Sunday, February 27, 2011

ஜால்ரா சத்தம் காது ஜவ்வை கிழிக்கிறது

ஒரு தொலைகாட்சிகாரன் இந்தியாவிலேயே சிறந்தமாநிலமுனு சொல்லிப்புட்டானு வரிந்து கட்டிக்கொண்டு குத்தாட்டம் போடுவது சகிக்கலை. ஊருக்குள்ளே இருந்துகிட்டே ஒன்னுமே நடக்கவில்லை என்பது போல் காலரை தூக்கிவிட்டுக்குட்டு இந்தியாவின் சிறந்த மாநிலம் என்று பீத்திக்கொள்வது அதுவும் கலைஞரின் ஆட்சியில் தான் தமிழகமும் தமிழனும் முன்னேறியிருக்கிறான் என்று மார்தட்டிக் கொள்வது.

தமிழ்நாடு காவல்துறை இணையத்தில் குற்றங்களின் புள்ளிவிவர பட்டியல் போட்டு இருக்கிறார்கள் அதை பார்த்தால் வருடா வருடம் குற்றங்கள் அதிகமாகி கொண்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும் சாதனை படைத்துக்கொண்டுதான் உள்ளது தமிழகம். பாலியல் குற்றங்களான கற்பழிப்பு, பாலியல் தொந்தரவு போன்ற குற்றங்கள் குறைந்திருந்தாலும். பெண்கள் கடத்தல் குற்றங்கள் மிக அபரிமிதமான வளர்ச்சி பெற்றிருக்கிறது. என்ன செய்வது வெட்கப்பட வேண்டிய விசயத்தை கூட உங்களை போன்றவர்களுடன் வாழ்வதால் அபரிமிதமான வளர்ச்சி என்று சொல்ல தான் தோன்றுகிறது.

மேலே இருக்கும் புள்ளிவிவரங்கள் 2009 மற்றும் 2010 க்கும் உள்ள குற்றங்களின் வித்தியாசம். இதில் ஆதாயத்திற்காக கொலை செய்யும் குற்றமும், திருட்டு குற்றமும் மட்டும் தான் குறைந்துள்ளது. அதை தவிர ஆட்கடத்தல், வழிப்பறி போன்ற பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் குற்றங்கள் குறையவில்லை. அதிலும் வழிப்பறி கொள்ளை 36% வளர்ச்சி அடைந்துள்ளது, குழுவாக சேர்ந்து கொண்டு ரவுடி கூட்டங்கள் செய்யும் குற்றங்களும் அதிகமாகி உள்ளது(Dacoit). வீட்டை விட்டோ வெளியிலோ அல்லது வீட்டிற்குள்ளோ தமிழக மக்கள் தைரியமாக வாழலாம் என்று பாதுகாப்பில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில் இந்த புள்ளிவிவரங்கள் சொல்லவில்லை..

வேண்டுமென்றால் மற்ற மாநிலங்களின் குற்றங்களை விட தமிழ்நாட்டில் குறைவாக இருக்கலாம் அதனால் ஐபிஎன் தொலைகாட்சி பாதுகாப்பான மாநிலம் என்று சொல்லிவிட்டது போலும். ஆனால் அதே ஐபிஎன் சுற்றுசூழல் பாதுகாப்பில் பெரிய மாநிலங்கள் யாருக்கும் விருதை வழங்கவில்லை. எல்லா மாநிலங்களும் அதில் பின் தங்கியிருப்பதால் சுற்றுபுறசூழல் விருதை யாருக்கும் தரவில்லை போலும். இந்த தொலைகாட்சி கொடுத்திருக்கும் இந்த விருதுகள் இருக்கும் சாக்கடையில் எந்த சாக்கடையில் கொசு உற்பத்தி, நாற்றம் குறைவாக இருக்கிறது என்று பார்த்து அந்த சாக்கடைக்கு விருது கொடுத்திருக்கிறது இதை பெருமையாக எடுத்துக் கொள்ள முடியாது சாக்கடை சாக்கடை தான்.

