Sunday, February 8, 2015

சில்லுவண்டுகளுக்கு பதில் - தமிழக எல்லைப் போராட்டமும் பெரியாரும்


எல்லைப் போராட்டத்தில் திராவிடம் துரோகம் இழைத்துவிட்டது என்று குதியோ குதி என்று குதிக்கிறார்கள் இங்கே சிலர்.  திராவிட இயக்கத்தைப்பற்றிய எந்தவிதமான அடிப்படை அறிவும் இவர்களிடம் இல்லை என்பதை நன்றாக எடுத்துக் காட்டுகிறது இவர்களின் இந்த குதியாட்டம். முதலில் பெரியார் ஏற்படுத்தியது நீதிகட்சியோ திராவிடர் கழகமோ அல்ல, சுயமரியாதைக் கழகமே. அதன் பின்னர் நீதி கட்சியினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதன் தலைமையை ஏற்றுக் கொண்டார். பின்னால் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நீதிகட்சியை தேர்தல் அரசியலில் இருந்து விலக்கி திராவிடர் கழகம் என்ற அமைப்பாக மாற்றினார். 1938ல் சென்னை மாகாணமாக இருந்த பொழுதே தமிழ்நாடு தமிழர் என்ற முழக்கத்தை மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதி என்று அனைவருடன் இணைந்து முன்னெடுத்தார்.

இந்திய சுதந்திரத்தினை குறித்த காலகட்டங்களில் இந்தியாவிற்குள் இல்லாத சுதந்திர திராவிடஸ்தான் என்று தனி நாட்டையே வலியுறுத்தி வந்தார், இதற்காக சர். ஏ.டி.பன்னீர்செல்வம் லண்டன் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள செல்கிற வழியில் விமானவிபத்தில் இறந்தார். சென்னை மாகணத்தை ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திர நாடாக தனி நாடாக பெற வேண்டும் என்றே விரும்பினார், இந்தியத்தின் அடிமைநாடாக இருக்க விரும்பவில்லை. அதன்பிறகு இந்திய சுதந்திரத்தின் ஊடாக சென்னை மாகாணம் இந்தியத்தின் அடிமையான பிறகு தொடர்ந்து சுதந்திரத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்தவர் தான் பெரியார்.

இந்த காலகட்டங்களில் தான் மொழிவழி மாநிலக் கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது காங்கிரஸ் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மொழிவழி மாநிலக் கோரிக்கை நேரு பதவிக்கு வந்த பிறகு தள்ளி வைக்கப்படுகிறது. மொழிவழியாக இப்பொழுது மாநிலங்களை பிரித்தால் பிற்காலத்தில் நாட்டின் பிரிவினைக் கோரிக்கையாக வலுப்பெறக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்களும் இதை விரும்பாமல் இருந்துள்ளனர். ஆனால் ஆந்திராவில் எழுந்த வீரமிகு போராட்டத்தின் விளைவாக ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது அதன் பிறகு மற்ற பகுதிகளை குறித்த மாநிலப் பிரிவினையையும் மத்தியில் ஆண்ட நேரு அரசாங்கம் தவிர்க்க தன்னாலன அனைத்து முயற்சிகளையும் செய்த்து. அப்பொழுது தட்ஷிணப் பிரதேசம் என்ற ஒரு திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அதாவது திருவனந்தபுரம், கொச்சி சமஸ்தான்ங்கள், சென்னை மாகனம், மங்களூர் பகுதிகள் என்று அனைத்தையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் என்று அறிவிப்பதற்கு முயற்சி நடந்தது. இதை பெரியார் முற்றிலுமாக மறுத்தார் தமிழ்நாடு என்று மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிகையையும் வைத்தார். இதை காமராஜரிடம் தெரிவித்து காமராஜரும் பெரியார் தட்சிணப்பிரதேசத்தை எதிர்க்கிறார் என்ற செய்தியை நேருவிடம் கொண்டு சேர்த்தார். ஆனால் தமிழக எல்லைப் போராட்ட வரலாறு என்று சொல்லப்படும் மா.பொ.சி புத்தகத்தில் இருந்து மற்ற அனைத்து புத்தகங்களிலும். தமிழக எல்லைப் போராட்ட வரலாற்றினுடாக இந்த தட்சிணப் பிரதேச வரலாறு மறைக்கப்பட்டே வருகிறது.  

இதே சமயத்தில் தான் காங்கிரஸில் உறுப்பினராக இருந்து கொண்டே ராஜாஜியின் வழிகாட்டுதலின் கீழ் 1948ல் ஆரம்பிக்கப்பட்ட  “தமிழரசு கழகம்” தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுப்போம். தமிழ்நாடு சுதந்திர நாடாக்கியே தீர்வோம் என்று குரல் எழுப்புகிறது. இப்படியான ஒரு அமைப்பை துவங்க வேண்டிய தேவை அவர்களுக்கு வந்த காரணம், பெரியார் எனும் ஆளுமையால் காங்கிரஸ் மற்றும் ராஜாஜியின் தமிழர் விரோதப் போக்கு மக்களிடையே தோலுரிக்கப்பட்டிருந்தது. தமிழர் உணர்வு சென்னை மாகாணம் முழுவதும் வளர்த்தெடுக்கப்பட்டு இருந்தது. இந்த தமிழர் உணர்வை காங்கிரஸுக்கு சாதகமாக அறுவடை செய்யும் நோக்கத்துடனேயே “தமிழரசு கழகம்” தொடங்கப்பட்டது. தமிழரசு கழகம் எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்தது போல் வரலாறு கட்டமைக்கப் பட்டுள்ளது. தமிழக எல்லை போராட்டத்தை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். தெற்கெல்லைப் போராட்டம், வடக்கெல்லை போராட்டம் என்று இதில் இரண்டு போராட்டங்களையும் முன்னெடுத்தவர்கள், அந்த பகுதியை சேர்ந்தவர்களே.

