பற்றி புகழ்ந்து ஒரு கடிதம். அதன்பிறகு 15 பக்கத்துக்கு ஒரு மோமோரண்டம் அதில் 8 பக்கத்துக்கு உங்க சொந்த புராணத்தை பாடிவிட்டு மிச்சம் இருக்கும் 7 பக்கத்தில் ஈழத்தமிழர்கள் மன்னிக்கவும் சிலோன் தமிழர்கள் பிரச்சனையை பேசி இருக்கிறீர்கள்(ஸ்டாலின் இன்று வரை சிலோன் தமிழர்கள் என்று தான் சொல்லுறாருப்பா). அதன் பிறகு ஐ.நா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்று நான்கை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

இதில் எது பொதுவாக்கெடுப்பை குறிக்கிறது என்று தெரியவில்லை. கொடுக்கிற அத்தனை பேட்டியிலும் ஐநாவிடம் பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தினோம் என்கிறீர்கள். என்ன மாயமோ தெரியலை எங்க கண்ணுக்கு தெரியாதா பொதுவாக்கெடுப்பு ஐநா கண்ணுக்காவது தெரியுமா???

அதன் பிறகு ஒரு 14 பக்கத்துக்கு அடி தகவல்களாக நீங்கள் மெமோரண்டத்தில் சொன்ன விசயங்களுக்கு ஆதாரங்களாக பல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். அதில் இலங்கையில் பாதிக்கப்பட்ட ஊடகத்துறையினர், அரசு சாரா மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கொடுத்து இருக்கிறீர்கள், இது தான் ஆவணத்தில் இருக்கும் உருப்படியான ஒரே விசயம்.

மொமோரண்டத்தில் உங்களின் வீரபிராதபங்களை வரிசைப்படுத்தி இருக்கிறீர்கள் அதில் தோசை மாநாட்டில் 14 தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு Beats of Bleeding Hearts ஆவணத்தில் தோசை மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களையும் 12 பக்கத்துக்கு இணைத்துள்ளீர்கள் அதில் நீங்கள் சொன்ன 14 தீர்மானத்துக்கு பதிலாக 11 தீர்மானம் தான் இருக்கிறது. இதில் மூன்றை ஏன் நீக்கியிருக்கிறீர்கள் என்பதை பார்த்தாகிவிட்டது. 


ஆனால் ஆவணத்தின் தொடக்கத்தில் நீங்கள் சொன்ன 14 தீர்மானம் எங்கே என்று ஐநா அதிகாரிகள் தேடப் போகிறார்கள், பார்த்து அவர்களிடம் இந்த திருத்தத்தை சொல்லிவிடுங்கள், இல்லாவிடில் நீங்கள் இணைத்திருக்கும் தோசை தீர்மானம் தவறாக வேறு எதோ ஊசிப்போன உப்புமா தீர்மானத்தை இணைத்துள்ளீர்கள் என்று நினைத்துவிடப் போகிறார்கள் ஐநா அமைப்பினர்.  


தமிழகத்தில் நீங்கள் காலம் காலமாக சொல்லிவரும் பொய் பித்தலாட்டாங்களை ஐநா வரை கொண்டு போயிருக்கிறீர்கள். அவைகள் என்ன என்று விலாவரியாக பார்க்கலாம். 

இந்த ஆவணத்தில் நீங்கள் 1956ம் ஆண்டிலிருந்து ஈழமக்களுக்காக போராடி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். திமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு பெயர் போராட்டம் இல்லை, ஈழமக்களுக்கான ஆதரவு என்று சொல்லலாம். உங்களை பற்றி சொல்லும் பிரமான பத்திரத்தில்  "Dr. Kalaignar M. Karunanidhi, who has been raising his voice consistently for the rightful cause of Eelam Tamils from the year 1956, is also the Chairman of TESO (Tamil Eelam Supporters’ Organisation), started to mobilize national and international support for Eelam Tamils." (page 3 last para) இவ்வாறு கூறப்பட்டுள்ளது இதன் அர்த்தம் என்ன. டொசோ அமைப்பு 1956ல் ஆரம்பிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா. டெசோ ஆரம்பிக்கப்பட்டதையும் அதை இழுத்து மூடியதையும் அதன் பிறகு இப்பொழுது உங்களின் சொந்த தேவைக்காக இப்பொழுது உயிர் கொடுத்ததையும் ஏன் சொல்லவில்லை?