மேலும் ஒரு மாநிலத்தின் அத்தியாவசிய தேவைகளான முன்னேற்றங்களை நீண்ட நெடுங்காலத்துக்கு பலன் கொடுக்க கூடிய அதாவது சில துறைகளில் முன்னேற்றம் என்பது இன்றைய தேவைகளையும் பின்னாளிலும் பலன் தரக்கூடிய மற்றும் என்றும் அந்த மாநிலத்தை எப்பொழுதும் முன்னிலையில் வைக்க கூடிய கட்டமைப்பு வசதிகள் (குஜராத்), கல்வி (கேரளா), வேலைவாய்ப்பு (ஆந்திரா) போன்றவற்றில் ஒன்றில் கூட தமிழகம் விருதை பெறவில்லை. இவைகள் இன்று மட்டுமல்ல பிற்காலத்திற்கும் மிகவும் பயன் தரக்கூடிய விசயங்கள்.

ஏன் உங்கள் தலைவரின் இலட்சியமான குடிசைவீடுகளே இல்லாத தமிழ்கத்தை அமைப்பது அதாவது ஏழ்மையை ஒழிப்பது என்பதில் கூட சட்டீஸ்கர் எனும் மாநிலம் தான் முன்னிலை வகிக்கிறது. குடிசைகளை எடுத்துவிட்டு இலவசமாக காங்கிரீட் வீடுகளை கட்டி கொடுப்பதால் ஏழ்மை ஒழிந்துவிட்டது என மார் தட்டிக்கொள்ள முடியாது. வேண்டுமென்றால் பல்லு போன கிழவிக்கு அலங்காரம் பண்ணி மணமேடையில் ஏற்றிவைத்தால் போல் இருக்கும் அவ்வளவே.

உங்கள் தலைவர் எதற்கு ஏழ்மையை ஒழிக்க போகிறார், ஏழைகள் அவருக்கு என்றும் வேண்டுமே அப்பொழுது தானே "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்" என்று வசனம் பேச முடியும். அவர் பெயரில் இருக்கும் கருணையால் கிடைக்கும் நிதியான பிச்சை காசு அவருக்கு மன திருப்தியையும் மகிழ்வையும் தரலாம். ஆனால் வள்ளுவன் சொன்னது போல்

தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல்.

அதாவது தன் உழைப்பில் சம்பாதித்து தான் சமைத்து உண்ணும் கூழ் தெளிந்த நீர் போல் இருந்தாலும் தன் உழைப்பினால் கிடைத்த அந்த உணவை உண்ணுவதை போல் இனிமை ஏதும் இல்லை என வாழ விரும்பும் தமிழனுக்கு இல்லை. இதை உங்களின் வாழும் வள்ளுவனுக்கு நீங்களாவது எடுத்து சொல்லி புரியவையுங்கள்.

ஆமாம் ஆரிய திராவிட போர் என்று இப்பொழுது தான் வட இந்திய ஊடகங்களை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் போது ஒரு பிடி பிடித்தார், அதில் ஒரு ஊடகமான ஐபிஎன் எதோ விருது கொடுக்கிறது என்றவுடன் வாலை ஆட்டிக்கொண்டு சென்று வாங்கி வருகிறாரே ஏன்?? ஆரிய திராவிட போர் முடிந்துவிட்டதா?? இல்லை ஆரியர்கள் திருந்தி விட்டார்களா?? இல்லை இவருக்கு மானம் மரியாதை என்ற ஒன்று கிடையாதா??

Saturday, February 26, 2011

சாகித் உத்தம் சிங்கும் இந்திய அரசும்


சாகித் உத்தம் சிங் இந்த பெயரை கேட்டால் யார் அது நம்ம ஹிந்திபட கதாநாயகன் சாகித்தா என்று தான் கேட்போம். ஆனால் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட இன்னுமொரு தியாகி என்றே சொல்லலாம்.

