Friday, May 9, 2014

அருந்ததியினரும் மபொசியுடன் தமிழ் தேசியமும்


மா.பொ.சிவஞானம் தாம் முதன் முதலில் பாளையக்காரர் கட்டபொம்மன் வரலாற்றை தமிழ்நாட்டுக்கு எடுத்துரைக்கிறார். கட்டபொம்மனின் தாய்மொழி தெலுங்கு என்றபொழுதும் ஒரு தமிழ்தேசியக்காரர் அவரை வெளிக்கொணருகிறார் போற்றுவோம். மா.பொ. சிவஞானம் சொல்லும் கதையில் கட்டபொம்மு ஒரு மிகப்பெரிய அரசன், ஆனால் கட்டபொம்முவைப் பற்றி வேறு கதைகளும் உண்டு அது அவன் ஒரு கொள்ளைக்காரன் என்றும். இங்கு கருப்பொருள் கட்டபொம்மன் யார் என்பது இல்லை, ஆனால் இந்த கட்டபொம்முவின் படையில் இருந்தவர்கள் யார் என்பது தான், அவர்கள் எப்படி மறைக்கபப்ட்டார்கள் என்பது தான். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இருக்கிறது. மா.பொ.சிவஞானம் எங்கிருந்து கட்டபொம்முவை கண்டுபிடித்தாரோ அதே நாட்டுப்புற பாடல்கள் மற்றும் ஆங்கிலேயே ஆவணங்களில் அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. 

கட்டபொம்முவின் படை மிகப்பெரும் விசயங்களை கொண்டது கட்டபொம்முவின் தானதிகாரி சுப்பிரமணியம் ஒரு பிள்ளை, தளபதி வெள்ளையத் தேவன் ஒரு தேவர், மற்றொரு தளபதி சுந்தரலிங்கம் ஒரு பள்ளர்(தேவேந்திரகுல வெள்ளாளர்) மற்றும் இவர்களைத் தவிர மேலும் நான்கு தளபதிகள் பொட்டி பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை, தாமன் பகடை இவர்கள் நால்வரும் அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள். ஒரு நாயக்க மன்னனின் படையில் எந்த சாதிய வேறு பாடும் இன்றி பிள்ளை, தேவர், பள்ளர் மற்றும் அருந்ததியர் என்று அனைத்து சமூகத்தினரும் இருந்திருக்கின்றனர். வீரபாண்டியன் ஒருங்கிணைத்தாரா இல்லை இவர்களே ஒன்றிணைந்தார்களா என்பது அல்ல. ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து இருந்தனர் என்பது உண்மை. ஆனால் மா.பொ.சி தான் கட்டபொம்மனை பற்றிய முதல் நூலை கொண்டு வருகிறர் இதில் சுந்தரலிங்கம் கூட சிறு இடம் பிடித்துவிடுகிறார் ஆனால் ஒரு தளபதியாக இல்லாமல், அதாவது அரண்மனை வேலையாளாக மேலும் மன்னருடன் அனைத்து இடங்களுக்கும் செல்பவராக. 


அருந்ததியர்களான பொட்டி, முத்தன், கந்தன் மற்றும் தாமன் எங்குமே கண்ணிற்கு படமாட்டார்கள், இன்னுமொறு விந்தை என்னவென்றால் கட்டபொம்மனின் கீழாக இருந்த 72 பாளையங்களுள் அவைகள் கவணி என்றும் அழைக்கப்பட்டுள்ளது, இதில் நான்கு பாளையங்களுக்கு தலைவர்கள் தான் பொட்டி பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை மற்றும் தாமன் பகடை ஆனால் இவர்களை மறைத்துவிட்டு ஒரு வரலாற்றை எழுதியிருக்கிறார். இவர்களை மறைத்தது மட்டும் எழுதினால் பத்தாது இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற வரலாறும் முக்கியமானது. 