தெற்கெல்லைப் போராட்ட்த்தில் நதானியல், நேசமணி போன்றோர்களாலும், வடக்கெல்லைப் போராட்டம் மங்களக் கிழார் போன்றோராலும் முன்னெடுக்கப்பட்டது. இவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுக்கும் வகையில் மா.பொ.சி போன்றவர்கள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்துவது என்று பெரியாரிடம் பேச ஆரம்பிக்கிறார்கள். பெரியார் சுதந்திரத் தமிழ்நாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர், ஒரு இந்திய தேசியத்திற்குள் ஒரு அடிமை மாநிலமாக இருப்பதற்கான எல்லைப் போராட்டத்தை குறித்து மறுத்திருக்க வேண்டும் ஆனால் எல்லைப் போராட்ட கோரிகையையும் ஏற்றுக் கொண்டார் ஆனால் தனது கோரிக்கைகளையும் கூறி அதையும் சேர்த்துக் கொண்டு போராட்ட்த்தை முன்னெடுக்கலாம் என்று 19/01/1956ம் ஆண்டு பெரியாரும் மபொசியும் சந்தித்த பொழுது முடிவெடுக்கின்றனர். அப்பொழுது ஐந்து கோரிக்கைகளின் கீழ போராடலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது அந்த 5 கோரிக்கைகள்...

  1. எல்லைக்கமிஷன் என்பது எல்லையை வரையறுப்பதில் தமிழ் மக்களுக்கு செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்.
  2. இந்தி மொழியை யூனியனுக்கு ஆட்சி மொழியாகவும் இந்திய தேசிய மொழியாகவும் ஆக்கப்படுவதற்கு பலவழிகளிலும் அரசாங்கம் முயற்சிப்பதை தடுப்பது
  3. யூனியன் ஆட்சி என்பதில் படை போக்குவரத்து, வெளிநாடு உறவு இவை தவிர்த்த மற்ற ஆட்சியின் உரிமைகள் அனைத்தும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். {மாநில சுயாட்சி}
  4. தமிழ்நாட்டுக்கு தமிழில் சென்னை என்றும், ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்று பெயரிட்டிருப்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரையே இருக்கும்படி செய்ய வேண்டும்.
  5. தமிழ்நாட்டை தென்மண்டலம் {தட்சிணப் பிரதேசம்} என்ற அமைப்பு முறையின்படி மற்ற நாடுகளுடன் இணைக்க திட்டமிட்டிருப்பதை எதிர்ப்பது. 


இந்த ஐந்து கோரிக்கைகளில் மாநில சுயாட்சியை தந்தை பெரியார் வலியுறுத்தியிருப்பதே அவரின் அதுவரையிலான கொள்கைக்கு முரணானது ஆனால் அனைவருடன் இணைந்து செல்ல வேண்டும் என்ற வகையில் தனது கொள்கையில் ஒன்றைமட்டும் விட்டுக் கொடுத்து மாநில சுயாட்சிக்கு இணங்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம். இந்த ஐந்து கோரிக்கைகளையும் பெரியார் மற்றும் மபொசியும் ஒத்துக் கொண்டு போராடுவது என்று முடிவெடுத்தனர். இந்த போராட்ட்த்தில் மேலும் திராவிட பார்லிமெண்டரிக் கட்சித் தலைவர் சுயம்பிரகாசம், ஜஸ்டிஸ் கட்சி சர்.பி.டி. ராஜன், கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சித் தோழர்களையும் இணைத்துக் கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள். அப்பொழுது மபொசி கண்ணீர் துளிகளை {திமுக} இணைக்கலாமா என்ற பொழுது தேவையில்லை அவர்களால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை, கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக அவர்களை இணைத்துக் கொள்வதில் பயனில்லை, வேலை செய்யக் கூடிய திறமையுள்ளவர்களை மட்டும் இணைத்துக் கொள்ளலாம் என்று பெரியாரும் சொல்லியிருக்கிறார். இப்படி மொழிப் போராட்டம் அனைவரையும் இணைத்து நடைபெற வேண்டிய அடித்தளம் போடப்பட்டது.