உத்தம் சிங் 1899ல் பஞ்சாப்பில் உள்ள ஒரு சுனம் எனும் கிராமத்தில் தலால் சிங்க்குக்கு மகனாக பிறந்தார். தலால் இரயில்வே கேட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தந்தை வைத்த பெயர் சேர் சிங். சேர் என்றால் இந்தியில் சிங்கம் என்று அர்த்தம், அவர் அப்பாவிற்கு தன் மகன் பிறந்தபொழுதே தெரிந்துவிட்டது இவன் பெரிய ஆளாக வருவான் என்று. ஆனால் சேர் சிங் இரண்டு வயதில் தன் தாயை இழந்தார், 8 வயதில் தந்தையையும் இழந்து. அமிர்த்சரில் ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தார். அனாதை விடுதியில் இவரது பெயரை உத்தம் சிங் என்று மாற்றினார்கள். இவரது அண்ணனும் 1917ல் இறந்துவிட்டார் இவருக்கு 18 வயதாகும் பொழுதே. அதன் பிறகு இந்த இந்திய நாடே இவருக்கு இருந்த ஒரே சொந்தமாகி போனது. அதன் பிறகு தனது சொந்தமான இந்தியாவுக்காக வாழ்ந்தார் உத்தம் சிங். 1919ல் தனது பள்ளி படிப்பை முடித்து அனாதை விடுதியில் இருந்து வெளியில் வந்து தனது வாழ்க்கையை தொடங்கினார்.

ஆனால் அன்று அவர் தொடங்கிய வாழ்க்கை அந்த வருடம் ஏப்ரல் மாதம் வேறு வடிவம் எடுக்கும் என்பது அவருக்கு தெரியவில்லை. 1919ம் வருடம் ஏப்ரல் மாதம் 13ம் நாள் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கூட்டத்தில் 20000 அப்பாவி மக்களுக்கு வெயிலின் தாக்குதலை குறைக்க தண்ணீர் கொடுத்து கொண்டிருந்தார். மாலை 5.15 க்கு அனைத்தும் தலைகீழானது ஜெனரல் ரெஜினாலட் டயர் இவர்கள் அனைவரும் கூடியிருந்த மைதானத்திற்கு இருந்த ஒரே வழியினை அடைத்துக்கொண்டு வந்து நின்று. எந்தவித முன்னறிவுப்பும் இன்றி கூடியிருந்த 20000க்கும் அதிகமான மக்களின் மீது குண்டு மழை பொழிந்தான். இதுவே இந்திய சுதந்திர போராட்டத்தில் நாம் அனைவரும் படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை. இதில் தப்பி பிழைத்தவர் தான் இந்த உத்தம் சிங்.

இந்த படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் கணக்கு 379 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் 337 பேர் ஆண்கள், 41 சிறுவர்கள், ஒரு ஆறுவார கை குழந்தை என்றும் கணக்கு காட்டியது அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம். ஆனால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். குண்டுகளில் இருந்து தப்பிக்க மைதானத்தில் இருந்த கிணற்றில் குதித்தவர்களில் இறந்து போனவர்களின் உடல்களின் எண்ணிக்கையே 120யை தொட்டது. பிரிட்டிஷ் அரசாங்க கணக்கின் படி மொத்தம் 1500 குண்டுகள் சுடப்பட்டதாக சொல்கிறது.

இந்த சம்பவத்தை பற்றி சொல்லும் பண்டிட் மதன் மோகன் மாலவிய, லாலா கிரிதரி லால் போன்றவர் சொல்லுவது 1000த்துக்கும் அதிகமான மக்கள் இறந்துவிட்டனர் என்று. ஏன் அப்பொழுது அமிர்த்சர் மருத்துவமனையில் சிவில் சர்ஜனாக இருந்த மருத்துவர் ஸ்மித் சொல்லுவது இவர்கள் சொல்லுவதை விட அதிகம். 1800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்கிறார். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் இதில் அடிபட்டவர்களை காப்பாற்ற முடியவில்லை அதனால் மேலும் உயிர் சேதம் அதிகமானதாக சொல்லுகிறார்கள். இன்று வரை ஜாலியன் வாலாபாக்கில் மரணித்தவர்களின் எண்ணிக்கையோ இல்லை காயம்பட்டவர்களின் எண்ணிக்கையோ முழுமையாக தெரியவில்லை. ஆனால் அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட ஒருவர் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதை நிருபித்தவர்தான் இந்த உத்தம் சிங்.

