Wednesday, April 9, 2014

நீதியை கையாள்பவர்கள் மகாத்மாக்கள் இல்லை!!!

உலக அளவில் நீதித் துறையும் காவல்துறையும் தனி மனிதர்களாலேயே கையாளப்படுகிறது, அப்படி நீதியை கையாளும் இத்துறையினர் மகாத்மாக்கள் இல்லை சாதரண மனிதர்களே என்பதற்கு ஓர் அடையாளம்....


இவயோ ஹக்கமோடா...

ஹக்கமோடோ ஒரு தொழில்முறை குத்துச் சண்டை வீரர் தன் பதின்ம வயதில் குத்துச்சண்டையை தேர்ந்தெடுத்து அதில் தனது வாழ்க்கையினை வடிவமைத்துக் கொண்டவர். அனைத்து குத்துச்சண்டை வீரர்களைப் போலவே தனது 30வது வயதில் குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து விலகி தனக்கென அடுத்த வாழ்க்கையை வடிவமைக்க ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். இதன் பிறகே இவருடை வாழ்க்கை சிறைக்கு என்று எழுதப்பட்டதாக மாறிவிடுகிறது. 1966ம் ஆண்டு ஜப்பானில் ஒரு குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்படுகிறார்கள், குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை ஒரு வருடமாக திணறுகிறது. அப்பொழுது தான் அந்த கொலையை செய்தவர் ஹக்கமோடோ என்று அடையாளம் காட்டப்பட்டு நீதியின் முன் காவல்துறையினரால் நிறுத்தப்படுகிறார். இதற்கான சாட்சியங்களாக ஏற்கெனவே காவல்துறையின் அடவாடிகளின் கீழ் வாக்குமூலங்கள் வாங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்ட ஜப்பான் காவல்துறை வாங்கிய ஹக்கமோடோவின் வாக்குமூலமும், கொலைசெய்யும் பொழுது ஹக்கமோடோ அணிந்திருந்த ஆடைகளும் அதில் இருந்த ரத்த துளிகளும் என்று குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு தூக்கு கயிறும் பரிசாக அளிக்கப்படுகிறது.

1968ம் ஆண்டு தூக்கு தண்டனை கைதியாக மாறுகிறார் ஹக்கமோடோ தனிமைச்சிறையில் அடைகப்படுகிறார். இதில் சாட்சியங்களாக கொடுக்கப்பட்ட சட்டையில் இருக்கும் ரத்தக்கறை கொலை செய்யபப்ட்டவர்களுடையதும் மற்றும் ஹக்கமோடோவின் ரத்தக் கறையும் என்று சொல்லப்படுகிறது. அவர் அணிந்திருந்ததாக சொல்லப்பட்ட கால்சட்டை ஹக்கமோடோவால் அணியவே முடியாத அவரின் அளைவை விட மிகச் சிறிய கால்சட்டை. இந்த இரத்தகறையின் DNA இப்பொழுது ஆராயப்பட்டு அந்த ஆடையில் இருக்கும் இரத்தக்கறை ஹக்கமோடோவுடையது கிடையாது என்பதன் அடிப்படையிலேயே இப்பொழுது நிரபராதி என்று விடுவிக்கப்பட்டுள்ளார் ஹக்கமோடோ. ஆனால் இதற்கு எடுத்துக் கொண்ட காலக்கெடு தான் மிகவும் அதிகமானது. மறுவிசாரணை வேண்டும் என்று ஹக்கமோடோ பதிந்த வழக்கு 27 ஆண்டுகள் கழித்து 2007ல் எடுத்துக் கொள்ளப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாம் முறையாக் 2008ல் மறுவிசாரணை தேவை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழாகத் தான் இப்பொழுது 2014ல் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டுள்ளார்.



ஆனால் இடையில் கிட்டத்தட்ட 50 வருடங்கள் தனது வாழ்க்கையை சிறைச்சாலையில் தொலைத்திருக்கிறார். இவருக்காக தொடர்ந்து போராடியவர் இவரது தமக்கை ஹிடேகோ ஹக்கமோடோ, இன்று அவருக்கு வயது 81 தொடர்ந்து தனது தம்பிக்காக போராடி இன்று தனது தம்பியின் விடுதலையை வென்று எடுத்திருக்கிறார். இந்த சட்டப் போராட்டத்தில் இவருக்கு ஒரு துணையாக பலர் இருந்து இருக்கின்றனர். மிகவும் முக்கியமாக ஜப்பான் வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் ஹக்கமோடோவுக்கு எதிரான சாட்சியங்களின் கீழான தங்கள் சந்தேகங்களை மிகவும் உரத்த குரலில் எழுப்பி இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்படவும் ஹக்கமோடோவின் விடுதலைக்கும் பாடுபட்டுள்ளனர். 



தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கில் நியாயம் கிடைக்க தேவையான சட்ட வழிமுறைகள் ஜப்பான் சட்டத்தில் இருந்ததும், அந்த வழிமுறையின் கீழாக சட்டபோராட்டம் முன்னெடுக்கப்பட்டு இன்று நியாயம் கிடைத்துள்ளது. இது ஜப்பான் போன்ற நாடுகள் மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் தேவையான நடைமுறை. காவல்துறை என்பது பொய்யான சாட்சியங்களை உருவாக்குவதிலும் தனக்கு அளிக்கப்பட்ட பணியை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற நோக்கில் குற்றவாளிகளாக இல்லாதவர்களைக் கூட குற்றவாளிகளாக சித்தரிக்கும் அவலம் ஜப்பானில் மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளிலும் நடக்கும் ஓர் சாதரண நிக்ழ்வாக இருக்கும் இந்த காலகட்டத்தில் மரண தண்டனை என்பது ஒரு மிகவும் கொடூரமான தண்டனையே. ஜப்பானில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் முறையும் மிகவும் கொடூரமானதே, ஆம் மரணதண்டனையை எதிர்பார்த்து இருக்கும் கைதிக்கு அவரை தூக்கிலிடும் ஒரு சில மணிநேரங்களுக்கு முன்பாகவே தண்டனை நிறைவேற்றப்பட போவதை அறிவிப்பார்கள். அவருக்கான தண்டனை நிறைவேற்றிய பிறகே கைதியின் குடும்பத்துக்கு அறிவிக்கப்படும். இப்படிப்பட்ட நடைமுறையுள்ள ஒரு நாட்டில் ஹக்கமோடோ என்றோ தனக்கான தண்டனையை சந்தித்து இருக்க நேரிட்டிருக்கலாம் அதன் பிறகு அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தவறானது என்று தெரிந்து இருந்தால் இன்று ஹக்கமோடோ உயிருடன் நிரபராதி என்று விடுதலை செயய்பப்ட்டது போல் விடுதலை ஆகியிருக்க முடியாது.


ஒரு தவறான நீதியின் கீழ் 45 ஆண்டுகள் மரணத்தை எதிர்பார்த்து இருந்த கொடூரம், நிரபராதியாக இருந்தாலும் 50 ஆண்டுகளாக சிறையில் அடைக்கபப்ட்டு இழந்த வாழ்க்கை ஆகியவைகளை எந்த நாட்டு சட்டமும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இன்று அந்த மரணதண்டனை நிறைவேற்றப் படாமல் இருந்ததால் தான் ஹக்கமோடோ நிரபராதி என்று விடுவிக்கப்பட்டுள்ளார். இப்படி நீதித் துறையும் காவல்துறையும் தனிமனிதர்களின் கட்டுப்பாடுகளின் கீழ் தான் தன் பணியை செய்து கொண்டுளளது அதில் மனிதத்தவறு நேர வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த வழக்கில் மரண தண்டனை அளித்த நீதிபதிகளுள் ஒருவர் தான் ஹக்கமோடோவை நிரபராதியாகத் தான் பார்த்தேன் ஆனால் மற்ற நீதிபதிகளின் கருத்து எதிராக இருந்ததால் அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது என்று கூறியுள்ளர். தவறு என்பது மனித இயல்பு அது குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல குற்றத்தை விசாரித்து நிலைநாட்டும் சட்டத்தின் பாதுகாவலர்களான காவல்துறையினருக்கும், நீதித் துறையை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். நீதியின் காவலர்கள் யாரும் குற்றம் செய்யாத மகாத்மாக்கள் கிடையாது. அனைவரும் மனிதர்களே, இப்படி தவறு நடக்கும் வாய்ப்புடைய உலகத்தின் எந்த நாடுகளிலும் மரணம் என்பது தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பளிக்காத ஒரு தண்டனை என்பதை உணரவேண்டும். மரணதண்டனை என்பது சட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டியது கண்டிப்பான தேவை.

No comments:

Post a Comment