ஆனால் இத்தனையும் பேசிவிட்டு சென்ற மபொசி அதன்பிறகு போராட்ட முன்னெடுப்பு குறித்தும் கோரிக்கைகளை வரையறுப்பது குறித்தும் முடிவெடுப்பதற்கு அனைவரும் இணைந்து பேசுவதற்கான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் ஒரு கடிதம் 20-1-1956 அன்று மபொசி அனுப்புகிறார், அப்படி கடிதம் அனுப்பியிருப்பது குறித்த ஒரு தந்தியும் அனுப்புகிறார் மபொசி. ஆனால் 20ம் தேதி தந்தி வந்து சேர்கிறது ஆனால் 21ம் தேதி கடிதம் வந்து சேரவில்லை. எனவே 21ம் தேதி அந்த கடிதம் வந்து சேரவில்லை என்பதை மபொசிக்கு பெரியார் தந்தியின் மூலம் தெரிவிக்கிறார். ஆனால் 22ம் தேதி மறுநாள் கடிதம் பெரியாரை வந்தடைகிறது. அந்த கடிதத்தில் 5 கோரிக்கைகள் மூன்றாக மாறியிருந்தது அதிலும் திருத்தங்களுடன் இருந்தது. கடித்த்தில் வரையறுக்கப்பட்ட மூன்று கோரிக்கைகள் பின்வருமாறு.

  1. தமிழக எல்லை பகுதி வரையறுத்தல்
  2. தமிழகம் என்று பெயரிடுவது
  3. இந்தி திணிப்பை எதிர்ப்பது


இந்த கடிதம் மபொசியும் பெரியாரும் சந்தித்த 19-01-1956ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் கழித்து 22-01-1956 அன்று பெரியாரின் கைக்கு கிடைக்கிறது. மேலும் அதில் கையெழுத்து இடும் பகுதியில் ஐந்து பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இரண்டாவது இடத்தில் ம.பொ.சி கையெழுத்து போட்டிருந்தார். முதல் இடத்தில் பெரியாருக்கு ஒதுக்கியிருந்தார். மேலும் ‘கண்ணீர் துளி’ அமைப்பின் சார்பில் கையெழுத்து போட தங்களின் விருப்பத்தையும் கூறுமாறு மபொசி கேட்டிருந்தார்.  கூட்டம் நடக்கும் இடம் தேதியை பெரியார் முடிவு செய்து அறிவிக்க சொல்லி அந்த பகுதியை காலியாகவிட்டிருந்தார்.

இதற்கு நடுவில் சென்னையில் இருந்த குத்தூசி குருசாமி அவர்களை ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து இன்று மாலை ஒரு ஆலோசனைக் கூட்டம் தாங்கள் வர இயலுமா என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் பெரியார் திருச்சியில் இருந்தே அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்து கொண்டிருந்தார், சென்னையில் நிரந்தரமாக தங்கியது இல்லை. குத்தூசி குருசாமி பெரியார் அவர்கள் சொன்ன அனைத்து கோரிக்கைகளையும் இணைத்தால் தான் பெரியார் ஏற்றுக் கொள்வார் என்று சொல்லியிருக்கிறார். 26-01-2015 அன்று மா.பொ.சியிடமிருந்து திருச்சிக்கு பெரியாருக்கு அடுத்து ஒரு அச்சிட்ட அழைப்பிதழ் வருகிறது அதில் 27-01-1956 அன்று மாலை 4 மணிக்கு மபொசியின் நண்பரின் உமா பத்திரிக்கை அலுவலகம், சென்னையில் சர்வகட்சிக் கூட்டம் என்று மா.பொ.சி மட்டும் கையெழுத்திட்ட அழைப்பிதழ் வந்து சேர்ந்தது.

முதலில் பெரியாரிடம் ஒத்துக் கொண்ட 5 கோரிக்கைகள் அடுத்து 3 கோரிக்கை ஆனது, கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக சர்வ கட்சிக் கூட்டம் “எல்லைப் பிரச்சனை” என்ற ஒரு கோரிக்கையின் கீழாக வந்து நின்றது. பெரியார் சுதந்திரம் தனிநாடு என்பதை விடுத்து மாநில சுயாட்சி என்பதை ஏற்றுக் கொண்டதே பெரிய விசயம் அதில் மாநில சுயாட்சியையும் தூக்கிவிட்டார்கள் அடுத்து தமிழ்நாடு என்பதை சுருக்கி தமிழகம் என்று மட்டுமே குறித்து அழைப்பிதழ் இருந்தது. பெரியாரின் கட்டுரைகள் படித்த அனைவருக்குமே தெரியும் தமிழர்கள் தமிழ்நாடு என்று குறிப்பிட்டே எப்பொழுதும் எழுதுவார்கள் ஆனால் இதெல்லாம் இல்லாத போராட்டத்தை முன்னெடுக்க பெரியார் மபொசியுடன் இணைந்து முன்வருவாரா என்ன. சரி தனியாக போராட்டத்தை முன்னெடுத்து இருக்கலாமே என்று சிலர் கேட்ப்பார்கள் அவர் எடுக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் நடந்த அரசியல் வரலாற்றை தெரியாதவர்கள் இன்று வந்து சில்லுவண்டுகள் போல் குதிக்கின்றனர் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம் இவர்களை.

முதலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், கர்நாடகம், ஆந்திரம் போன்றவற்றுடன் இன்று வரை இணைந்திருக்கும் தமிழர்கள் பகுதிகளை குறித்த பெரியார் என்ன பார்வை கொண்டிருந்தார் என்பதை அவரின் வழியாக தெரிந்து கொள்வது தான் சரியான பார்வை.

