Monday, June 30, 2014

With you With out You திரையிடல் நிகழ்வில் நடந்த உண்மைகள்.



நம் தமிழக கிராமங்களில் வீடுகளின் திண்ணையில் ஒரு மண்பானையில் தண்ணீரும் எடுத்து பருக ஒரு டம்ளரும் இருக்கும். யார் வீட்டு கதவை தட்டி தண்ணீர் கேட்டாலும் கொடுப்பார்களே ஏன் இப்படி வெளியில் வைத்திருக்கிறார்கள், இது எதற்காக என்ற கேள்வி சிறு பிள்ளையில் வந்த பொழுது எனது அய்யாவிடம்(தாத்தா) கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் நம்மை பிடிக்காதவர் நம் வீட்டை கடந்து செல்லும் பொழுது அவருக்கு தாகம் ஏற்பட்டால் வீட்டின் கதவை தட்டிக் கேட்க கூச்சப்படுவார், ஆனால் இப்படி வெளியில் வைத்துவிட்டோம் என்றால் அவரே எடுத்து குடித்துவிட்டு போகலாம், நம் வீட்டை கடக்கும் பொழுது அவர் தாகத்துடனே கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்றார். இப்படி உலகிற்கே விருந்தோம்பலை கற்று கொடுத்த நமக்கு இன்று விருந்தோம்பல் கற்று கொடுக்கப்படுகிறது. ஆம் பிரசன்ன விதகனேவின் திரைப்படம் அதன் பின்னாலான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இன்றைய இந்துவில் விருந்தோம்பலைப் பற்றி நமக்கு வகுப்பு வேறு எடுத்திருக்கிறார்கள். 

பிரசன்ன விதகனேவின் With You With out you பற்றிய மதிப்பீடுகளை விட அந்த படத்தை வைத்து நடத்தப்பட அரசியலே மிகப் பெரும் அளவில் இருக்கிறது. இந்தபிரச்சனையின் ஆரம்பத்தில் இருந்தே இதை பார்த்துக் கொண்டிருந்தவன் என்பதால் இதை பற்றிய தகவல்களை அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டியதுள்ளது. இந்த படம் PVR திரையரங்குகளில் 17 ஊர்களில் இந்தியா முழுவதும் ஜூன் 20ம் தேதி வெள்ளிக் கிழமை திரையிடப்பட்டது. சென்னையிலும் திரையிடப்பட்டது ஞாயிற்றுக் கிழமை வரை யாரும் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை, 

ஆனால் திடீரென்று தமிழ்தேசிய பாசிசவாதிகள் என்று ஒர் அவலக்குரல் பெருங்குரல் எடுத்துக் கூவியது என்ன படம்? ஏது படம்? யார் படம்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே உடனே வளைத்து வளைத்து பாசிச முத்திரையை குத்தியது அந்த குரல். சரி இயக்குனரை அனுகுவோம் என்ன பிரச்சனை என்று பார்ப்போம் என்ற நிலையில் தான் சரவணன் குமரேசன் இயக்குனரை தொடர்பு கொண்டார் அப்பொழுது தான் திரப்படத்தை திரையிட அருண் என்பவர் முயல்வதாக அறிகிறார். அருணை நான் தொடர்பு கொண்டேன் அப்பொழுது இவர்கள் தனி சென்சார் நடத்துகிறார்கள் என்று அந்த அவலக்குரல் திரும்பவும் கூவியது. இது இவர்கள் நடத்தும் நாடகமாக தெரியக்கூடாது என்று இந்த கூக்குரல் அவ்வளவே இது. சரி திரைப்படத்தை பார்க்க போகலாம் என்று சென்றோம் படம் பார்த்தோம் அங்கு யாரும் யாரையும் அடிக்கவில்லை ஒரு சிறு விவாதம் தான் நடந்தது அதுவும் ஒரு தாந்தோன்றித் தனமாக தான் சொன்னால் அதை வேதவாக்கு என்பது போல் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஒருவர் தராதரம் இல்லாமல் குதித்ததாலேயே நடந்தது. அதில் முழுமையாக சம்பந்தப்பட்டவன் என்பதால் அதை முழுமையாகவே எழுதுகிறேன், படத்தை குறித்த அனைத்து சர்ச்சைகளிலில் இதுவும் ஒன்று என்பதால் நான் நேரிடையாகவே திரு. ஜெயபாலனை எதிர்த்து திட்டினேன் என்பதால்.

