Friday, February 4, 2011

ரொம்ப நேரம் தொங்கிருச்சுப்பா எம் பொண்ணு




தாமதமாகும் நீதி கூட நீதி மறுக்கப்பட்டது தான்.

இங்கு நாம் அனைவரும் தேர்தல் கூட்டணி என்று சில குரங்குகள் ஒரு கூட்டத்தை விட்டு இன்னொரு கூட்டத்திற்கு தாவி குதிப்பதை அழகு என்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம்.. நமது காலடியிலேயே ஒரு உயிர் வலியுடனும் வேதனையுடனும் அனாதையாக போயிருக்கிறது.

கல்லூரிக்கு போவதே பெயரில் இருக்கும் இன்சியலை தவிர பின்னால் இரண்டு எழுத்தை பெருமைக்காக சேர்ப்பதற்காக என்று சிலர் படிக்கும் பொழுது தாய் குப்பையை பொறுக்கியும் தந்தை கால் கடுக்க கட்டி வந்த காலுடன் காவலாளியாய் வேலை பார்த்து படிக்க வைத்தபெண், தன் உயிரை விட்டிருக்கிறாள். அவரின் தாயார் தன் மகள் இறந்ததை சொல்லும் பொழுது கூட அவள் மேல் வைத்திருந்த பாசம் தெரிகிறது. "ரொம்ப நேரம் தொங்கிருச்சுப்பா எம் பொண்ணு" தூக்கு கயிற்றில் இறந்த மகள் உயிர் போனது பெரிதானாலும் அதிக நேரமாக கயிற்றில் தொங்கியிருந்தாள், எப்படி வலித்திருக்கும் என்று எண்ணி அவர் சொல்லும் பாசம் அனைவரின் கண்களையும் குளமாக்கும்.

இது ஒரு புறம் நடக்கிறதென்றால் இதற்கு காரணமானவர்களுக்கு நேற்று மாலை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு புழல் சிறைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரே சமயத்தில் நான்கு பேருக்கும் நெஞ்சுவலி என்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் சிறைக்கு கொண்டு செல்லாமல். மீனவர்கள் திரண்டு வருகிறார்கள் என்று தகவல் வந்த பிறகு இன்று மதியத்திற்கு மேல் புழல் சிறைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இந்த ஆசிரியர்களின் ஒருவரின் கணவர் காவல்துறை துணை ஆய்வாளராம், அது தான் சிறைக்கு கூட கொண்டுசெல்லாமல் மருத்துவமணையில் வைத்து ராஜ உபசாரம் செய்திருக்கிறார்கள்.

இனி இந்த வழக்கும் வருட கணக்காக நடக்கும் ஒவ்வொரு முறையும் பத்திரிக்கையில் செய்தியை படிக்கும் தாயும் தந்தையும் சகோதரர்களும் அந்த பெண்ணுடன் வாழ்ந்த நாட்களை நினைத்து பார்த்து வேதனை படுவார்கள். நாம் நம்முடைய வேலையை தொடர்வோம்...

No comments:

Post a Comment