7-01-1953 மற்றும் 8-01-1953 அன்று விடுதலையில் பெரியார் ஆற்றிய உரையாக வெளியிடப்பட்டதில் இருந்து

”ஆந்திரமொழியைப் பேசுகின்ற மக்களை மெஜாரிட்டியாகக் கொண்ட பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்த்துக் கொள்வதில் நமக்கு ஆட்சேபமில்லை, தமிழ்மொழி பேசும் மக்களை பெருவாரியாகக் கொண்ட நாட்டை ஆந்திராவோடு சேர்க்கவேண்டும் என்பது எப்படி, மொழிவாரி மாகாணப் பிரிவினை என்று சொல்ல முடியும்?

அடுத்தாற்போல், அதுபோலவே இன்றைய அனுபவத்தில் தமிழ் மொழி அதிகமாகப் பேசும் மக்களின் பிரதேசம் ஆந்திர நாட்டிலே சேர்ந்தாலுங்கூட, அவர்களுக்கு மொழிவாரிப் பிரேதச உரிமையை உத்தேசித்து எந்த நிமிசத்திலும் விலகிக் கொள்ள கிளர்ச்சி செய்ய உரிமை உண்டு. அதை நாம் மறுக்கவில்லை; நம்மாலான உதவிகளைச் செய்யவும் தயாராக இருக்கிறோம். ஆனால் நம்முடைய சொந்த பிழைப்பையோ, சுயநலத்தையோ, விளம்பரத்தையோ உத்தேசித்து இன்றைக்குத் தான் இந்த சங்கதி தெரிந்தது போல் பாவனை காட்டிக்கொண்டு கூத்தாட நமக்கு இஷ்டமில்லை.”

1956ல் மபொசி அனைத்துக் கட்சி கூட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார், அதற்கு மூன்று வருடம் முன்பாகவே மற்ற மாநிலங்களுடன் இருக்கும் தமிழ் அதிகம் பேசும் மக்கள் தமிழ்நாட்டுடன் இணைய கிளர்ச்சி செய்ய உரிமை பெற்றவர்கள் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்று 1953ம் ஆண்டே சொன்னவர். இப்படி தமிழ்நாட்டினைப் பற்றியும் தமிழரைப்பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தவர் தான் பெரியார், மேலும் இதன் கீழாக விளம்பரம் செய்து கொள்வது தவறானது என்பதையும் சுட்டிக் காட்டியவர் பெரியார். இங்கே மபொசியை தூக்கி பிடித்துக் கொண்டு அவர் தான் ”முதலமைச்சு தமிழ்தேசியத்தின்” மண்ணுரிமைப் போராளி என்கிறார்கள். 1945ம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சி மலைக்கோட்டையில் இலக்கியக் கூட்டத்தில் “புதிய தமிழகம்” என்ற சொற்பழிவை நிகழ்த்துகிறார். அன்றிலிருந்து 1956 வரை அவர் தமிழகம் என்ற சொல்லாடலையே உபயோகிக்கிறார். பெரியார் 1930களில் இருந்தே தமிழ்நாடு என்ற சொல்லாடலை உபயோகிக்கிறார். தமிழர் பகுதி என்பதில் நாடு என்ற வார்த்தையை தவிர்க்கவே மத்திய அரசும் மொழிவாரி பிரிவினையின் போது முயன்றது அதன் கீழாக சென்னை மாகாணம் என்று தமிழிலும் மெட்ராஸ் ஸ்டேட் என்று ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டு வந்தது. தமிழ் நாடு என்று பெயர் வைக்க சங்கரலிங்கம் உயிர்விட வேண்டியது ஆனது.

இதைப் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் இங்கே தாந்தோன்றித் தனமாக சிலர் குதித்துக் கொண்டுள்ளனர், என்ன செய்வது அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்து அவர்களின் அறியாமை இருளில் இருந்து வெளிக்கொணர முயல்வோம். எல்லைப் போராட்டத்தில் மிகவும் முக்கியமானவராக மபொசியை காட்டினாலும் தெற்கெல்லை போராட்டத்தினை முன்னெடுத்து இன்று வரை குமரியின் தந்தையாக மதிக்கப்படும் மார்சல் நேசமணி அவர்களின் வரலாற்றை குறித்த “நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்” என்ற புத்தகத்தின் முன்னுரையில் தெற்கெல்லை போராட்டத்தில் பங்கு கொண்ட அப்துல் ரசாக் M.A, LLB, இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. 

கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், திருவிதாங்கூர் காவல்துறை அடக்குமுறையின் கீழாக 

““கண்ணில் கண்டவர்களை, “கண்டால் அறியும் பள்ளி” என்று கூறிக் கைது செய்தனர். நான் போலிசுக்கு பிடி கொடுக்காமல் வாழ்ந்தேன். திருவிதாங்கூரில் நடந்த தமிழகப் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறிச் செயல்பட்டது. பலரைத் துப்பாக்கிக்கு இரையாக்கியும் பலரை சித்திரவதை செய்தும் பலரை துன்புறுத்தியும் கைது செய்தனர். தமிழக் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்ற வந்த ம.பொ.சி சொற்பொழிவு ஆற்றாமலேயே திரும்பிச் சென்றார்.

ஆனால் பெரியார் ஈ.வே.ரா மட்டும் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் நிலைமையை மார்ஷல் நேசமணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதன் பின்னணியாகச் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு கூட்டத்தைப் போட்டு, “திருவிதாங்கூரில் போலீஸ் அடுக்குமுறையை உடனடியாக நிறுத்தாவிட்டால், தமிழகத்தில் வாழும் மலையாளிகளை நாங்கள் இங்கிருந்து அடித்து துரத்துவோம்” என்று பொதுக்கூட்டத்தில் அறிக்கை விட்டார். மலையாள அரசு தமிழனைத் துன்புறுத்தியதை நிறுத்தியது.