படம் ஆரம்பித்து விளக்குகள் எல்லாம் அனைத்த பிறகு தான் இவர் திரையரங்கிற்குள் வந்தார் அப்பொழுது நானும் சரவணனும் அருகிலேயே அமர்ந்திருந்தோம். அதன் பிறகு படம் முடிந்தது, திரையரங்கில் சிலர் கை தட்டினார்கள் மற்றவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தனர் அப்பொழுது ஒரு அவலக்குரலுடன் கூக்குரலிட்டு இயக்குனரை பெயர் சொல்லி அழைத்து படம் சூப்பர் சூப்பர் என்று கூவினார் ஜெயபாலன். இதன் அரசியல் காரணம் உணர்ந்தவனாக அதை விமர்சிக்க கடமைப்பட்டுள்ளேன், அதாவது இவர் படம் நன்றாக இருக்கிறது என்று அங்கு வந்திருந்த அனைவரும் முன்னாலும் அங்கீகரிக்கிறாராம் அதன் பிறகு யாரும் பேசத் தேவையில்லை என்பது போல் ஒரே குரலாக கத்தினார். 

அதன் பிறகு இயக்குனருடன் கலந்துரையாடல் தொடங்கியது, அப்பொழுது இயக்குனரிடம் முதலில் ஒருவர் பாராட்டை தெரிவித்தார், அடுத்து ஒருவர் படத்தின் பின்னனி இசையில் தமிழ் பாடல்களே ஒலிப்பதுபோல் பதிவு செய்யப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு இது மலையகத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டது என்று ஜெயபாலன் பதில் கொடுத்தார். யார் இந்த உரிமையை கொடுத்தது இயக்குனரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் பதில் அளிக்க வேண்டும் அதைவிடுத்து இவர் யார், இந்த படத்தில் லைட் பாய் வேலை பார்த்தாரா இல்லை உதவி இயக்குனராக பணிபுரிந்தாரா. 

இயக்குனருடன் கலந்துரையாடல் எனும் பொழுது இயக்குனர் பேசட்டுமே என்று இல்லாமல் இவர் உள்ளே புகுந்து பதில் அளித்தார். அடுத்த கேள்வியை இன்னொரு தோழர் கேட்ட பொழுது மீண்டும் தனது அவலக்குரலை உயர்த்திக் கொண்டு பதில் அளிக்க முற்பட்ட பொழுது தோழர் சரவணன் குமரேசன் இது இயக்குனருடனான கலந்துரையாடல் அவர் பதிலளிக்கட்டும் நீங்கள் அமைதியாக இருங்கள் என்றார். அதற்கு நீ யார் வாயை மூடிக்கொண்டு உட்கார் என்றார் இந்த பிதாமகர். இவர் தான் அது ஜனநாயகம் இல்லை இது ஜனநாயகம் இல்லை என்று புலிகள் இயக்கத்தை நோக்கி விமர்சனங்களை வைத்தவர். இவரின் ஜனநாயகம் என்ன என்ற கேள்வி இங்கு பல்லிளித்தது. 

ஒரு திரையிடல் நிகழ்வில் இவரும் படத்தை பார்க்க ஒரு பார்வையாளராக வந்துள்ளார், நாங்களும் சென்று இருக்கிறோம் ஜனநாயகப்பூர்வமாக இயக்குனர் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார், பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கின்றனர் இத்தகைய ஒரு இடத்தில் தான் தோன்றித் தனமாக நான் சொல்வேன் நீங்கள் எல்லாம் கேட்டே ஆகவேண்டும் விட்டேத்தியாக குதித்த ஜெயபாலனை மிகவும் காட்டமாக திட்டினேன். உடனே என்னை ரவுடி மாதிரி பேசுகிறாய் என்றார், கவனிக்கவும் அனைத்து வாதங்களும் பிரதி வாதங்களும் ஆங்கிலத்திலேயே நடந்தது நான் எந்த நாகரீகமற்ற வார்த்தைகளையும் உபயோகிக்கவில்லை. இந்த சமயத்தில் அதுவரை ஜெயபாலனுடன் நின்ற லீனா காணாமல் போனார் சிறிது நிமிடங்கள், அப்புறம் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர் அருண் ஜெயபாலனை உட்காரச் சொன்னார் அப்பொழுது பின்னால் திரும்பி இவரின் சொந்த கதை சோகக் கதை எதையோ குறிப்பிட்டு அதையெல்லாம் நீங்கள் தட்டிக் கேட்டீர்களா என்றார். அதை இங்கு விவாதிப்பது என்றால் விவாதிக்கலாம், உங்கள் சொந்த பிரச்சனையை பேசவா நாங்கள் வந்திருக்கிறோம் என்று சரவணன் பதில் சொன்னவுடன் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். 

