Wednesday, May 14, 2014

ஒண்டிவீரன் எனும் அருந்ததியர் மாவீரன்




ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் ஒரு தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். கட்டபொம்மனின் படையில் எப்படி சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் இருந்ததோ அப்படியே பூலித்தேவரின்படையும் செயல்பட்டுள்ளதை அறியலாம். பூலித்தேவரையும் ஒண்டிவீரனையும் தனித்தனியாக பார்க்கமுடியாது ஒருவர் இல்லாமல் மற்றவரின் வரலாறு என்பது இங்கில்லை. முதலில் பூலித்தேவர் யார் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பூலித்தேவர் முன்னோர்கள் அவர்கள் திசைக் காவலுக்காக திருநெல்வேலி பகுதிக்கு வருகிறார்கள் அங்கு நெற்கட்டான் செவ்வல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் வாரிசாக வந்தவர் தான் பூலித்தேவர்.

அந்த பகுதியில் அருந்ததிய மக்களின் நிலங்களை இருளப்ப பிள்ளை என்பவர் தனது பலத்தால் பிடிங்கிக் கொள்கிறார், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் பூலித்தேவரிடம் முறையிடுகின்றனர் அருந்ததிய மக்கள். பூலித்தேவ இருளப்ப பிள்ளையிடம் இருந்து நிலங்களை மீட்டு அருந்ததிய மக்களிடம் திரும்ப கொடுக்கிறார். அன்றிலிருந்து அருந்ததிய மக்கள் பூலித்தேவரையே தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். இப்படி மீட்டுத் தரப்பட்ட நிலங்களுள் ஒன்று தான் ஒண்டிவீரனின் தாத்தாவுடையது. ஒண்டி வீரனின் தாத்தாவிற்கு எட்டு பிள்ளைகள் அவர்களில் முத்தவரின் மகன் தான் ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இயற்பெயர் வீரன்.

பூலியின் தலைமை தளபதி ஒண்டிவீரன், பூலியின் போர் வாளாகவே கருதப்பட்டார். நிலைமைக்கு தகுந்தாற்போல் போர்திட்டங்கள் வகுப்பதிலும் மறைந்திருந்து தாக்கி எதிரியை நிலைகுலையச் செயவதிலும் மிகவும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். நெற்கட்டான் செவ்வல், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிப்பூத்தூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டு வெற்றிகளை குவித்தவர் ஒண்டிவீரன். அந்த காலகட்டத்தில் தான் ஆற்காடு நாவப்பிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர்கள் வரிகேட்டு ஆள் அனுப்புகிறார்கள். பூலி ஆங்கிலேயருக்கு வரிகட்ட முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறார், அதுவரை நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் அதாவது செம்மண் நிலத்தில் மிகவும் அதிகமான நெல்லை விளைவித்ததால் நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் நெற்கட்டான் செவ்வலாக மாறியதாகவும் சொல்கிறார்கள்.


வரி கொடுக்க மறுத்ததையொட்டி ஆங்கிலேயர்கள் தென்மலைக்கு வந்து முகாமிட்டு பூலித்தேவரிடம் தங்கள் தூதுவர் ஒருவரை அனுப்புகிறார்கள். தூதுவர் ஆங்கிலேயரின் படை பலம் மிகவும் அதிகம் அவர்களுடன் சமாதானமாக போகும் படி கூறுகிறார். அவ்வாறு சமாதானம் வேண்டாம் என்றால் போர் என்பதை முடிவெடுப்பதாக இருந்தால் ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரி வசூலிக்கும் உரிமையின் அடையாளமாக ஆங்கிலேயரிடம் இருக்கும் பட்டத்து வாளையும் குதிரையையும் கடத்திக் கொண்டு வரவேண்டும் அதே சமயத்தில் போர் தொடங்கும் அடையாளமாக அங்கிருக்கும் நகராவையும் முழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். பூலித்தேவர் இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டு தனது தளபதிகளை கூப்பிட்டு ஆலோசனையில் இறங்குகிறார்.

பூலித்தேவனின் தளபதிகளை குறிக்கும் நாட்டுப்புறப்பாடல்

”சின்னான் பகடை பெரியான் பகடை
சிவத்தசொக்கன் கருத்தச் சொக்கன்
அண்ணன் தம்பிமார் அழகிரியுடன் 
அஞ்சாறு பகடையுடன் ஒண்டியாம்...