மெமோரண்டத்தின் ஐந்தாம் பக்கத்தின் கடைசி பத்தியில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறீர்கள். 1976ம் ஆண்டு உங்கள் ஆட்சி பறிபோனதற்கு காரணம் ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் ஆதரவாக நின்றதால் தான் என்று. அப்படி என்றால் பாளையங்கோட்டை சிறையில் பாம்புக்கு பல்லிக்கும் நடுவில் இருந்தது மிசாவினால் இல்லையா, இல்லை மிசாவில் ஜெயிலுக்கு போன ஸ்டாலின் அவர் இவர் என்று பலர் மிசாவை தங்கள் பெயருக்கு முன்னால் சேர்த்து  மிசா சோத்துமூட்டை, மிசா முட்டைகோசு, மிசா பொரிச்ச வெங்காயம், என்று போட்டு கொண்டு அழைகிறார்களே அது எல்லாம் பொய்யா. 1975ல் உங்கள் ஆட்சியை கலைத்தற்கு காரணமாக மத்திய அரசு ஊழல் என்று சொன்னதே அதுவும் உண்மையில்லையா?? மிசா அமுல்படுத்தப்பட்டது அதற்கு மத்திய அரசுக்கு ஒத்துழைக்காமல் இருந்தது அப்புறம் மிசாவினால் அடிபட்டது, ஏன் சிட்டிபாபு உயிரிழந்தது என்று அனைத்தும் நடக்கவில்லை என்பதால் தான் 1980 தேர்தலில் இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்தீர்கள் அல்லவா, நாங்கள் தான் மறந்துவிட்டோம், மிசா என்றால் அது எதோ பிசா என்ற சாப்பிடும் பொருள் என்பதை...

1991ம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது மத்திய அரசு விடுதலை புலிகளை தடுக்க தவறியதாக காரணம் சொல்லியது என்னவோ உண்மை தான். ஆனால் அன்று நீங்கள் கொடுத்த பத்திரிக்கை அறிக்கைகளில் ஜெயலலிதாவும், ராஜிவ் காந்தியும் சேர்ந்து தான் என் ஆட்சியை கலைத்தார்கள் என்று சொல்லியிருக்கிறீர்களே. அப்படியென்றால் அன்று பொய் சொன்னீர்களா இல்லை இப்பொழுது பொய் சொல்கிறீர்களா. எனென்றால் உங்கள் ஆட்சிகலைக்கப்பட்ட பொழுது, ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா தனது பதவியை தூக்கி எறிந்தார், மத்திய அரசு தன்னை கேட்காமல் பொய் காரணம் சொல்லியது என்று அவருக்கு இருக்கும் நேர்மை உங்களிடம் இல்லையே. ஜெயலலிதாவும் ராஜிவ் காந்தியும் பிரதமர் சந்திரசேகரை மிரட்டி உங்கள் ஆட்சியை கலைத்தார்கள். அதுவும் நீங்கள் 1980ல் எம்.ஜி.ஆரின் ஆட்சியை இந்திராகாந்தியுடன் சேர்ந்து கலைத்தீர்களே அதே போல் தானே 1991ல் ஜெயலலிதா சந்திரசேகருடன் கூட்டு சேர்ந்து உங்கள் ஆட்சியை கலைத்தது நடந்தது. இதை நீங்களே அன்று அறிக்கையில் ஜெயலலிதா தான் காரணம் என்று சொல்லிவிட்டு, இன்று ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று வாய்கூசாமல் எப்படி பொய் சொல்ல முடிகிறது உங்களால்???


1983 ஜூலை கலவரத்திற்கு பிறகு தேசிய அளவில் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக நீங்களும், பேராசிரியர் அன்பழகனும் சட்டசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாக சொல்கிறீர்கள், அப்பொழுது சட்டசபையின் உங்களுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் தான் இருந்தார்களா என்ன? மொத்தம் 37பேர் அல்லவா இருந்தார்கள். 1980 நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டீர்கள் அதில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அந்த தெம்பில் தானே சட்டசபைக்கு தேர்தல் வைத்தால் ஜெயித்துவிடலாம் என்று 1980ல் எம்.ஜி.ஆரின் ஆட்சியை கலைத்தீர்கள். அதன்பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆரே வெற்றி பெற்றார்,  ஆனாலும் உங்களுக்கு 1983ம் ஆண்டு மொத்தம் 37 சட்டசபை உறுப்பினர்களும், 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்த பொழுது நீங்களும் பேராசிரியர் அன்பழகன் மட்டும் பதவியை இராஜினாமா செய்ததால் எந்த மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தீர்கள். ஒட்டுமொத்தமாக சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் இருக்கும் அனைத்து உறுப்பினர்களையும் இராஜினாமா செய்ய சொல்லியிருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்த்து இருக்கும் இல்லையே அதை செய்யாமல் நீங்களும் அன்பழகனும் மட்டும் இராஜினாமா செய்துவிட்டு கொல்லை புற வழியாக சட்டமேலவை உறுப்பினராக அதே 1983ம் ஆண்டு பதவி ஏற்றுக் கொண்டீர்களே. இதை எல்லாம் அனைவரும் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தீர்களா என்ன??



ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக செய்துள்ளீர்கள் ஐ.நாவுக்கு கொடுத்த ஆவணத்தில் மனித சங்கிலி நடத்தியதை சொன்ன நீங்கள், நீங்க இருந்த கின்னஸ் சாதனை உண்ணாவிரதத்தை கூறிப்பிடவில்லை, வாழ்க உண்ணாவிரதம் வளர்க உங்கள் குடும்பம்.

Monday, November 5, 2012

ஊசிப்போன தோசை தீர்மானம் ஐநாவில் ஓப்படைப்பு



தலிவரே நீங்க டெசோ மாநாடு நடத்துனப்பவே தெரியும் வழக்கம் போல தயிர்சாதத்துக்கு தொட்டுக்க புடலங்கா கூட்டு வைச்சு சாப்பிட சொல்ல போறீங்கனு. டெசோ மாநாட்டில் பலநாட்டு தலைவர்களை அழைத்து வந்தீர்கள் ஏன் அம்ன்ஸ்டியில்  இருந்து கூட ஆளை கூட்டிட்டு வந்தீங்க ஆனால் இயற்றின தீர்மானம் தான் ஒன்றும் சரியில்லாமல் இருக்கு. அதாவது ஊரை கூட்டி தலைவாழை இலை போட்டு விருந்தில் சரியாக சாப்பாடு போடாமல் சட்டிய கவுத்துட்டீங்க தலீவரே.

சரி போனா போகுது ரொம்ப நாள் கழிச்சு ஈழதமிழர் விசயத்தை பேசுறீங்களே நல்லது என்று நினைத்து விட்டால். அந்த தீர்மான்ங்களை ஐ.நாவின் பொது செயலாளர் பான்கீ மூனிடம் கொடுக்க போறோம் என்று சொன்னீர்கள். சரி அதையாவது முழுமையாக செய்வீர்கள் என்று பார்த்தால் அதிலும் திருகுதாளம் போட்டிருக்கிறீர்கள். அத்தனையும் செய்துவிட்டு தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொதுவாக்கெடுப்பு(Referendum) வேண்டும் என்று பேட்டி கொடுக்கிறீர்கள். ஆனால் ஐநாவில் கொடுக்கப்பட்ட அறிக்கையிலோ இல்லை தீர்மானத்திலோ பொதுவாக்கெடுப்பு எனப்படும் Referendum என்ற வார்த்தையாஇயே காணோம்.

நான்காவது தீர்மானத்தில் இந்திய அரசை நோக்கி ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் தீர்வை தேர்ந்தெடுத்துக்கொள்ள ஐநாவில் இந்தியா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறீர்கள். இதில் பொதுவாக்கெடுப்பு என்று சர்வதேச அரசியலில் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை பிரயோகம் இல்லை. ஐநாவிடம் நேரடியாக கூட இந்த கோரிக்கையை வைத்திருக்கலாம் ஆனால் இந்திய அரசிடம் இந்த கோரிக்கையை வைக்கிறீர்கள். இந்தியா இலங்கை தனது நட்பு நாடு அதற்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று பட்டவர்த்தனமாக அறிவித்த பிறகும் நீங்கள் இந்த கோரிக்கையை இந்தியாவிடம் வைக்கிறீர்கள். இப்படி டெசோ மாநாட்டில் 14 தீர்மான்ங்களை இயற்றிவிட்டு அதையும் Beats of Bleeding Hearts எனும் ஐநாவிடம் கொடுத்த ஆவணத்தில் 14 தீர்மான்ங்கள் என்று தம்பட்டம் அடித்துவிட்டு தீர்மான இணைப்பில் 11 தீர்மான்ங்களை தான் ஐநாவிடம் கொடுத்திருக்கிறீர்கள். மீதம் உள்ள மூன்றும் பயண வழியில் தொலைந்திருக்க வாய்ப்பில்லை, அவை தேவையில்லாத தீர்மான்ங்கள் என்று முடிவெடுத்து இப்பொழுது நீக்கியிருக்கிறீர்கள் இப்படி தேவையில்லாத தீர்மான்ங்களை ஏன் சர்வதேச தலைவர்களை கூப்பிட்டு நிறைவேற்றினீர்கள்.