மார்ஷல் நேசமணி தன் கையால் மாலை அணிவித்த ஒரே தலைவர் பெரியார் தான். பெரியாரும் மார்ஷல் நேசமணி மீது மிக்க மதிப்பு வைத்திருந்தார்””

இதையெல்லாம் மறைத்துவிட்டு பெரியார் தான் தமிழகத்தின் எல்லைகளை விட்டுக் கொடுக்க காரணம் என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் தனித் சுதந்திர தமிழ்நாட்டை கேட்டவர் அது ஒரு சிறுபகுதியாக இருந்தாலும் போதும் அந்த சுதந்திரத் தமிழ்நாட்டின் மானமுடன், சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என்று நினைத்தவர். இவர்களுக்காக காவடி எடுத்து ஆட வேண்டிய வேலையை அவர் செய்ய இயலாது. 

ஒரு நாட்டின் வரலாறு என்பது ஒரு பக்கமான பார்வையும் ஒரு பக்கமான படிப்பும் கிடையாது அனைத்து பக்கங்களிலும் இருந்து கிடைக்கும் தகவல்களை தொகுத்து படிப்பதே. எனென்றால் இங்கிருக்கும் வரலாற்றாசிரியர்கள் பலர் தாங்கள் சார்ந்த கருத்தியலின் கீழாகவே வரலாற்றை எழுதி வருகிறார்கள். ஆரியர் வருகை, மொகலாயர் படையெடுப்பு என்றே வரலாற்றில் உள்ளது மொகலாயர் படையெடுத்து வந்தால் படையெடுப்பாம், இந்த மண்ணுக்கு சொந்தமில்லாத ஆரியர் இந்த மண்ணுக்குள் படையெடுத்து வராமல் வெத்தலை பாக்குவைத்து அழைத்தது போல் ஆரியர் வருகை என்றே குறிப்பிடுகின்றனர். இனிமேலாவது அனைத்து பக்க தகவல்களையும் படித்து நமது வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் வருங்கால உண்மையாக தமிழ்த் தேசியம் பேச விரும்புபவர்கள்.  

குறிப்பு – எல்லைப் போராட்டம் மட்டும் இல்லை தனி நாடு, அப்புறம் மாநில சுயாட்சி என்று ஏகப்பட்ட அந்தர்பல்டிகள் அடித்து கடைசியில் திமுகவினரின் காலில் விழுந்து மேலவை உறுப்பினர், மேலவை தலைவர் என்று பதவி பின்னால் அழைந்தது என்று இன்னும் விரிவாக பார்க்கலாம், இன்னொரு சமயம்.  

குறிப்புக்கு உதவிய நூல்கள் -
1.   திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு – பி. யோகிஸ்வரன்
2.   தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம் – பெரியாரும் ம.பொ.சியும்
3.   நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம் – ஏ.ஏ. ரசாக்
4.   திருத் தமிழர் இயக்கம் – பி.எஸ். மணி
5.   எனது போராட்டம் – மபொசி
    





Tuesday, December 30, 2014

தந்தி டிவியில் ராஜபக்சேவின் பேட்டி அரசியல்


ராஜபக்சேவின் தனிப்பட்ட பேட்டி தந்தி டிவிக்கு என்பது இந்திய மத்திய அரசு நலன், மற்றும் சிங்கள பேரினவாதத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியின் கீழாக பார்க்க வேண்டும். இந்த பேட்டிக்கு தந்தி டிவி அணுகியதைவிட இந்திய வெளியுறவுத் துறையே அனுமதி வாங்கி கொடுத்து இருக்க வேண்டும். பேட்டி எப்படி எடுக்கப்பட்டால் என்ன அவர்கள் செய்ய நினைத்ததை சாதித்துவிட்டார்கள். ஆம் இங்கு தமிழர் நலனுக்காக தொடர்ந்து போராடி வருபவர்களுக்கு இடையே இருக்கும் முரண்களை மேலும் வளர்த்து எடுத்து இருக்கிறார்கள். ராஜபக்சேவின் பேட்டியை ஒரு இந்திய மாநிலத்தின் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று பார்க்காமல். அந்த பேட்டியின் கீழான விவாதத்தில் தமிழர் நலனை பற்றி பேசும் ஒரு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்கிறார், அதே சமயத்தில் மற்ற கட்சிகள் இயக்கங்கள் என்று அனைவரும் ஒரணியில் ராஜபக்சேவின் பேட்டியை ஒளிபரப்பாதே என்ற கோரிக்கை வைக்கும் பொழுது இவர் சென்று அந்த பேட்டியின் கிழான விவாதத்தில் கலந்து கொள்கிறார், இது என்ன மாதிரி டிசைன் என்று தெரியவில்லை.