முத்தன் பகடை பொட்டி பகடை இருவரும் மச்சான் உறவுமுறை கொண்டவர்கள், மதுரையில் கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது ஒரு கோபுரம் மட்டும் கட்டும்பொழுதே இடிந்து கொண்டிருந்தது ஒரு ஜோசியர் நரபலி கொடுத்தால் தான் கோபுரத்தை முடிக்க முடியும் என்று சொல்ல சில அருந்ததியர்களை பிடித்து பலிகொடுப்பதற்காக அடைத்துவிட்டு நல்ல நாள் குறித்து காத்திருந்தனர். இதை கேள்விப்பட்ட முத்தனும் பொட்டியும் கோபமடைந்தனர், கட்டபொம்முவும் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தார்கள். அரசவை நடந்து கொண்டிருந்தபொழுது உள்ளே சென்று பாடியாட ஆரம்பித்தார்கல். கட்டபொம்மு அவர்களை நிறுத்தி என்ன என்று கேட்டபொழுது மதுரையில் நடக்கும் அநியாயத்தை சொல்லிய பொழுது சரி என்று கட்டபொம்மு நரபலி கொடுப்பதை நிறுத்தச் சொல்லி கடிதம் அனுப்புகிறார் அதுவும் நிறுத்தாவிடில் படையெடுப்பு நடக்கும் என்று. நரபலி நிறுத்தப்பட்டு அறுந்ததியர்கள் விடுவிக்கப்பட்டனர். 

முத்தன் பகடையும் பொட்டி பகடையும் இப்படி தங்களது புத்திசாலித் தனத்தை உபயோகித்து உயிர்களை காப்பாற்றியது மட்டுமில்லை. தங்களின் பராக்கிரமத்தால் பல எதிரிகளை அழித்தவர்கள். ஜாக்சன் துறையை சந்திக்க சென்றபொழுது தானாதி சுப்பிரமணியப்பிள்ளையும் வெள்ளையத் தேவனின் குதிரையும் ஆங்கிலேயரிடம் பிடிபட்டது. இருவரையும் மீட்டு வர சென்றார்கள் மச்சான்கள் இருவரும் ஆனால் இவர்கள் செல்லும் முன்பாக தானாதிப்பிள்ளையை சென்னை சிறைக்கு மாற்றிவிட்டனர், ஆனால் அங்கிருந்த வெள்ளையத் தேவனின் வெள்ளை குதிரையை கைப்பற்ற முடிவெடுத்தனர். தங்களுக்கு குதிரை பாசை தெரியும் என்றும் குதிரைப் பராமறிப்பவர்கள் என்று கூறி வெள்ளையத்தேவன் குதிரையிடம் சென்றனர். இவர்களை அடையாளம் தெரிந்து கொண்டு குதிரையும் இவர்களை பார்த்து துள்ளியது, இதை பார்த்த ஆங்கிலேயே வீரர்களிடம் நாங்கள் குதிரையின் மொழி தெரியும் என்று சொல்லி சமாளித்துவிட்டு. வேலைக்கு சேர்ந்து குதிரை பராமரிப்பவர்களா வேலை பார்த்தனர், நேரம் பார்த்து காத்திருந்த இருவரும் ஒரு நாள் வீரர்கள் அசந்திருந்த சமயமாக குதிரையை ஓட்டிக் கொண்டு பாஞ்சாலம் குறிச்சி வந்து சேர்ந்தனர்.

இதைப் போன்று தங்களது வேலைகளை மிகவும் சாமர்த்தியமாகவும் நேர்த்தியாகவும் செய்யக் கூடியவர்கள் தான் மச்சான்கள் இருவரும். ஆங்கிலேயர் படையெடுப்பும் ஆரம்பமாகிறது முதலில் மக்காளித் துரையின் தலைமையில் பாஞ்சாலகுறிச்சியின் மீது படையெடுப்பு ஆரம்பமாகிறது. முதல் நாள் சண்டையில் வெள்ளையத் தேவர் மரணம் ஏய்துகிறார். எதிரி எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு தாக்குதலை நடத்துவது என்று முடிவாகிறது, அதற்கு சுந்தரலிங்கம் தேவேந்திரனார், அதிவீர மல்லு சேர்வை மற்றும் கந்தன் பகடை மூவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மூவரும் இரவில் ஆங்கிலேயே படை மூகாமை நோக்கி செல்கிறார்கள். அங்கு காவல்காரர்கள் இருக்க ஆங்கிலேயே படை வீரர்கள் மது அருந்திக் கொண்டும் ஆடிப் பாடிக் கொண்டும் இருக்கின்றனர், இது தாக்குதவதற்கு சரியான சமயம் இல்லை என்று மூவரும் முடிவு செய்து அருகில் இருக்கும் புதர்க்குள் பதுங்கிக் கொள்கின்றனர். விடியகாலை வரை ஆங்கிலேயேர்களின் விருந்து கொண்டாட்டம் தொடர்கிறது, கோழி கூவியபிறகு படுக்க செல்கின்றனர். பாரா இருந்த காவல்காரர்களும் தூங்க செல்கின்றனர்.

