Monday, March 14, 2011

தமிழின தலைவன் Vs ஈழத்தாய்





யாராவது கருணாநிதி ஈழவிசயத்தில் செய்தது தவறு என்று சொன்னால் ஒன்றை சொல்லுகிறார்கள். அது ஈழதாய் என்று சொன்னீர்களே போய் ஈழத்தை அவரிடம் கேளுங்கள் என்று..

இரண்டும் சாக்கடை ஆனால் ஜெயா சாக்கடையை விட கருணா சாக்கடை நாற்றம் எங்களுக்கு வாசனையாக உள்ளது என்று அள்ளி பூசிக்கொண்டு திரிகிறீர்கள். நீங்கள் திரிவது மட்டுமின்றி அனைவரையும் அதையே செய்ய வேண்டும் என்கிறீர்கள் இவரிடம் என்ன நியாயத்தை கண்டுவிட்டீர்கள் என்று தெரியவில்லை..

ஜெயா பேர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று சொன்னார் என்றால் இவர் மழை விட்டுவிட்டது தூவானம் விடவில்லை என்றார் இதில் என்ன நியாயத்தை கண்டுவிட்டீர்கள். இரண்டு பேரும் நம் மக்கள் சாவதை சாதரணமாகத்தான் எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால் கருணா சொன்னதில் என்ன பெரிய நியாயம் இருக்கிறது. அதுவும் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று ஒரு நான்கு மணிநேரம் கடற்கரையில் அடிக்கும் காற்று பத்தாது என்று ஏர் கூலர் ஒன்னுக்கு இரண்டாக வைத்துக்கொண்டு பேரனின் நேரடி வர்ணணையில் காற்றுவாங்கிவிட்டு என்னால் தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று மார்தட்டி கொண்டார் அதன் பிறகும் போர் தொடர்ந்ததை சுட்டி காட்டினால் மழைவிட்டுவிட்டது தூவானம் விடவில்லை என்றார். எதையும் எதையும் உவமானமாக எடுத்துக்கொள்வது என்று ஒரு வரைமுறையே இல்லாமல் சொல்லுகிறார் அதையும் நீங்கள் ஆமாம் சாமி தூவானத்தால் தான் மக்கள் செத்தார்கள் என்று எடுத்துக்கொள்கிறீர்கள். மழை அதிகமாக பேயும் சிரபுஞ்சியில் கூட தூவானம் பெயும் பொழுது மழை பெய்து முடிந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் மக்கள் ஆனால் அங்கு நடந்தது என்ன பல உயிர்கள் போனது அதற்கு தூவானத்தை உவமையாக சொன்னவரின் மூஞ்சியில் காறித்துப்பாமல் ஆஹா தூவானம் என்று சிலாகிக்கிறீர்கள்.

நம் தமிழினத்திற்கு என்ன செய்து கிழித்துவிட்டார் இவர், 8 உலகதமிழ் மாநாடுகளை நடத்தியவர்களை பிரித்து தனக்கு என்று உலகதமிழ் செம்மொழி மாநாடு என்று நடத்தியதை விட. நம் தமிழ் கவிஞர்களும் எழுத்தாளர்களையும் ஒன்றிணைப்பது கடினமான விசயம். எந்த அரசியல் வியாதியின் உதவியும் இல்லாமல் இத்தனை வருடம் தனித்துவத்துடன் தமிழறிங்கர்கள் மட்டும் விளங்கிய உலகதமிழ் சங்கத்தை அதில் இருந்தவர்களை தனது சொந்த தேவைக்காக பிரித்து உலக தமிழ் செம்மொழி மாநாடு என்று நடத்தி தன்னை புகழ் பாடும் ஒரு அரங்கமாக நடத்தியதை தவிர. ஏன் இதே உலகதமிழ் செம்மொழி மாநாட்டை பிரான்ஸிலோ கனடாவிலோ நடத்தி காட்டியிருக்க வேண்டியது தானே இல்லை இனிமேலாவது நடத்த முடியும் என்று நினைக்கிறீர்களா. நாம் இருக்கும் நாட்டில் ஒரு மொழிக்கு மாநாடு நடத்துவதை விட மற்ற மொழிகள் பேசும் நாட்டில் நடத்தி அங்கும் நம் மொழியின் பெருமையை உணர்த்தி காட்டியவர்கள் உலகதமிழாராய்ச்சி மையம் அவர்களை துண்டாடியது தான் இந்த உலகசெம்மொழி மாநாடு. இது தான் அவருக்கு கை வந்த கலையாயிற்றே ஏற்கெனவே விடுதலைக்காக போராடிய குழுக்களுக்கும் புகுந்து தனது தேவைக்காக விளையாடியதை பார்த்தவர்கள் தானே நாங்கள். பாவம் சபா கோடாலி காம்பை கண்பார்வை அற்றோர்க்கு வழிகாட்ட உதவும் கம்பாக நினைத்துவிட்டார்.