முதலில் இராஜபக்சேவின் பேட்டியின் கீழான வாதமாக ராஜபக்சே கூறியவைகளின் அடிப்படையில் அவர் தமிழர்களுக்கு எதிரானவர் இல்லை என்பதை நம்ப முடியுமா என்பது தான் அதற்கான நேரிடையான பதில் இராஜபக்சேவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் இலங்கையின் எத்தேச்சதிகார இனவெறி கொண்ட அரசியல்சாசனச் சட்டம் இருக்கும் வரை எந்த சிங்கள பேரினவாதத்தின் தலைமையையும் நம்ப இயலாது. இது தந்தை செல்வா பண்டாரநாயக ஒப்பந்தத்தில் இருந்து ஜெயவர்த்தனா ராஜிவ் ஒப்பந்தம் மட்டும் அல்ல, நார்வேயின் தலையீட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் வரை எல்லா இடத்திலும் அனைத்து காலத்திலும் சிங்கள பேரினவாத அரசியல் சாசனச் சட்டம் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை பறிப்பதில் தான் இருந்திருக்கிறதே ஒழிய என்றும் ஒரு மனிதாபிமான அடிப்படையிலான அரசியலமைப்பாக தன்னை கட்டமைத்துக் கொள்ளவில்லை. இத்தகைய நிலையில் இலங்கையின் அதிபராக நெல்சன் மண்டேலாவை அமர வைத்தால் கூட தமிழர்களுக்கான தீர்வாக அவர் ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளி போட முடியாது, எனவே இலங்கையின் இனவெறி அரசியல் சாசனத்தை திருத்தாமல் வெறும் வாய்வார்த்தைகள் யார் சொன்னாலும் நம்ப இயலாது. 

அடுத்து ராஜபக்சேவின் பேட்டி எதற்காக எடுக்கப்பட்டது அது ஏன் இப்பொழுது என்று ஆராய்ந்தால் அனைத்தும் விளங்கும். இலங்கை தேர்தல் பிரசார நோக்கமா இது இல்லை... இலங்கை தேர்தல் பிரசாரத்திற்கு இலங்கையில் தான் ராஜபக்சே பேட்டி கொடுக்க வேண்டும் ஏன் தமிழகத்தில் இருக்கும் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி, இலங்கையில் தொலைகாட்சி நிலையங்களே இல்லையா என்ன? மிக நேர்த்தியாக இந்திய வெளியுறவு துறையும் சிங்கள பேரினவாதமும் தன் காயை நகர்ந்தியுள்ளது. சரி ராஜபக்சேவின் பேட்டியின் கீழான விவாதம் எனும் பொழுது, ராஜபக்சே என்ன சொன்னாரோ அதன் கீழான விவாதமாக இருந்து இருக்க வேண்டும். ராஜ பக்சே போருக்கு பின்னான அபிவிருத்தி திட்டங்களை பற்றி பேசினார், மேலும் சில இடங்களில் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருப்பதாகவும் கூறினார். ஆனால் இதை குறித்த விவாதமாக இல்லாமல் இங்கே வேறு கருத்தாக்கங்கள் வைக்கப்பட்டது. அதில் முக்கியமானவை..

இந்திய தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல், இலங்கை தமிழ் மீனவர்களே செய்கிறார்கள். காரணம் மன்னர் வளைகுடா வரை சென்று தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். இலங்கை இராணுவம் தாக்குவது இல்லை என்ற அடுத்த கட்டுக் கதையை அவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளார்கள். 

அடுத்து மலையகத் தமிழர்கள் இலங்கை அரசின் கீழ் தான் இருக்க விரும்புகிறார்கள், அவர்கள் என்றும் வடகிழக்கு தமிழர்களால் பாதுக்காக்கப் படவில்லை என்பது போன்ற வாதமாக இலங்கையின் மத்திய மாகணத்தின் முதலமைச்சராக இருக்கும் ராமசாமி அவர்களின் வாதம்.

கடைசியாக இலங்கை வாழ் தமிழர் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என்று தமிழக ஊடகத்தின் மூலமாக சொல்லி சென்று இருக்கிறார். 

முதலில் பகவான் சிங் சொன்ன இந்திய தமிழ் மீனவர்களை தற்பொழுது தாக்குவது இலங்கை தமிழ் மீனவர்களே, காரணம் இந்திய தமிழ் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை தமிழ் மீனவர்கள் பகுதியான மன்னார் வளைகுடா வரை சென்று மீன் பிடிக்கின்றனர் அதனாலேயே அந்த மீனவர்கள் தாக்குகிறார்கள் என்ற கண்டுபிடிப்பை சொல்லியுள்ளார். இவரிடம் அடிப்படையாக கேட்கப்பட வேண்டிய கேள்வி எத்தனை தாக்குதல்களை பற்றிய தகவல் இருக்கிறது அதில் எத்தனை இலங்கை தமிழ் மீனவர்கள் தாக்கினார்கள், எத்தனை தாக்குதலில் இலங்கை இராணுவம் ஈடுபட்டது என்பதற்கான தெளிவான விவரங்கள் இருக்கா என்பது. மேலும் ஒரு ஊடகவியலாளராக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட 543 மீனவர்களுக்கான நீதியை மறந்துவிட்டு அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை மட்டும் எப்படி பேசுகிறீர்கள். செத்து போன 543 மீனவர்களுக்கான நீதியைப் பெற்று தரவேண்டியது ஊடகவியலாளரான உங்கள் கடமை இல்லையா. வருங்காலத்தை பற்றி மட்டும் பேசிவிட்டு கடந்தகால கொடூரங்களை எந்த சட்ட நியாயத்தின் அடிப்படையில் மறைக்கிறீர்கள்.