      இத்தானதி பேர்களுமே பூலி சேனாபதிகளாம்
      அத்தானதி பேர்களுக்கும் கம்புக் காரர்கள்
      வலையக்காரர்கள் வாள் வீச்சுக் காரர்கள்
      வேல் வீச்சுக்காரர்களுடன் முன்னூறு பேருக்கதிபதியாம்”

பூலியின் படையில் ஒண்டிவீரன் பகடை, சின்னான் பகடை, பெரியான் பகடை, சிவத்தசொக்கன், கருத்தசொக்கன், ஓடிக் குத்துவான் பகடை என்று பல அருந்ததியர்கள் இருந்தனர். ஆங்கிலேயரின் நிபந்தனையை தனது தளபதிகளுக்கு விளக்குகிறார் பூலித்தேவர். அப்பொழுது ஒண்டிவீரன் பட்டத்து வாளையும் குதிரையையும் கவர்ந்து வரும் வேலையை தான் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். ஒண்டிவீரனின் திறமையை அறிந்த பூலித் தேவரும் அதற்கு ஒத்துக் கொள்கிறார். 

ஒண்டிவீரன் மாறுவேடம் இட்டு செறுப்பு தைப்பவர் போல் ஆங்கிலேயர் தங்கியிருந்த தென்மலை சென்று தனக்கு சூ, செறுப்பு, குதிரை சேனம் போன்றவைகள் தைக்க தெரியும் என்று வேலை கேட்கிறார். ஆங்கிலேயருக்கும் தேவை இருந்ததால் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். தனது நேரத்திற்காக காத்திருந்து பட்டத்துவாளை வைத்திருந்த இடத்தில் இருந்து திருடிக்கொண்டு பட்டத்து குதிரை கட்டியிருந்த இடத்தை நோக்கி செல்கிறார். கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்கும் பொழுது குதிரை பலமாக கனைத்து ஆங்கில சிப்பாய்கள் முழித்துக் கொள்கின்றனர். உடனடியாக அருகில் குதிரைக்காக போடப்பட்டிருந்த புல் குவியலுக்குள் படுத்துக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்கிறார் ஒண்டிவீரன்.

குதிரையை வந்து பார்த்த வீரர்கள் கயிறு அவிழ்ந்திருப்பதை பார்த்து கட்ட முயலும் பொழுது முளைகாம்பு ஆடியதை கவனித்து அதை தரையில் இருந்து பிடிங்கு மற்றொரு இடத்தில் அடிக்கின்றனர். அங்கு ஒண்டிவீரனின் கை புல்லுக்குள் மறைந்து இருக்கிறது அதன் மீதே அடித்துவிடுகின்றனர், ஒண்டிவீரன் அத்தனை வலியையையும் தாங்கி கொண்டு தனது நோக்கத்தை நிறைவேற்றும் வெறியுடன் அமைதியாக இருக்கிறார். புதிதாக அடித்த முளைகாம்பில் குதிரையை கட்டிவிட்டு சென்று விடுகின்றனர் வீரர்கள். அவர்கள் சென்ற பிறகு ஆராவரம் அடங்குவரை காத்திருந்து வலியையும் பொறுத்துக் கொண்டு இருந்துவிட்டு எழுந்தார் ஒண்டிவீரர். முளைக்காம்பை உறுவி கையை விடுவிக்க மற்றொரு கையால் முயல்கிறார் ஆனால் முடியவில்லை, தான் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் முளைக்காம்பில் மாட்டியிருந்த கையை வெட்டிவிட்டு, இரத்தம் சொட்ட சொட்ட குதிரையை அவிழ்த்துக்கொண்டு அமைதியாக அங்கிருந்து வெளியேறுகிறார்.