1919ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பலிவாங்குவது என்று முடிவெடுத்திருக்கிறார் உத்தம் சிங். இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெனரல் டயர் இங்கிலாந்து திரும்பினார் அவருக்கு ஒரு மணிபர்ஸில் 26000 ஸ்டெர்லிங்க் பரிசாக கொடுக்கப்பட்டது. அப்பொழுது பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராக இருந்தவர் மைக்கேல் டயர் இவர் ஜெனரல் ரெஜினாலட் டயரின் நடவடிக்கையை ஆதரித்தவர் மேலும் இவரும் சேர்ந்து தான் இந்த படுகொலைக்கு திட்டம் தீட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இருவரும் இங்கிலாந்து சென்றுவிட்டனர் பழிவாங்க முடிவெடுத்த உத்தம் சிங் தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் இறங்கினார்.

1920ல் நைரோபி சென்றார் அங்கிருந்து அமெரிக்கா செல்ல முயற்சித்து முடியாமல் 1921ல் இந்தியா திரும்பினார். அதன்பிறகு இந்தியாவில் சுதந்திரத்திற்காக போராட தொடங்கினார் 1924ல் அமெரிக்கா சென்று மூன்று வருடங்கள் அங்கிருந்து புரட்சிக்கு வித்திட்டார். 1927 ஜூலை மாதம் மேலும் 25 பேர்களுடன் இந்தியா திரும்பினார், அப்பொழுது அமெரிக்காவில் இருந்து ரிவால்வார்களும் குண்டுகளும் பெருமளவு வாங்கி வந்துள்ளார். 1927 ஆகஸ்ட் மாதம் ஆயுதங்களுடன் பிரிட்டிஸ் அரசிடம் மாட்டி சிறைச்சாலை சென்றார். இவருக்கு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறைசாலையில் இருந்தார்.

1931ல் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட பொழுது இவரும் அதே சிறைச்சாலையில் தான் இருந்து இருக்கிறார். சிறை தண்டனைக்கு பிறகு வெளியில் வந்து விளம்பர பலகை வரைபவராக வாழ்க்கையை தொடர்ந்தார். ஆனால் இவரை பிரிட்டிஷ் காவல்துறை கண்காணித்துக்கொண்டே இருந்தது 1933ல் அனைவரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு காஷ்மீர் வழியாக இத்தாலி சென்று அங்கு 3 மாதங்கள் தங்கியிருந்துவிட்டு 1934ல் இலண்டன் சென்றடைந்தார். இதனிடையில் 1927ல் ரெஜினால்ட் டயர் மரணமடைந்துவிட்டார். ஆனால் மைக்கல் டயரை விடுவதில்லை என்ற ஒரே குறிக்கோளுடன் இலண்டன் அடைந்த உத்தம் சிங் காலம் கனிவதற்காக காத்திருந்தார்.

அந்த நாளும் வந்தது மார்ச் 13ம் தேதி 1940 இலண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இஸ்ட் இந்தியா கம்பெனியும் ராயல் சென்ட்ரல் ஆசியாவும் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் முடிந்த பிறகு அங்கு பேச வந்திருந்த மைக்கேல் டயரை சுட்டு கொன்றார். மேலும் அப்பொழுது இந்தியாவிற்கான ஸ்டேட் செகரட்டரியாக இருந்த லார்ட் ஜெட்லான்ட்டையும் சுட்டார். ஜெட்லான்ட் காயத்துடன் தப்பிவிட்டார் உத்தம் சிங் சுட்டுவிட்டு தப்பிக்க முயற்சிக்காமல் அங்கேயே நின்றார். காவலர்கள் வந்து அவரை பிடித்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் வழக்கு வந்த பொழுது உத்தம் சிங் நான் செய்த செயலுக்காக வருத்தப்படவில்லை, மேலும் இந்த தண்டனை மைக்கேல் டயருக்கு கொடுக்க படவேண்டியதே என்று தெரிவித்தார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு ஜூலை மாதம் 31ம் தேதி 1940ல் துக்கிலடப்பட்டு இலண்டனிலேயே கொல்லப்பட்டார்.