மேலும் இரண்டு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை கடைசியாக எப்பொழுது நடந்தது அதில் காலையில் இரு நிபந்தனை மதியம் ஒரு நிபந்தனை என்று மாற்றி மாற்றி பேசி, இலங்கை அரசு அந்த பேச்சுவார்த்தையை சீர்குலைத்தது ஒரு ஊடகவியலாளராக உங்களுக்கு தெரியுமா தெரியாதா. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடித்து வந்து இங்கு பலரின் வயிற்றுக்கு சோறு போடுபவர்கள் மீது எந்த அடிப்படையின் கீழ் எல்லை தாண்டுகிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். உங்கள் இந்திய பாசத்தின் கீழாக இங்கு இருக்கும் தமிழ் மீனவர்களை சண்டையிடுவது போல் பிம்பந்தத்தை உருவாக்க முயல்கிறீர்கள், 1983 வரை பெண் கொடுத்து பெண் எடுத்தவர்கள் இலங்கை வாழ் ஈழ மீனவர்களும் தமிழக மீனவர்களும்,  கணவனும் மனைவியும் 1983க்கு பிறகு கச்சத்தீவு திருவிழாவில் சந்தித்து கர்ப்பம் ஆன கதைகள் எல்லாம் உண்டு, இதைப் பற்றி உங்கள் செய்தியாளர்களை வைத்து ஒரு முழுமையான செய்திக் கட்டுரையை எழுத முடியுமா தங்களால். 1968ல் அண்ணா இறந்த செய்தியை ஈழத் தமிழ் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களுக்கு சொல்லித் தான் தெரியும். இப்படி அமைதியாக தங்கள் இருவருக்கும் சொந்தமான கடலை அவர்களுக்கு உபயோகித்துக் கொள்ளத் தெரியும் நீங்களும் உங்கள் அரைவேக்காட்டு அரசியல் பார்வைகளும் விலகி நின்றால் அவர்களின் சொத்தை அவர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். 

ராமசாமி அவர்கள் போகிற போக்கில் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட பொழுது திரு. தொண்டைமான் அவர்கள் மட்டும் தான் எதிர்த்தார் அப்பொழுது இருந்து வடகிழக்கு தமிழர் தலைவர்கள் யாரும் மலையகத் தமிழர்களுக்கு உதவவில்லை என்று கூறினார். 1952ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மலையகத் தமிழர்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்ட பொழுது அப்பொழுது தமிழ் காங்கிரஸ் தலைவராக இருந்த பொன்னம்பலத்தின் கட்சியில் இருந்த தந்தை செல்வநாயகம் பாராளுமன்றத்திலேயே தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் அந்த சட்டத்தை ஆதரித்த பொன்னம்பலம் கட்சியைவிட்டு விலகி தமிழரசு கட்சியை ஆரம்பித்து இலங்கை வாழ் தமிழர் நலன் காக்க அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்தார், இதை எல்லாம் மறந்துவிட்டு வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் மீது எப்படிக் குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்.

மேலும் 1950களில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் இடம் கொடுத்து அவர்களை தங்களில் ஒருவராக மதித்த வடக்கு கிழக்கு மக்கள் மீது எப்படி உங்களால் அபாண்டமான குற்றச்சாட்டை வைக்க முடிகிறது. மத்திய மாகணத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மலையக மக்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தங்களின் சுதந்திரத்திற்காக போராடியது தங்களுக்கு தெரியாதா என்ன.

இதைவிட அதி முக்கியமானது வடக்கு கிழக்கு தலைவர்கள் இலங்கையின் மத்திய மாகணத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களான உங்களின் நலனின் அக்கறை கொள்ளவில்லை என்று கூறுவது, உங்களை ராஜபக்சேவின் ஆகச் சிறந்த ஜால்ரா விற்பன்னராகவே காட்டுகிறது. தமிழீழ சுதந்திர போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ”வட்டுக்கோடைத் தீர்மானம் - 1976” இல் நாலாவது சரத்தாக கீழ் வரும் தீர்மானம் இருக்கிறது 

“(ஈ). தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும். எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ்பேசும் சிறுபான்மைகள் பாதுக்காக்கப்படும் சரி எதிரீடான அடிப்படையில் பாதுகாப்படவேண்டும். ”

ஆதாவது சுதந்திர தமிழீழத்தில் வாழப்போகும் சிங்களவர்களின் உரிமைகள் சிங்கள தேசத்தில் வாழும் தமிழ் சிறுபான்மையினரை எவ்வாறு சிங்கள அரசு நடத்துகிறதோ அதற்கு நேர் எதிரீடான அடிப்படையில் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு மக்கள் உங்களின் உரிமைகளை நலன்களை பேணுவதிலும் அக்கறை கொண்டிருந்தே வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் உங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக மறந்துவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக ராஜபக்சேவிற்கு பக்கவாத்தியமாக இருக்கிறீர்கள், தமிழர்களுக்கு ஜால்ரா சத்தங்களை சுரம் பிரித்து அறிந்து கொள்ளும் சங்கீத ஞானம் உண்டு..