வெளியேறும் பொழுது நெற்கட்டான் செவ்வலை நோக்கி நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கில சிப்பாய்களின் கூடாரத்தை நோக்கி திருப்பி வைத்துவிட்டு அங்கிருந்த நகராவை அடித்து போர்முழக்கம் இட்டு குதிரையை விரட்டிக் கொண்டு நெற்கட்டான் செவ்வலை நோக்கி பறந்தோடுகிறார். நகராவின் ஒலி கேட்டு எழுந்த ஆங்கிலப்படை அவசர அவசரமாக அந்த் இரவின் இருட்டில் பீரங்கிகளை உபயோகிக்க அது அவர்களின் கூடாரத்தையே தாக்கி பலத்த சேதத்தை உருவாக்குகிறது. குதிரையில் சென்ற ஒண்டிவீரன் பத்திரமாக பூலித்தேவரை சென்றடைகிறார். ஒண்டிவீரனின் வீரத்தை மெச்சியவர் ஒரு கையை ஒண்டிவீரன் இழந்திருப்பதை பார்த்து கவலைப்படுகிறார். அப்பொழுது ஒண்டிவீரன் ஒரு கை போனால் என்ன அதற்கு பதிலாக எனக்கு நீங்கள் தங்கத்தில் ஒரு கை செய்து கொடுப்பீர்களே நாம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் கவனம் செலுத்துவோம் என்று கூறுகிறார்.

இந்த படையெடுப்பின் ஆதாரங்கள் ஆங்கிலேயர் ஆவணங்கள் வழியாக உறுதி செய்ய முடிகிறது. 1755ல் படையெடுப்பு நடந்ததும் ஆங்கிலேயப் படைக்கு அலெக்ஸாண்டர் ஹெரான் தலைமை தாங்கியிருக்கிறார். இந்த படையில் ஆற்காடு நவாப் முகமது அலியின் படையும் அதன் தளபதியாக ஆற்காடு நவாப்பின் அண்ணன் மகபூஸ்கானும், ஆங்கிலேயரின் சுதேசிப் படையும் அதன் தளபதியாக கான் சாகிப்பும் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. பூலித் தேவனின் கோட்டையை தகர்க்க 18 பவுண்ட் பீரங்கிக் குண்டுகள் தேவை ஆனால் ஆங்கிலப் படையிடம் 12 பவுண்ட், 14 பவுண்ட் குண்டுகளே இருந்திருக்கின்றன. இதனால் ஹெரான் பூலித்தேவரை பயமுறுத்தி கப்பத்தை வசூலிக்கும் எண்ணத்துடன் தான் முதலியார் துபாஷை அனுப்புகிறார். அந்த பயமுறுத்தலுக்கு பயப்படாமல் விதித்த நிபந்தனையை நிறைவேற்றி போரிடுகிறார் பூலித்தேவரும் அவரது தளபதி ஒண்டிவீரனும்.

அதன் பிறகு கோட்டையை தகர்க்க ஹெரான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிகிறது 1755ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கோட்டையை தகர்க்க முடியாமல் முற்றுகையை முடித்துக் கொண்டு மதுரையை நோக்கி திரும்புகிறது ஆங்கிலப்படை. இதன் பிறகு ஒண்டிவீரனின் மரணத்தைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை ஆனால் பூலித்தேவரின் மறைவிற்குப் பின்னும் அவரின் மகன்களின் படையில் இருந்து சண்டையிட்டதும் தெரிய வருகிறது. ஆனால் ஒண்டிவீரனின் மரணம் பற்றிய தகவல் இல்லை ஆனால் மக்கள் ஒண்டிவீரனை தங்களது தெய்வமாக வழிபடுகின்றனர்.

இந்த தகவல்களை அந்த பகுதியில் வசிக்கும் பிற சமூகமக்களும் உறுதி செய்கின்றனர். இன்று அருந்ததிய மக்கள் அந்த பகுதியில் எந்த நிலத்திற்கும் சொந்தகாரர்களாக இல்லை ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிலம் வைத்திருந்து விவசாயமும் செய்திருக்கின்றனர் என்பதை ஒண்டிவீரனின் வரலாறு நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறது. 

2 comments:

  1. அருந்ததியர் சமூகத்தில் பிறந்த பல்வேறு வீரர்கள் இருக்கின்றார்கள் அவர்களது வரலாறுகளையும் பதிவிட வேண்டும் நீங்கள்🔥

    ReplyDelete
  2. அருந்ததியர் இனத்தவரின் வரலாற்றினை பதிவிடவும்...நண்பரே

    ReplyDelete