மைக்கேல் டயர் கொலை செய்யப்பட்டது இந்தியாவிலும் அரசியல்வாதிகளால் விவாதிக்கப்பட்டது காந்தி முதற்கொண்டு அனைவரும் இதற்கு கண்டணம் தெரிவித்தனர் 1940ல். நேரும் அதே சமயத்தில் இந்த சம்பவத்திற்கு மைக்கேல் டயர் கொல்லப்பட்டது தவறு இது தவறான முன்னுதாரணம் என்றார். ஆனால் அவரே 1962ல் இவரே முழுவதுமாக மாறி சொன்னார் அதுவும் சிறந்த சுதந்திர போராட்ட வீரகள் பகத்சிங், ராஜ்குரு போன்றவர்களுக்கு வழங்கப்படும் பட்டமான சாகித் என்ற பட்டத்தை வழங்கி. சாகித் உத்தம் சிங்கின் எதிரியின் மூக்கின் கீழ் சென்று நடத்திய போராட்டமே இந்தியாவின் விடுதலைக்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும் என்றார்.

இத்துடன் முடிந்துவிடவில்லை 1940ல் தூக்கிலடபட்டு இலண்டனில் புதைக்கப்பட்ட சாகித் உத்தம்சிங்கின் உடல் 1974 பஞ்சாபை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவின் முயற்சியாலும் இந்திய அரசின் முயற்சியாலும் இந்தியா கொண்டு வந்து சேர்க்கப்பட்டது அப்பொழுது அந்த மாவீரனின் உடலை வரவேற்க அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சங்கர் தயாள் சர்மா, அப்போதைய பஞ்சாப் மாநில முதல்வர் ஜெயில் சிங் (இருவரும் பின்னாளில் ஜனதிபதியாக பதவி வகித்தார்கள்) அப்பொழுதைய பிரதமர் இந்திரா காந்தியும் விமானநிலையம் வந்து வரவேற்றார்கள்.

சாகித் உத்தம் சிங் ஜாலியன் வாலாபாக்கில் தனது மக்களை சுட்டு கொன்ற ஜெனரல் டயர் எந்தளவுக்கு எதிரியோ அதே போல் அன்று கவர்னராக இருந்த மைக்கேல் டயரும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பொறுப்பு என்றே நினைத்தார். எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்பது தமிழில் நாம் அறிந்த ஓர் பழமொழி அதையே சாகித் உத்தம் சிங் செய்தார். அதாவது அம்பான ஜெனரல் டயர் கொல்லப்படுவது எவ்வளவு முக்கியமோ அதற்கு காரணமான கவர்னர் மைக்கேல் டயருக்கு தண்டனை கொடுப்பதே அதைவிட முக்கியம் என்று முடிவெடுத்தார் அவரை முடிக்கும் வரை தொடர்ந்து போராடி வெற்றியும் கண்டார்.

இப்படி தன் நாட்டில் செய்யப்பட்ட படுகொலைக்காக மற்றொரு நாட்டுக்கு சென்று காரணமான கவர்னரை சுட்டு கொன்றவருக்கு மரியாதை கொடுத்தது தான் இந்திய இறையாண்மை.. ஒருவனின் மரணத்திற்காக ஒரு இனமே அழிக்கப்படுகிறது வாழ்க பொந்திய பொறையாண்மை..

Sunday, February 20, 2011

சுவத்தில் ஒட்டும் டீவி மாதம் ஒன்னு நாங்க தருகிறோம்

Posted Image

கடந்த 19-02-2011 சனிக்கிழமை அன்று தகவல்தொழில் நுட்பதுறையை சார்ந்தவர்களால் நடத்தப்படும் Savetamils அமைப்பின் மூலமாக தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை நடவடிக்கை எடுக்க கோரியும் உண்ணாவிரதபோராட்டம் நடத்தினார்கள். சென்னையை சேர்ந்த கணிணி தொழில்நுட்பதுறையில் பணிபுரியும் தமிழுணர்வாளர்கள் எந்த கட்சியின் சார்பும் இன்றி நடத்திய போராட்டம். போராட்டத்திற்கு ஒரு 50லிருந்து 80 பேர் வந்திருந்த போதிலும் சென்ற வருடம் கடற்கரையில் ஒருவர் ஏர்கூலர் இரண்டை வைத்துக்கொண்டு நடத்திய போராட்ட நாடகம் போல் இல்லாமல் உண்மையான உணர்வாளர்கள் தங்களின் உணர்வுகளை வெளிபடுத்தும் வகையில் வெற்றிகரமாக நடந்தேறியது.