இது தான் சரியான சமயம் என்று விழித்திருந்த ஒரு பாராக்காரனை சுந்தரலிங்கம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொலை செய்துவிடுகிறார். பின்னர் வீரர்கள் தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்து அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அனைத்துவிட்டு வீரர்களை தாக்க ஆரம்பிக்கின்றனர். தாக்கபப்ட்ட வீரர்களின் கூக்குரலை கேட்டு மற்ற வீரர்கள் எந்திரித்து தாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டு அவர்களும் தாக்க ஆரம்பிக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குள்ளாகவே தாக்கிக் கொண்டு பலர் உயிரிழக்கின்றனர். அடுத்த கூடாரத்தில் இருந்த மாக்காளித் துரை சத்தம் கேட்டு வருகிறார் அப்பொழுது அவர் கந்தன் பகடையை பார்த்து சுட்டுக் கொள்கிறார். சுந்தரலிங்கமும் அதிவீர மல்லு சேர்வையும் தங்களால் இயன்ற அளவு சேதத்தை ஏற்படுத்திவிட்டு. இறந்தவர்கள் போல் நடித்து, இறந்துகிடந்த வெள்ளை வீரர்களின் உடையை அணிந்து கொண்டு வெள்ளை வீரர்கள் போல் அங்கிருந்து தப்பித்து கோட்டைக்கு திரும்பிவிடுகின்றனர். இந்த தாக்குதலில் 100 வீரர்களும், 50 பாராக் காரர்களும் மற்றும் 7 வெள்ளையர்களும் இறந்தனர். பாஞ்சாலகுறிச்சி தரப்பில் ஒரே ஒரு உயிரை கொடுத்து 157 பேரை கொன்று குவித்தனர்.

கோட்டை திரும்பியவர்கள் கட்டபொம்மனிடம் கந்தன் பகடையின் மரணத்தை தெரியப்படுத்துகின்றனர். 

கந்தன் பகடை மடிந்த சமாச்சாரங்
        கட்டபொம்மு துரை தான் கேட்டுச்
சிந்தை கலங்கி மனது நொந்தான் அய்யோ!
       சொந்தம் பாராட்டி வளர்த்தே னென்றான்
தன்னிமை யாகவே வளர்த்தேனே வெகு
        சமத்துக் காரப் பகடை யென்றான்
அநியாய மாகவே முடிந்தானே அவன் 
         அவன் சொன்ன சபதம் முடிப்பானே
எதிரிகள் வந்து யெதிர்த்து விட்டால் அதற்
          கேத்தக் கத்திகள் சுத்திவிட்டால்
எதிரிச் சவாலுஞ் சாய்ந்திடுமே நான்
           எடுத்த சவால் கெலித்திடுமே
கந்தன் பகடையைத் தோற்றோமென்றான் இனிக்
            கண்ணாலே யென்றைக்கு காண்போமென்றான்..

இத்தகைய பாடல்கள் வழியாகவே கட்டபொம்முவின் சரித்திரம் எழுதப்பட்டது ஆனால் அவைகளில் கூறப்பட்ட பகடைகள் மற்றும் சுந்தரலிங்கம் போன்றவர்களை மறைத்து வரலாறு எழுதப்பட்டது.