அன்னை வைத்தியத்திற்காக வந்தார் திருப்பி அனுப்பினது ஏன் என்று கேட்டால் ஜெயலலிதா எழுதிய கடிதம். இதே போல் தான் ஜெயா பாலசிங்கம் அண்ணாவையும் திருப்பி அனுப்பினார் என்கிறீர்கள். அன்னை வந்த பொழுது ஜெயா ஆட்சியில் இல்லை கருணா தான் இருந்தார் காவல்துறை அவரின் அமைச்சகம் ஆனால் எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார். ஆனால் விமான நிலையத்தில் ஜாங்கிட்டு மட்டும் எப்படி வந்தார் என்று தெரியவில்லை. புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி கொண்டு ஆனால் இயக்கத்தின் மீதான தடை தொடர்ந்து கொண்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டுமுறை தடை நீட்டிக்கப்படுள்ளது அப்பொழுது தமிழக அரசிடம் அறிக்கை கேட்கவில்லையா. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு தானே தடை செய்யவேண்டும் என்று வாதிடுகிறது, அப்பொழுதெல்லாம் எங்கே உட்கார்ந்து திரைகதை வசனம் எழுதிக்கொண்டிருந்தார். அன்னை தமிழகம் வந்தது சிலரின் அரசியல் என்கிறீர்கள் அவர் தன் மகள் இருக்கும் கனடா சென்றிருக்கலாம், மூத்தமகன் இருக்கு ஐரோப்பா சென்றிருக்கலாம் தான் பெற்ற பிள்ளைகள் இருக்கும் ஊர்களை விட்டுவிட்டு தமிழகம் ஏன் வந்தார் என்று கூட யோசிக்க தோன்றவில்லையா உங்களுக்கு. ஏன் திருப்பி அனுப்பிய பொழுதும் கனடாவோ இல்லை ஐரோப்பாவோ செல்லாமல் ராஜபக்சேவின் பிடியில் இருக்கும் ஈழத்திற்கு தானே சென்றார் அதுவும் ஏன் என்று யோசிக்க தோன்றவில்லையா உங்களுக்கு. அவரின் கடைசிகாலத்தை ஈழத்திலோ இல்லை தமிழகத்திலோ கழிக்க விரும்பியவர் தமிழகத்தின் வாயிலுக்கு வந்தபொழுது கதவை சாத்திவிட்டு அவன் காரணம் இவன் காரணம் என்று சொல்லும் கயமைத்தனம் புரியவில்லையா. ஜெயா தான் இவ்வாறு செய்தார் என்றால் இவரும் தடைசெய்ய ஆதரவாக வாதடுகிறார் அது இந்திய இறையாண்மை என்று சொல்லுகிறீர்கள் எனய்யா ஊருக்கொரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா.

கடற்கரையில் காற்றுவாங்கியவர் போரை நிறுத்திவிட்டார் என்று சொல்லும் பொழுது தோழன் முத்துக்குமார் போரை நிறுத்த தன் உயிரையே கொடுத்தான் அதை கூட எந்த அளவிற்கு மூடிமறைக்க முடியுமோ அப்படி செய்தவர் தான் இந்த கருணா. ஏன் கன்னட கவிஞன் ஒருவனுக்கு தமிழகத்தில் சிலை வைப்பார் ஆனால் இனத்துக்காக உயிர் துறந்த முத்துகுமரனுக்கு சிலைவைக்க அனுமதிக்க மாட்டார். எந்த மொழி போராட்ட தியாகிக்கு இவர் சிலை திறந்து வைத்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா. ஊரில் இருப்பவனை எல்லாம் ஆரிய திராவிட போர் தமிழை அழிக்க நினைக்கிறார்கள் என்று சொல்லி ஏற்றிவிட்டு இரயில் வராத தண்டவாளத்தில் மிகவும் சாமர்த்தியமாக தலையை வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு. இவரின் பேச்சை கேட்டு தீக்குளித்த மொழி போராட்ட தியாகிகளின் உடலில் எரிந்த தீயில் குளிர்காய்ந்தவர் இன்று வரை எத்தனை மொழி போராட்ட தியாகிக்கு சிலை வைத்திருக்கிறார்.