ஒரு புறம் இந்த பேச்சுகள் நடக்கும் பொழுதே இயக்குனருடனான கலந்துரையாடல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது யாரும் அவரை அடிக்கவோ இல்லை அவரை திட்டவோ செய்யவில்லை தங்களிடம் தோன்றிய ஐய்யப்பாடுகளையே கேள்வியாக கேட்டுக் கொண்டு இருந்தன்ர். இயக்குனர் கெளதமன் சக இயக்குனராக ஒரு கேள்வி இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா என்ற கேள்வியை கேட்டார், அதற்கு நான் சிங்களவனாக எனது பார்வையை சொல்லியுள்ளேன், ஆனால் அரசு தமிழ் மக்களின் பார்வையில் நின்று அவர்களுக்காக யோசித்தால் தான் மீள் கட்டமைப்பு என்பது சாத்தியமாகும் என்றார். கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் பிரசன்ன அளித்த பதில் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் சொன்ன பதிலில் இனப்படுகொலை என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்காமல் இனி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே.  இதன் அரசியல் சர்வதேச அரங்கில் Genocide எனும் வார்த்தையை G Word என்றே உபயோகிப்பார்கள், அதைப் போன்றே இயக்குனர் பிரசன்னாவின் பதிலும் அமைந்தது. 

இதன் பிறகு மேலும் சில தோழர்கள் கேள்விகள் கேட்க முயன்ற பொழுது நேரம் இல்லை என்று விலகிச் சென்றார்கள். அப்பொழுது பின்னால் இருந்து பெண்ணின் கூக்குரல் என்னவென்று பார்த்தால் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர் ஒரு சிலரிடம் என்ன என்று பார்க்கலாம் என்று சென்ற பொழுது அதில் ஒரு பெண் நான் ஜெயபாலனின் மனைவி என்று கூறினார். சரி இதற்கு மேல் அங்கு செல்வது தேவையில்லாதது என்று நானும் சரவணனும் வெளியேறிவிட்டோம். இந்த சமயத்தில் இயக்குனர், லீனா மணிமேகலை, ஜெயபாலனும் வெளியில் வந்தார்கள் சில தோழர்கள் கேள்விகள் எழுப்பினர் அதற்கு பதில் சொன்னாரா இல்லையா என்பது தெரியவில்லை. அனைவரும் கிளம்பிச் செல்வதில் ஈடுபட்டார்கள். வைக்கப்பட்ட கோரிக்கை என்பது புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லும் சப்டைட்டிலை மட்டும் நீக்க முடியுமா என்பது தான் இது படத்தில் இரண்டு இடங்களில் வருகிறது என்பது மட்டும் தான் இது கோரிக்கையாக தான் வைக்கப்பட்டது. அப்படி நீக்காவிட்டால் நாங்கள் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்ற வசனங்கள் எல்லாம் வரவும் இல்லை. 