இதன் பின்னர் பொட்டிப் பகடையும், முத்தன் பகடையும் மாறுவேடம் பூண்டனர் தார்ப்பாய்ச்சி வேட்டியை கட்டிக் கொண்டு உடலெல்லாம் திருநீறு இட்டுக் கொண்டு கையில் கைப்பந்தங்கள் ஏந்திக்கொண்டு, அதனுள் வாளை மறைத்துவைத்துக் கொண்டு ஆங்கிலேயரின் கூடாரம் நோக்கி சென்றனர். அப்பொழுது ஆங்கிலேயே வீரர்கள் இவர்களை பிடித்து தளபதியிடம் கொண்டு சென்றனர். அவர் இவர்களிடம் பாஞ்சாலகுறிச்சி கோட்டைக்குள் செல்லும் ரகசிய வழி இருக்கிறதா என்று கேட்டனர், இல்லை என்று சொன்னவர்கள் ஆனால் கட்டபொம்மன் முருக பக்தன் எங்களைப் போல் வேடம் அணிந்து கொண்டு சென்றால் கோட்டைக்குள் நுழையலாம் என்று கூறினர். அந்த திட்டம் பிடித்திருந்ததால் வீரர்களை இவர்களைப் போல வேடம் அணிந்து கொண்டு இருவருடன் செல்ல கூறினார் தளபதி. வந்த வீரர்களை கூப்பிட்டுக் கொண்டு கோட்டை நோக்கி சென்றவர்கள் சிறிது தூரம் தாண்டிய பிறகு தங்களது வாட்களை வெளியில் எடுத்து வீரர்கள் சிலரை கொலை செய்தனர், இவர்களின் தீப்பந்தமும் கிழே விழுந்து அணைந்துவிட்டதால் இருட்டில் இவர்கள் என்று நினைத்து வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் வெட்டிக் கொண்டனர். தங்களை முழுவதும் உணர்ந்து சண்டையை நிறுத்தும் முன் மச்சான்கள் இருவரும் தப்பி வெளியேறி கோட்டைக்கு திரும்பிவிட்டனர். 

இப்படி தொடர்ந்து பல வழிகளில் ஆங்கிலேயேர்களை தாக்கினர் மச்சான்கள் இருவரும். 

முத்தன் பகடையும் பெட்டிப் பகடையும்
      மைத்துன மார்களிருபேரும்
கத்தி வீசிக்கொண்டு எமன் காலன் போலே
      காங்கு கூடாரத்தில் நுழைந்திட்டான்
கத்தி யடித்தல்லோ பார்க்கிறான் துரை
      கத்தியைப் பார்த்தல்லோ வெட்டுகிறான்
எத்தனை சீமைச் சாராயக் குப்பிகள் 
      அத்தனையும் பூசையும் உடைத்திட்டான்
தேசுகி வாசுகி படுத்திட்டான் முன்னே 
       சீமைத் துரைகளும் முடித்திட்டான்

இப்படி தீவிரமாக போரிட்டாலும் போரில் வெற்றி கிடைக்காது என்பதை உணர்ந்த கட்ட பொம்மன் கோட்டையிலிருந்து வெளியேறுவது என்று முடிவெடுத்தார். கோட்டையை விட்டு வெளியில் வந்த கட்டபொம்மன், ஊமைத் துரையும் வேறு வேறு பக்கம் சென்றனர். கட்ட பொம்மன் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டரிடம் அடைக்கலம் புகுந்தார். அங்கு தொண்டைமானால் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதே சமயத்தில் ஊமைத்துரையும் பொட்டி பகடையும் முத்தான் பகடையும் கன்னிவாடி காட்டுக்குள் மறைந்திருந்தனர். அக்னீசு துரை காட்டை முற்றுகையிட்டான் ஆனால் பொட்டி பகடையும் முத்தான் பகடையும் ஆங்கிலப் படையை பச்சைமலை கோட்டை வரை எதிரிகளை துரத்தி அடித்தனர். இதே சமயத்தில் கோட்டையில் இருந்த சுந்தரலிங்கம் தேவேந்திரனார் தனது முறைப்பெண் வள்ளியுடன் சென்று தங்களது உயிரைக் கொடுத்து ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை அழிக்கின்றனர்.