ஏன் இன்று வரை தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் கொலை செய்கிறது என்றால் நமது மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று சொல்கிறார். இவரின் பேராசை தான் நன்றாக தெரியும் உயிரை பணயம் வைத்து கடலில் ஒருவேளை கஞ்சிக்காக போராடுபவனை பார்த்து இந்த மாடிவீட்டு ஏழை சொல்கிறார் பேராசை பிடித்தவர்கள் என்று. கனிமொழி கைது என்று நாடகம் ஆடியவர், இனிமேல் பிரச்சனை இருக்காது என்றார், மேலும் தொடர்ந்தால் என்ன செய்வது என்று கேட்டதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன் பிறகும் தொடர்கிறது ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மத்திய அரசையும் நிர்பந்திக்கவில்லை. கூட்டணி அரசியலுக்காக சீட்டு பேரத்திற்காக இராஜினாமா நாடகம் என்று எல்லாம் நடத்த மட்டும் செய்கிறார். அவரின் சொந்த கட்சி நலத்திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் ஆனால் நம் தமிழின மீனவர்களின் வாழ்வாதரத்திற்காக இன்று வரை எந்த முடியையும் புடுங்கவில்லை..

இதையெல்லாம் பார்த்த பிறகு இன்னும் நீங்கள் ஜெயாவை விட இவர் மேல் என்று சொல்லுவீர்கள் என்றால் நிச்சயமாக அவருக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழர் நலனைப்பற்றியோ தமிழினத்தை பற்றியோ பேச எந்த அறுகதையும் இல்லை அவர் தன் பெண் கனிமொழியை வைத்து அரசியல் வியாபரம் செய்வது போல் உங்கள் வீட்டில் உள்ளவர்களை வைத்து நீங்களும் செய்யுங்கள் எங்களை பற்றி கவலைப்பட வேண்டாம் எங்களுக்கு கருணாவும் தேவை இல்லை ஜெயும் தேவையில்லை.

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து. - குறள் 828

பொருள் - சிலர் நம்மை நம்பவைப்பதற்கும், நம்மிடம் இரக்கம் பெறுவதற்கும் அழுது கண்ணீர் விடுவார்கள். அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். ஏன் என்றால் அவர்கள் அழுது வடிக்கும் கண்ணீரிலும் கெட்ட எண்ணம் மறைந்திருக்கும், கூப்பிய கையினுள்ளே மறைந்திருக்கும்
கொலைக்கருவியைப் போல. ஆகவே நட்புக்கொள்ளவரும் எல்லோரையும் நம்பாதீர்கள் என்று எச்சரிக்கிறார்.

இது தான் கருணாவின் நிலை, ஜெயா எதிரி, எதிரி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எதிர்த்து நின்று போராடும் வலிமை தமிழர்களுக்குண்டு. ஆனால் துரோகியால் தமிழினம் பட்ட துன்பங்கள் எட்டப்பன் காலத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் துரோகியை நம்பி சோடை போவது கூடாது என்பதை இனிமேலாவது நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

திரும்பவும் சபா இருந்திருக்க வேண்டும் சகோதர யுத்தம் என்று உளறி கொட்டுவதற்கு முன் சென்ற வருடம் சபாவின் தாயார் சென்னையிலே மரணமடைந்தார் அதற்கு தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நின்ற தோழனின் தாயார் மறைவிற்கு சென்று இருக்க வேண்டாம், ஒரு இரங்கற்பா பாடினாரா உங்கள் தலைவர் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இல்லாவிடில் தாயாரை வைத்தும் அரசியல் செய்யும் அவரை போல நீங்களும் உங்கள் தொழிலை தொடருங்கள்..

நன்றி - இனியொருவிலிருந்து பாலாவின் கார்டூன்கள் மற்று ஈழம்5.கொம்

No comments:

Post a Comment