மேலும் கேள்வி பதில்கள் நடக்கும் பொழுதே காவல்துறை உள்ளே வந்தது, ஒரு தனியார் இடத்தில் தனியாரின் அனுமதியில்லாமல் காவல்துறை நுழைய முடியாது அப்படியிருந்த பொழுதும் காவல் துறை உள்ளே வந்தது நிகழ்ச்சியை நடத்தியவர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இது நிகழ்வை நடத்தியவர்கள் அசம்பாவிதம் ஏற்படும் என்று நினைத்து காவல்துறையை அணுகி இருக்க வேண்டும், அல்லது வேண்டும் என்றே வந்திருந்தவர்களை மிரட்டும் நோக்கத்துடன் காவல்துறையை உள்ளே அனுமதித்து இருக்க வேண்டும். அவர்கள் எந்த நோக்கத்துடன் செய்திருந்தாலும் சரி இது வரை தமிழ் தேசியக் கூட்டங்களில் எங்கும் எந்த அடிதடியும் ஏற்பட்டதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் பல இடங்களில் பல இயக்கங்கள் ஒருவரின் கருத்துக்கு நேர் எதிராக நிற்கும் இயக்கங்கள் அனைவரும் ஓரிடத்தில் இணைந்து நின்று போராடி இருக்கிறார்கள் எங்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்தது இல்லை ஆனால் இந்த கலை, இலக்கியம், இலக்கணம் என்று வியாக்கியானம் பேசுபவர்கள் நடத்தும் கூட்டங்களில் மட்டும் தான் இத்தகைய கூத்துகள் நடைபெறும், ஏன் பொது மக்களுக்காக நடத்தப்படும் புத்தக கண்காட்சிகளில் கூட கட்டி பிடித்து உருண்டு சண்டை போட்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டு. 

ஆனால் இங்கிருக்கும் பலர் இதை உணராமல் எதோ தமிழ் தேசியர்கள் தான் குற்றமிழைத்தவர்கள் போல் பிதற்றுகிறார்கள், இதை பார்த்து கலையை ஒரு போராட்ட வடிவமாக செய்து வரும் நமது தோழர்களும் இவர்களை நோக்கி எந்த கேள்வியையும் எழுப்பாமல் நம்மை நோக்கியே விமர்சனங்களை வைக்கிறார்கள். இந்த நிகழ்வில் யாரும் யாரையும் அவமானப்படுத்த வில்லை, வேண்டுமென்றால் நான் ஒருவன் மிகவும் கோபமாக ஜெயபாலனை நோக்கி Who the hell are you to tell us to shut up, You are also guest, I am also a guest என்று கோபமாக கேட்டேன், இதற்கு தான் நான் ரவுடி மாதிரி பேசுகிறேன் என்றார். ஜனநாயகப் பூர்வமாக யாரிடம் கேள்வி கேட்கப்படுகிறதோ அவர் பதில் சொல்லட்டும் நீங்கள் அமைதியாக இருங்கள் என்று தான் சொல்லப்பட்டது. ஒரு பைத்தியம் போல் அன்றிலிருந்து இன்று வரை அவர் பிதற்றி திரிகிறார் கலை இலக்கிய நண்பர்கள் அவரின் பைத்தியத்திற்கு எதை தின்றால் தெளியும் என்று சொல்லிக் கொடுங்கள். தமிழ் தேசியம் பேசுபவர்கள் நாகரீகத்தையும் விருந்தோம்பலையும் தாங்கள் பேசும் தமிழுடனே வாழ்ந்து உணர்ந்து கொண்டவர்கள். 

(ஜெயபாலனுடன் நடந்த விவாதத்தின் போது எடுக்கப்பட்ட கானொளி, அவர் பக்கத்தில் அடிக்க யாரும் செல்ல வில்லை என்பது தெளிவாக தெரியும்)


கடைசியாக சொல்ல விரும்புவது அடாவடி சென்சார் என்று இவர்கள் கூறுவதற்கான பதில் “தேன்கூடு, எல்லாளன்” போன்ற படங்கள் இவர்களுக்கு கலைவடிவமாக தெரியவில்லையா இந்த படங்களை மக்களுக்கு திரையிடக் கூடாது என்று சென்சார் போர்டு சொல்கிறது அதற்கு எதிர்வினையாற்றுவதில்லை இவர்கள். ஆனால் இந்த அரசு எம் மக்கள் சார்பான தகவல்களை கலை வடிவில் சொன்னால் அனுமதி மறுக்கிறது ஆனால் அரசாங்கத்துக்கு ஆதரவான படங்களை எந்த வடிவில் சொன்னாலும் அனுமதிக்கிறது இந்த நிலை இருப்பதனாலே இங்கே சிலபடங்களை நோக்கியும் அதன் இயக்குனர்களை நோக்கியும் ஏன் எப்படி என்று கேள்வி எழுப்ப வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. உண்மையான கலையை நேசிப்பவர்கள் இதைப் போன்ற எத்தகைய படங்களும் வெளிவர எந்த சென்சாரும் அனுமதிக்க தேவையில்லை என்று போராடட்டும்.  
 