மிகவும் அற்புதமான விசயம் இராமேஸ்வரத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மீனவ சமூக மக்களை அழைத்துவந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை நேரடியாக சொல்ல கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது. உண்ணாவிரத போராட்டத்தை கவிஞர். இன்குலாப் தொடங்கி வைத்தார். திருமதி. இருதயமேரி, திருமதி. மோட்சம், திரு. ராயப்பன், திரு. பேட்ரிக், திரு. முருகானந்தம், திரு. அஞ்சப்பன் போன்ற இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதி மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர். அவர்களின் பேசியபொழுது அறிந்து கொண்டவை..

ஒரு மீனவன் இறந்தால் இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது, இதற்கான வழிமுறைகள். அந்த மீனவன் இறந்த ஒருவருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதில் காவல் துறையினர் சான்றிதழ் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் காணமல் போனவர்கள் அதாவது இலங்கை கடற்படையால் சுட்டுகொல்லப்பட்டோ இல்லை பிடித்து சென்றவர்கள் விசயத்தில் இம்முறைகளை பின்பற்ற முடியாது. ஒருவர் காணமல் போய் 7 வருடம் கழித்து தான் அவர் இறந்தவராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். ஆனால் ஒருவருடத்திற்குள் நிவாரணத்திற்கு விண்ணபிக்க வேண்டும். காணமல்போனவர்கள் விசயத்தில் இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஒருமுறை இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட ஒரு மீனவரின் வல்லத்தில் இருந்து 52 சுடப்பட்ட குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு சிறு வல்லத்தில் 52 குண்டுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றால் எந்த அளவுக்கு கண்மூடிதனமாக சுட்டிருக்கிறார்கள் என்பது புரியும். இப்படி கண்மூடிதனமாக சுடுவதற்கு காரணம் எதிராளி தன்னை தாக்க வருகிறான் அவனுக்கு முந்தி நாம் அவனை தாக்கி அளிக்கவேண்டும் என்ற நோக்குடன் சுடலாம். ஆனால் இங்கு மீனவர்கள் என்ன ஏ.கே 47 ஆயுதத்துடனா மீன் பிடித்து கொண்டிருக்கிறார்கள். வெறும் மீன்வலையும் மீனை அறுக்கும் சிறு கத்தியும் தானே வைத்திருப்பார்கள், ஒரு சில சிறு கத்திகளுக்கா இத்தனை குண்டுகளை வல்லங்கள் மேல் செலுத்துவார்கள்.

இது நாள் வரை நம் மீனவர்கள் மட்டும் தான் கடல் எல்லையை தாண்டிசெல்கிறார்கள் அவர்கள் வருவதில்லையா என்றால் இல்லை அவர்களும் எல்லை தாண்டி வரத்தான் செய்கிறார்கள் சென்னை காசிமேடு மீனவர்கள் சிலமாதம் முன் சென்னை அருகே 5 சிங்கள மீனவர்கள் படகு பழுதாகி கடலில் தத்தளித்தவர்களை காப்பாற்றி கொண்டு வந்து சேர்த்தனர். அது போல் சிங்கள மீனவர்கள் பலர் சென்னை சிறைசாலையில் இருக்கிறார்களாம். அவர்களுக்கு தினமும் பெட்டிபெட்டியாக பழங்கள் உணவுப்பொருள்கள் என்று இலங்கை தூதரகத்தில் இருந்து வருகிறதாம். இதே சிறைச்சாலையில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் இருந்தால் அவர்களுக்கு எதுவும் வருவதில்லை. ஆனால் நம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டால் நம் தூதரகம் இவ்வாறு எந்த உதவியும் செய்வதில்லை, மேலும் அங்கு சிறையில் கொடுக்கப்படும் உணவுகள் என்று பார்த்தால் வெறும் பன், வாழைப்பழம் என்று ஒரு நாளைக்கு ஒரு முறைதானாம். 9 மாதம் இப்படி சிறையில் இருந்த ஒருவர் இனிமேல் செத்துவிடுவார் என்று விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பி அனுப்பபட்டுள்ளார். மீன்பிடிக்க பீமன் போல் சென்றவர் எலும்புகூடாக திரும்ப வந்திருக்கிறார்.

மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட இந்த கடல் பகுதில் எல்லை தாண்டுவதற்கான பிரச்சனை ஏன் வருகிறது என்று தெள்ள தெளிவாக புரிந்தது. கடற்கரையில் இருந்து 3 நாட்டிகல் அளவுக்கு கட்டுமரங்களை தவிர இயந்திரங்கள் பொருந்தப்பட்ட படகுகள் மீன் பிடிக்க கூடாது அதை தாண்டி தான் செல்ல வேண்டும். கச்சதீவிற்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான தூரம் 13 நாட்டிகல் மைல்கள் இதில் 3 மைல் கழிந்தால் 10 நாட்டிகல் தூரம் உள்ளது இதில் 3லிருந்து 4 நாட்டிகல் மைல்கள் பாறைகள் இருக்கும் பகுதி இதில் வலை விரித்தால் வலை பாறைகளில் மாட்டிக்கொள்கின்றன. எனவே 7 நாட்டிகல் மைலுக்கு அப்பால் தான் மீன் பிடிக்கிறார்கள். இந்த பகுதி நீரோட்டம் அதிகமான பகுதி மிச்சம் இருக்கும் 6 நாட்டிகல் மைலில் மொத்தம் 5000 இராமேஸ்வர்ம் மீன்பிடி படகுகள் மீன்பிடிக்க வேண்டும். வலை விரிப்பதற்கு கூட இடம் இருக்காது வரிசையாக 5000 படகை நிறுத்தினால் இலங்கை கடற்கரைவரை படகுகள் நெறுக்கி அடித்துக்கொண்டு நிற்க வேண்டிய நிலை வரும் இதில் வலை கூட விரிக்கமுடியாது அப்புறம் மீன் எங்கு பிடிப்பது.

மேலும் இந்தியா இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இரண்டுபக்க மீனவர்களும் எந்த எல்லை பாகுபாடும் இன்றி தான் மீன் பிடித்து வந்திருக்கின்றனர். ஒருவருக்கு ஒருவர் உணவுகளை பரிமாறிக்கொள்வது கைலிகளை மாற்றிக்கொள்வதென்று. ஏன் இலங்கை கடற்படை வீரர்கள் மீன் வாங்கி சாப்பிட்டுவிட்டு ஹார்லிக்ஸ் டின் போன்றவற்றை கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றனர். நெடுந்தீவு வரைக்கும் சென்று மீன் பிடித்தே வந்திருக்கின்றனர். 1970ம் ஆண்டு அண்ணா மறைந்தபொழுது இலங்கை மீனவர்களே தமிழக மீனவர்களுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். 1983க்கு பிறகு தான் எல்லை தாண்டுவது என்ற பிரச்சனை எழுந்துள்ளது. இது இனவெறி தாக்குதலா இலலை எல்லை தாண்டியதற்கான தாக்குதலா..

இதில் அரசியல் பேசப்படவில்லை என்று சொல்ல முடியாது. அரசியலும் பேசப்பட்டது கவிஞர். இன்குலாப் கடந்த வருடம் மனிதசங்கிலி போராட்டத்தின் போது மக்கள் எல்லாம் மழையில் கைகோர்த்து நிற்க அரசன் கலைஞரைவிட வயதான பேராசிரியர் மழையில் கைகோர்த்து நிற்க வயதான காரணத்தால் வாகனத்தில் பவனிவந்தார். அதே போல் இளவரசர் ஸ்டாலினும் வயதாக போகிறதென்ற காரணத்தினாலோ இல்லை என்ன காரணமோ தெரியவில்லை அவரும் ரதத்தில் பவனிவந்ததை நினைவு கூர்ந்தார்.