கட்டபொம்மன் சிறைபட்டிருந்த நேரத்தில் ஊமைத் துரையை பார்கக் விரும்புவதாக கட்டபொம்மனின் கடிதம் வருகிறது, ஊமைத்துரையும் தன் மறைவிடத்தை விட்டு அண்ணனை பார்க்க கிளம்பி ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்படுகிறார். அங்கு அவருடன் சேர்த்து பொட்டி பகடையும் இருக்கிறார். ஊமைத்துரைக்கு உதவுவதற்காக பொட்டி பகடை நியமிக்கப்படுகிறார். ஊமைத் துரைக்கு தேவையானவைகளை வெளியில் சென்று வாங்கி வரும் பொறுப்பு பொட்டி பகடைக்கு அளிக்கப்படுகிறது. ஊமைத்துரை கடிதம் கொடுக்க அதை தன் செறுப்புக்குள் வைத்து தைத்து எடுத்துக் கொண்டு புலிக்குத்தி நாயக்கரிடம் கடித்தத்தை சேர்க்கிறார் அதே போல் புலிக்குத்தி நாயக்கர் கொடுத்த கடிதத்தையும் ஊமைத் துரையிடம் கொண்டு வந்து சேர்க்கிறார். ஊமைத் துரையின் திட்டத்தின் படி விறகு சுமப்பவர்களாக கோட்டைக்குள் நுழைந்த வீரர்கள் உதவியுடன் ஊமைத் துரை பாளையங்கோட்டையில் இருந்து தப்பித்து வெளியில் வந்து பாஞ்சாலக் குறிச்சி கோட்டையில் தனது அரசை நிறுவுகிறார்.

அக்னீசு துரை பாஞ்சால குறிச்சி மீது படையெடுக்கிறார், மக்காளித் துரையும் படைகளுடன் வந்து அக்னீசு துரையுடன் இணைந்து கொள்கிறார். கோட்டைக்கு வெளியே முற்றுகையிடுகின்றனர் ஆங்கிலேயர்கள் பொட்டிப் பகடையும் கிடுகிட்டி நாயக்கரும் மாறுவேடம் அணிந்து ஆங்கிலேயர் முகாம் சென்று ஆடல் பாடல்களை நடத்தி ஆங்கிலேயரை மகிழ்விக்கின்றனர். அப்பொழுது 50 படைவீரர்களுடன் வந்த ஊமைத் துரை வெள்ளையர்களை தாக்கி நிலைகுலையச் செய்து அங்கிருந்த பட்டத்து குதிரை, பட்டாக் கத்தி, பீரங்கி, உணவுப் பொருட்கள் சாராயம் போன்றவற்றை கொள்ளையடித்து கோட்டைக்கு திரும்புகின்றனர். இதில் பெரும் பங்கு வகிக்கிறார் பொட்டி பகடை. ஊமைத் துரை பொட்டிப் பகடையையும் முத்தான் பகடையையும் கோட்டை காவலுக்கு தளபதிகளாக நியமிக்கிறார். ஏட்டையபுரக் காரர்களின் யோசனையின் படி கோட்டையைச் சுற்றி பஞ்சு மற்றும் மிளகாய் மூட்டைகளை அடுக்கி தீ வைத்துவிட்டு தொடர்ந்து ஆங்கிலேயர்கள் தாக்குதலை செய்கின்றனர். இதில் மிளகாய் நெடியின் காரம் தாங்க முடியாமல் வீரர்கள் கலைகின்றனர். இந்த சண்டையில் பொட்டி பகடையும் முத்தன் பகடையும் வீரமரணம் அடைகின்றனர். கோட்டையிலிருந்து வெளியேறிய ஊமைத்துரை மருதுபாண்டியர்களிடம் அடைக்கலமடைந்தார். 

இப்படி வீரஞ்சொறிந்த படைத் தளபதிகளை அருந்ததியினர் என்பதற்காகவும் தேவேந்திரர்கள் என்பதற்காகவும் மறைத்தும் இழிவுபடுத்தியும் ஒரு வரலாற்றை எழுதி அதை மக்களையும் நம்பவைத்த மா.பொ.சிவஞானம் தான்.  

சாதி ஒழிப்பே தமிழ் தேசியம் - தோழர் பொன்பரப்பி தமிழரசன்


வழி நிற்போம், களைகளை களைந்திடுவோம்.. 

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வரலாற்று சிறப்பு மிக்க பதிவுக்கு நன்றி
    நான் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் மெய்காப்பு படைதளபதி பொட்டிபகடையின் நேரடி வாரிசு ரஞ்சித்பகடை நன்றி சார்

    ReplyDelete
  3. அருமை வாழ்த்துக்கள் சக்கிலியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் விடுதலைப் போரில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

    ReplyDelete