குறிப்பு : ஊடகங்கள் கூறுவது போல் யாரும் யாரையும் அடிக்கவில்லை. 

Sunday, June 8, 2014

வீரமணி எனும் எஜமானன்...

தோழர் அதி அசூரனுக்கு ஒரு திறந்த மடல்...

தோழா..

வீரமணி ஓர் வாக்கியம் சொன்னவுடன் அனைத்தையும் உடைத்து எறிந்துவிட்டு பொங்குகிறீர்கள். நல்லாத் தான் இருக்கு ஆனால் இந்த பொங்கல் இத்தனை ஆண்டுகாலம் தமிழரின் மீட்சி தான் முக்கியம் அதைத் தவிர வேறு எதையும் பற்றி யோசிக்க வேண்டிய தேவை இல்லை என்று பெரியாரை இகழ்ந்தவர்களுடன் கூட நின்ற பெரியாரியவாதிகளை போற்றும் வகையில் இல்லாமல் மற்றவர்களை இகழும் முறையில் இருக்கிறது உங்கள் பதிவு. இப்படி எனக்கு தோன்ற காரணம் ஏன் என்றால் பெரியார் தமிழின மீட்சிக்காக போராடியவர் என்பதை நீங்களும் அறிவீர்கள் நானும் அறிவேன். ஆனால் அவர் வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டியவர் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் இந்தியம் பிடித்துக் கொண்டது போல் தெரிகிறது.

தன் கடவுள் மறுப்பு கொள்கையோ இல்லை பகுத்தறிவு கொள்கையோ சுயமரியாதை கொள்கையோ அதற்கு எதிரானவர்களுக்கு நமது பொது எதிரியினால் ஒருவருக்கு பிரச்சனை என்றால் யாரும் கூப்பிடாமல் அவர்களுக்காக ஓடோடிச் செல்வார் பெரியார் அதன் கீழாகவே குன்றக்குடி அடிகளாருக்காக ஓடியதும், அதைப் போலவே சென்னை சர்வகலா சாலையில் தீவிர ஆத்திகரான மறைமலை அடிகளின் புத்தகம் “அறிவுக் கொத்து” எனும் நூலுக்கு எதிராக செயல்கள் நடந்த பொழுதும் யாரும் கூப்பிடமாலேயே ஓடியதும்..

ஆனால் நீங்கள் இன்று பெரியாரை ஒரு ரசிக மன்ப்பான்மையுடன் நெருங்குகிறீர்கள் என்று நினைக்கிறேன். பெரியாரிய கொள்கை தான் முக்கியம் அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று பேசியது போல் இருக்கிறது தங்களின் திராவிட மூலசூத்திர கட்டுரை.. உங்களைப் போன்ற சமயத்திற்கு ஏற்றார்போல் கொள்கையை மாற்றிக் கொள்ளும் நிலைப்பாடினால் தான் இன்று திராவிடம் கேள்விக்குள்ளாகி உள்ளது.

பெரியார் தனது கருத்திற்கு எதிரானவர் என்றால் கூட அவருக்கு தனது பொது எதிரியால் பிரச்சனை என்றால் ஓடோடிச் செல்வார் அவர்களுக்காக போராடுவார். ஆனால் அந்த பழக்கத்தில் ஒரு சதவீதம் கூட ஒப்புமை செய்ய இயலாத இந்த வீரமணி அதுவும் பேரறிவாளன் திராவிடர் கழக உறுப்பினர் இல்லை என்று அறிவித்தார் மிகப்பெரிய பிரச்சனைக்குள்ளான காலகட்டத்தில்.. அதுவும் வக்கீல் வீரசேகரன் அதே வழக்கில் கைது செய்யப்பட்ட பொழுது 1000 வழக்கறிங்கர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தியவர் இவர்,  ஆனால் பேரறிவாளன் எங்கள் இயக்கத்தினர் இல்லை என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது இவரால்.. பேரறிவாளனின் ஒட்டுமொத்த குடும்பமும் இன்றுவரை பெரியரை விடாமல் தொடர்ந்து கொண்டுள்ளது... பரவாயில்லை இது நடந்து பலகாலம் ஆகிவிட்டது..