அவைகளில் ஒன்று உங்கள் சொந்த தேவையான(இதை தான் தமிழின அரசியல் என்று சொல்கிறீர்கள்) ஜெயலலிதாவை கண்டித்த தீர்மானம், இரண்டாவது இந்தியா இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க கூடாது என்று வலியுறுத்திய தீர்மானம். இவை இரண்டும் தேவையில்லாதது தான் எனபதை அன்று சர்வதேச தலைவர்கள் இருக்கும் பொழுது உணராத நீங்கள் இன்று உணர்ந்து நீக்கியிருக்கிறீர்கள். ஆனால் மூன்றாவதாக ஐக்கிய நாடுகள் அவையினால் வரையறுக்கப்பட்ட அகதிகள் நடைமுறையை ஈழத்தமிழர்களுக்கும் வழங்க வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தும் தீர்மானத்தை எடுத்துவிட்டீர்கள். இந்தியா ஐ.நாவின் அகதிகள் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்பது ஐநாவுக்கு தெரியும் ஆனால் இந்தியாவில் பன்னாட்டு அகதிகள் எப்படி நட்த்தப்படுகிறார்கள் என்பது தெரியவாய்ப்பில்லை. ஆனால் அதை தெரியப்படுத்தும் தீர்மானத்தை இந்தியாவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டும் தீர்மானத்தை ஏன் மறைத்துவிட்டீர்கள், இப்படி மறைப்பதற்கு சர்வதேச தலைவர்களை கூப்பிட்டு இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டாமே. நீங்கள் உங்களின் சொந்த தேவைக்காகவும் சொந்த அரசியலுக்காகவுமே இதுவரை அரசியல் செய்து வந்திருக்கிறீர்கள் அதுவும் இந்தியாவின் சர்வதேச வல்லாதிக்க போக்கிற்க்கு தலைகுனிந்தே பணிவிடை செய்திருக்கிறீர்கள் என்பதை சுட்டிகாட்ட இது ஒன்று போதுமே தலீவரே.

டெசோ தீர்மானத்தில் 9வது தீர்மானமாக மிக அழகாக This Conference also urges that U.N.Protocol on Refugees should be followed in India.  தெளிவாக குறிப்பிடும் இந்த தீர்மானத்தை நீக்க வேண்டிய தேவை என்ன என்பது புரியவில்லை தலீவரே. உலகநாடுகள் முன்பாக இந்தியாவின் ஈழ அகதிகள் குறித்தான துரோகத்தை சுட்டி காட்ட விரும்பவில்லையா. ஒரு நாட்டின் குடிமகன் என்பவன் அந்நாடு செய்யும் தவறுகளை சுட்டிகாட்ட வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான கிருஸ்ணய்யர் அவர்களே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உங்களுக்கு ஏனோ ஈழ தமிழ் அகதிகளை பிச்சைகாரர்களை விட கேவலமாக நடத்துவதை உலக அரங்கில் சொல்ல முடியவில்லை. இதை தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம் அண்ணா திரவிட நாடு கோரிக்கையை தற்காலிகமாக தள்ளி வைத்தார் ஆனால் நீங்களே அதை ஊத்திமூடி புதைத்து விட்டீர்கள். அதே போல் ஈழப்பிரச்சனை மிகவும் அதிகமாக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படுத்திய பொழுது எல்லாம் இந்திய தேசியத்தின் அடிமையாக அதுவும் நீங்கள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றிய பொழுது எப்படியெல்லாம் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சிகளை அடக்கி இந்திய தேசியத்திற்கு சேவை செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.



டெசோ மாநாட்டு தீர்மான்ங்களில் 7 ஐநாவை நோக்கியும், 5 இந்தியாவிடம் நோக்கியும், மீதம் இரண்டில் ஒன்று இலங்கை அரசு டெசோ மாநாட்டை பார்த்து பயந்து, ஈழத்தமிழ் தலைவர்களை வரவிடாமல் செய்துவிட்டது என்றும், கடைசியக உங்கள் சொந்த அரிப்புக்கு சொரிந்து கொள்ள ஜெயலலிதாவை கண்டித்த்தை தவிர வேறு என்ன இருக்கிறது தலீவரே. ஏன் ஐநாவிடம் கொடுத்த முகப்பு கடித்த்தில் கூட பொதுவாக்கெடுப்பை பற்றி பேசாமல் இன்று ஊடகங்களுக்கு பேட்டிகொடுப்பது மட்டும் பொதுவாக்கெடுப்பு என்று சொல்லிகொண்டு. உப்பு சப்பு இல்லாத ஒரு ஆவணத்தை ஐநாவிடம் கொடுக்கப்பட்ட்தால் என்ன பயன் இதற்கு உங்கள் பிள்ளையும் அவரின் சமீபத்திய ஆத்ம நண்பரும் ஒரு சுற்றுலா சென்று வந்தார்கள் என்று சொன்னாலும் சரி என்று ஏற்றுக் கொள்ளலாம்.