திருமதி. மோட்சம், இராமேஸ்வரத்தை சார்ந்தவர் இவர் அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும் கடைக்கோடியில் இருக்கும் ஒரு குடிமகளாக பேசினார். கலைஞரிடம் எங்களுக்கு இலவச அரிசி வேண்டாம் இலவச டிவி வேண்டாம். கடலுக்கு போய் தொழில் செய்ய வழி செய்து கொடுங்கள் சுவத்தில் ஒட்டும் டிவி மாதம் ஒன்று நாங்கள் உங்களுக்கு வாங்கி தருகிறோம் என்றார்... இது ஒன்று போதும் இன்றைய தமிழக அரசியல்வாதிகளுக்கு மீன்குஞ்சுக்கு நீச்சல் சொல்லிதரவேண்டாம் அது வாழும் நீரைமட்டும் விட்டுவிடுங்கள் அவைகள் வாழ்ந்து கொள்ளும்..

Friday, February 4, 2011

ரொம்ப நேரம் தொங்கிருச்சுப்பா எம் பொண்ணு




தாமதமாகும் நீதி கூட நீதி மறுக்கப்பட்டது தான்.

இங்கு நாம் அனைவரும் தேர்தல் கூட்டணி என்று சில குரங்குகள் ஒரு கூட்டத்தை விட்டு இன்னொரு கூட்டத்திற்கு தாவி குதிப்பதை அழகு என்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம்.. நமது காலடியிலேயே ஒரு உயிர் வலியுடனும் வேதனையுடனும் அனாதையாக போயிருக்கிறது.

கல்லூரிக்கு போவதே பெயரில் இருக்கும் இன்சியலை தவிர பின்னால் இரண்டு எழுத்தை பெருமைக்காக சேர்ப்பதற்காக என்று சிலர் படிக்கும் பொழுது தாய் குப்பையை பொறுக்கியும் தந்தை கால் கடுக்க கட்டி வந்த காலுடன் காவலாளியாய் வேலை பார்த்து படிக்க வைத்தபெண், தன் உயிரை விட்டிருக்கிறாள். அவரின் தாயார் தன் மகள் இறந்ததை சொல்லும் பொழுது கூட அவள் மேல் வைத்திருந்த பாசம் தெரிகிறது. "ரொம்ப நேரம் தொங்கிருச்சுப்பா எம் பொண்ணு" தூக்கு கயிற்றில் இறந்த மகள் உயிர் போனது பெரிதானாலும் அதிக நேரமாக கயிற்றில் தொங்கியிருந்தாள், எப்படி வலித்திருக்கும் என்று எண்ணி அவர் சொல்லும் பாசம் அனைவரின் கண்களையும் குளமாக்கும்.

இது ஒரு புறம் நடக்கிறதென்றால் இதற்கு காரணமானவர்களுக்கு நேற்று மாலை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு புழல் சிறைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரே சமயத்தில் நான்கு பேருக்கும் நெஞ்சுவலி என்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் சிறைக்கு கொண்டு செல்லாமல். மீனவர்கள் திரண்டு வருகிறார்கள் என்று தகவல் வந்த பிறகு இன்று மதியத்திற்கு மேல் புழல் சிறைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இந்த ஆசிரியர்களின் ஒருவரின் கணவர் காவல்துறை துணை ஆய்வாளராம், அது தான் சிறைக்கு கூட கொண்டுசெல்லாமல் மருத்துவமணையில் வைத்து ராஜ உபசாரம் செய்திருக்கிறார்கள்.

இனி இந்த வழக்கும் வருட கணக்காக நடக்கும் ஒவ்வொரு முறையும் பத்திரிக்கையில் செய்தியை படிக்கும் தாயும் தந்தையும் சகோதரர்களும் அந்த பெண்ணுடன் வாழ்ந்த நாட்களை நினைத்து பார்த்து வேதனை படுவார்கள். நாம் நம்முடைய வேலையை தொடர்வோம்...