ஆனால் தற்சமயம் தோழர் கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டபொழுது ஓடோடி வந்தாரா இந்த வீரமணி. நீங்கள் ஒத்த கருத்துள்ளவர்கள் என்று கூறுகிறீர்கள் இவர்களை ஆனால் பெரியாரின் பொது எதிரிக்கான போராட்டத்தில் நமது எதிரிக்கு துன்பம் என்றால் கூட ஓடோடிப் போகும் பெரியாரின் குணம் எங்கு போனது கொளத்தூர் மணி தோழர் கைது செய்யப்பட்ட பொழுது வீரமணிக்கு, நீங்கள் கூறும் ஒற்றுமையான கருத்தின் கீழ் கூட வரவில்லையே. ஜெயலலிதாவின் ஆட்சியில் கொளத்தூர் மணி தோழர் கைது மட்டுமில்லை, கருணாநிதியின் ஆட்சியில் சீமான், வைகோ போன்றவர்கள் 2009ம் ஆண்டும் அதற்கு பிறகும் கைது செய்யப் பட்ட நமது தோழர்கள் முதற்கொண்டு யாருக்காகவும் வரவில்லையே.. நமது தமிழருக்காக  ஒடுக்கப்படுவர்களுக்காக ஓடோடி செல்லும் பெரியாரின் குணம் இந்த வீரமணியிடம் வெளிப்பட்டதா எங்காவது.. இல்லையே???

அப்படியிருக்கும் பொழுது எப்படி இவரை ஒத்த கருத்துள்ளவர் என்று சொல்கிறீர்கள். இத்தனை வருடமும் தமிழ்தேசியம் என்று சொல்லி பெரியாரை தூற்றுபவர்களுடனும் சேர்ந்து நாம் நின்றது பெரியாரை விட தமிழினம் முக்கியம் என்பதால் ”தமிழ்நாடு தமிழருக்கே” என்பதால். ஆனால் அதை எல்லாம் நகைப்புள்ளாக்கி இன்று பெரியார் திடலின் எஜமான் தன் எஜமான புத்தியை விடாமல். அதாவது பிரச்சனையின் போது ஓடோடி வந்து ஒன்றிணைந்து தமிழினத்திற்காக நிற்காமல் ஓடி ஒளிந்த ஒருவரை ஒத்த கருத்துள்ளுவர் என்று சொலவது நகைப்பிற்கு இடமளிக்கிறது..

கொஞ்சம் வரலாற்றை பெரியாரின் ரசிகராக இல்லாமல் தமிழர்களின் மீட்சியின் கீழாக பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்களின் போராட்டத்தில் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லாமல் இதோ என் இடம் பெரியார் திடல் இருக்கிறது வாருங்கள் என்று விடும் எஜமான அரசியலின் அரைகூவல் கண்ணுக்கு தெரியும் அவரின் எஜமானிய புத்தியும் புலப்படும். அதுவும் ஈழவிடுதலையில் இருந்து தமிழ்நாட்டு தமிழர்களின் போராட்டம் அனைத்திலும் கள்ள மெளனம் சாதித்த ஒருவர் இன்று அடுத்த கட்டத்திற்கு காலை எடுத்து வைக்க ஒரு அங்குல இடம் கூட இல்லாமல் வெற்றிகரமான ஒரு போராட்டத்தை நாம் அனைவரும் இணைந்து நடத்தி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அது இவரின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை புரிந்து இவர் விடுத்த அரைகூவலை படிக்கும் பொழுதே புரியும்.. நாம் இதுவரை இணைந்து நின்று நடத்திய போராட்டங்கள் இனி நடை பெறக்கூடாது நம்மை பிரிக்கவேண்டும் என்ற எண்ண ஓட்டத்தின் கீழாகவே இந்த அரைகூவல்..

நம்மை பிறித்தாளும் சூழ்ச்சியே இவர் விடுத்திருக்கும் அரை கூவல் என்னை பொறுத்தவரை ஒரு பகுத்தறிவு வாதியாக, பெரியாரின் கருத்துகளை புரிந்து கொண்டவனாக இவரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நான் உட்பட மாட்டேன்.. பெரியாரை தூற்றுகிறவர்களுடன் இணைந்து நிற்கலாம் எனென்றால் அவர்கள் நாம் அமைக்கும் களத்தில் வந்து நின்று போராடுகிறார்கள், அவர்கள் அமைக்கும் களத்திலும் நமக்கான இடத்தை ஒதுக்குகிறார்கள்.. என்றாவது ஒரு நாள் அவர்கள் பெரியாரை புரிந்து கொள்வார்கள்,  ஆனால் வீரமணி நமக்கு பல துன்பங்கள் வந்த பொழுதும் வேடிக்கை பார்த்தவர் எனபதை மறந்துவிடாதீர்கள். பெரியாரிய கொள்கை என்பது அய்யகோ நம்மவர் பெரியாரை ஏற்றுக் கொண்டவர் அதனால் அவர் உணர்ந்துவிட்டார் என்று கழிவிரக்கம் கொளவது அல்ல... இன்று அரைகூவலிட்டவர்  நம் தோழர்கள் உமாபதி உட்பட இன்னும் பலர் சிறையில் இருக்கிறார்கள் அதற்காக ஏன் வந்து போராடவில்லை என்ற கேள்வியை எழுப்புங்கள், அது தான் பகுத்தறிவு.

தமிழினத்தின் மீட்சி என்பது வீரமணியை வெளியேற்றி பெரியார் திடலை தமிழர்களுக்கு சொந்தமாக்குவதே.. வீழ்ந்துவிடாதீர்கள் கொஞ்சம் பெரியாரின் ரசிகராக இல்லாமல் பெரியாராக சிந்தியுங்கள் Feel your self in Periyar's shoes...

ஒரு போராளி களத்துக்கு வருவான் ஆனால் என்றும் இதோ எனக்கு சொந்தமான இடம் இருக்கிறது அதை களமாக மாற்று என்று சொல்ல மாட்டான்.. அப்படி ஒருவர் சொன்னான் என்றால் அவன் எஜமானன்...

Wednesday, June 4, 2014

கம்பெனியாம் கம்பெனி மும்மூர்த்திகள் கம்பெனி


1948ம் வருடம் ஒரு கம்பெனி ஆரம்பித்தார்கள், ஆரம்பிக்கும் பொழுது பங்கு தாரர்கள் எல்லாம் ஒரே முடிவுடன் இருந்தார்கள் அது தான் தேர்தல் கலாட்டாவில் குத்தாட்டம் போட்டு அதன் மூலமாக பேட்டை ரவுடி ஆகி தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும் என்று கம்பெனியின் லாபமாக சொன்னார்கள். கொசுறாக தேசிய அளவில் கல்லா கட்டும் தேசிய தாதாவை தமிழ்நாட்டுக்குள் அழித்துவிடப் போகிறோம் என்று உதார் விட்டார்கள்.  

இதில் இவர்கள் வேறு இந்த தேர்தல் கலாட்டாவில் அடித்த கூத்து இருக்கே அது தான் இந்த கம்பெனியின் நகைச்சுவையை நமக்கு உணர்த்தும். 1952ம் வருட தேர்தலில் எங்கள் ஆதரவு வேண்டும் என்றால் தனித் தமிழ்நாடுக்கு ஆதரவு கொடுப்பவருக்குத் தான் எங்க ஆதரவு என்றார்கள். தேர்தல் கலாட்டாவில் கலந்துக்க போறோம் அப்படி கலாட்டா பண்ணி பேட்டை ரவுடியா வந்தால் தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும் என்று சொன்னவர்கள் மத்தவங்க எல்லாம் கலாட்ட பண்ணுங்க நாங்க வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கிறோம் என்று தங்கள் வீரதீர சொரூபத்தை வெளிக் காட்டினார்கள். தேர்தலில் பங்கு கொள்ளும் தைரியமும் இல்லை அதே வேளையில் கலாட்ட பண்ண கட்டை கடப்பாரை மட்டும் கொடுப்போம் என்றார்கள். 

இந்த தனித் தமிழ்நாடு நிபந்தனைக்கு சில கம்பெனிகள் ஒத்து கொண்டு இவர்களிடம் தனி தமிழ்நாட்டை ஆதரிக்கிறோம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றவுடன் இவர்கள் எந்த தேசிய தாதாவை அழிக்க கிளம்பினார்களோ அந்த தேசிய தாதாவிடம் சரணடைந்து அமைச்சர் பதவி எல்லாம் வாங்கினார்கள் அந்த சில்லு வண்டுகள். அந்த சில்லு வண்டுகளை கண்டிக்க கூட வக்கில்லாமல் கலாட்டா பண்ன வீர பராக்கிரமர்கள், அதற்கு அடுத்தும் பெரிய கலாட்டக்கல் எல்லாம் செய்யவில்லை 1967 வரை அதாவது கம்பெனி ஆரம்பித்து 1948ல் இருந்து 67 வரை 19 ஆண்டு காலம் உள்ளே இவர்களுக்கிடையே கச்சை கட்டி சண்டை போட்டு பங்கு தாரர்கள் பலர் தனியாக கம்பெனி ஆரம்பித்தது தான் மாபெரும் சாதனையாக இருந்தது.


1967ல் தேசிய தாதா தமிழ்நாட்டு மக்களை நீ என் மொழியை கத்துக்கணும் இல்லாவிடில் உன்னை உதைப்பேன் என்ற பொழுது தன்னெழுச்சியாக எழுந்த போராட்டத்தையும் போராட்ட மாணவர் தலைவர்களையும் வளைத்துப் போட்டு கண்ணீர் விட்டு அழுத்தது இந்த கம்பெனி உரிமையாளர்கள். நம்ம மக்களும் இவர்களின் கண்ணீரையும் கம்பலையையும் பார்த்து தேர்தல் கலாட்டாவில் இவர்களோடு சேர்ந்து நின்று தொலைத்தார்கள். அன்று பிடித்தது தமிழ் நாட்டுக்கு சளி.. அன்னைக்கு பிடிச்ச சளிதான் இன்னைக்கு வரைக்கும் எத்தனை கசாயம் குடிச்சாலும் விடமாட்டேன் என்கிறது.

நாம சளியோட அலைவது முடியாது என்று தான் இந்த டூபாக்கூர் கம்பெனியில் கணக்கு கேட்டு கொடுக்கலை என்று மூக்கை சிந்திட்டு வெளியில் ஓடி வந்தவங்களை எல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்று ஆதரித்து தேர்தல் கலாட்டா செய்து பேட்டை ரவுடி ஆக்கினோம். இதையெல்லாம் மறந்து தன்னால மக்களுக்கு ஏற்பட்ட சளியினால் தான் நம்மை மூக்கை சிந்தி தூக்கி போடுவது போல் தூக்கிப் போடுகிறார்கள் என்பதை உணராமல் இன்னைக்கு வரைக்கும் மக்களைப் பார்த்து நீ சளி வேண்டாம் என்று மஞ்சள் காமலையிடம் மாட்டிக்கிட்டாய், வாந்தி பேதி உனக்கு வரப்போகுது என்று சாபம் விடுகிறார்களே தவிர இது வரை எதாவது நல்லது பண்னுவார்கள் என்று பார்த்தால், 2009ல் பேட்டை ரவுடியாகவும் தேசிய தாதாவிற்கு அல்லக்கையாகவும் இருந்து 1,50,000 மக்களை தங்களின் குடும்பத்தினர் குத்தாட்டம் போட்டு காவு கொடுத்தனர்.

இதனை எல்லாம் உணர்ந்த மக்கள் மஞ்சள் காமலையோ இல்ல வாந்தி பேதியோ இருந்து தொலையட்டும் உன்னை பேட்டை ரவுடியாக மாற்றி மூக்கை சிந்திக்கிட்டே திரியமுடியாது என்று சொன்னால் இந்த வெங்காய வெண்ணை வெட்டி திருட்டு மும்மூர்த்தி கம்பெனிக்கு புரியவே மாட்டேன் என்கிறது. அது எப்படியா எந்த இடத்திலும் சொல்லாமல் கொள்ளாமல் கம்பெனி பெயரை மாற்றிவிட்டீர்கள்.
திருட்டு 
மும்மூர்த்தி(ஸ்டாலின்,அழகிரி, கனிமொழி) 
கம்பெனி என்று...

இனியும் மக்கள் உங்களை சகித்துக் கொள்ள மாட்டார்கள், எனென்றால் சளி தானே என்று அசிங்கமாக பொதுவில் மூக்கை சிந்திக்கிட்டே அலைய விரும்பவில்லையாம்.