ஒட்டுமொத்தத்தில் இந்த பேட்டி என்பது இந்திய மத்திய அரசாலும் இலங்கை இனவெறி அரசாலும் தமிழர்களை கூறு போடும் திட்டமே, தமிழக மீனவர்கள், ஈழத்து மீனவர்கள் என்று பிரித்து அவர்களுக்கிடையேயான சிறு முரண்களை பெரும் பிரச்சனைகளாக உருவகப்படுத்துவதும், மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் முரண்களை பெரிது படுத்தி காட்டி தமிழகத்தில் எழுந்திருக்கும் ஈழத்தமிழர்கள் மீதான அனுதாபத்தை குழப்பி அந்த குழம்பிய குட்டையில் தங்களின் அரசியல் லாபக் கணக்கை எழுதும் முயற்சியே.. 

Monday, July 28, 2014

ப்ரோ கபடி லீக்கும் தமிழ் நாட்டின் மானமும்



தமிழ்ஸ் நவ் இணையத்தில் வெளியான கட்டுரை 
http://tamilsnow.com/?p=19259


இந்தியன் பீரிமியர் லீக் என்று கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு ஹாக்கியிலும் அதே போன்று ஒரு வர்த்தகப்பூர்வமான ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டில் வர்த்தகங்களை நுழைப்பது என்பது சரியா தவறா என்பதை விட இந்தியா போன்ற நாடுகளில், இப்படி வர்த்தக நிறுவனங்கள் நுழைவதால் விளையாட்டு வீரர்கள் மூன்று வேளை கஞ்சியாவது நிம்மதியாக குடிக்க வழிவகை ஏற்படும் வாய்ப்பை வழங்குகிறது. தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வாங்கிய வீரர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் வாழ்வாதரம் என்பது விளையாட்டு வீரனாக இருந்தாலே போதும் என்ற நிலை கிரிக்கெட்டை தவிர இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிலும் கிடையாது. அத்தகைய நிலையில் விளையாட்டு போட்டிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் நுழைவது வரவேற்கத் தக்கதே. கிரிக்கெட், ஹாக்கி பீரிமியர் லீக் வரிசையில் கபடியும் நுழைந்துள்ளது. 

கபடிக்கு புரோ கபடி லீக் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 26ம் தேதி முதல் ஆக்ஸ்ட் 31ம் தேதி வரை ஒரு பெரும் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. கபடி என்பது உலக அளவில் சில நாடுகளே விளையாண்டாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்ற விளையாட்டு, மேலும் கபடிக் கென்று தனியாக உலக கோப்பையும் இருக்கிறது, இந்த உலக கோப்பையை 2004லிருந்து 2013 வரை நடந்த ஆறு உலக கோப்பையையும் இந்தியாவே கைப்பற்றியுள்ளது. இவைகளில் தமிழக வீரர்களின் பங்களிப்பும் ஒரளவாது இருந்தே வருகிறது, 39 வயது சேரலாதன் மிகச்சிறந்த தற்காப்பு கள ஆட்டக்காரராக இந்திய அணியில் பல்லாண்டுகளாக ஆடிவருகிறார். 

கபடி என்பது தமிழர்கள் விளையாட்டு என்பதை உலகமே ஒத்துக் கொண்ட ஒரு விளையாட்டு, கை பிடி என்பதே கபடியாக மாறியது என்பதாக வரலாறு சொல்கிறது, இதை நாம் சடுகுடு என்ற பெயரிலும் நாட்டுப்புற பாடல் வரிகளுடன் விளையாடி வந்த விளையாட்டு. ஏன் இன்று வரை தமிழக அரசின் அங்கீகரிப்பட்ட தமிழகத்தின் விளையாட்டாக இருப்பது கபடி தான். (நம்மை தவிர பங்களாதேஷ் தனது தேசிய விளையாட்டாக அங்கீகரித்துள்ளது) இப்படி தமிழக அரசின் விளையாட்டாக இருக்கும் கபடி இந்த புரோ கபடி லீக்கில் தமிழகத்தில் இருந்து குறைந்த பட்சம் 4 அணிகளாவது பங்கேற்று இருக்க வேண்டும் ஆம், ஊர்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து அனைத்து மட்டங்களிலும் கபடிப் போட்டிகள் கோயில் திருவிழா, பொங்கல் விழா என்று எங்கும் நிறைந்தே இருக்கும் கபடிப் போட்டிகள். இபப்டி அனைத்து பகுதியிலும் விளையாண்டு வரும் நமது தமிழகத்தில் இருந்து ஒரு அணி கூட இந்த ப்ரோ கபடி லீக்கில் இல்லை. 


காரணம் அணியை வாங்குவதற்கோ இல்லை அணி ஒன்றை நிறுவுவவோ எந்த நிறுவனமும் தயார் இல்லை என்று சொல்லலாம் ஆனால் நாமே இப்படி ஒரு போட்டி நடப்பதை அறியாதவர்களாகத் தான் இருக்கிறோம், இந்திய கபடி கழகத்தில் அனைத்து மாநிலங்களும் பங்கு பெற்றுள்ளன. இதில் இந்தியன் ப்ரீமியர் லீக் போன்று அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. எட்டு அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது, பெங்கால் வாரியர்ஸ்,  பூனேரி பல்தான், யு மும்பா, தபங்க் டில்லி, பெங்களூர் புள்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரைட்ஸ், தெலுங்கு டைட்டான்ஸ் இதில் பூனே அணியை அபிசேக் பச்சன் வாங்கியிருக்கிறார். அதிக பட்ச ஏலத்தொகையாக 12,80,000 ரூபாய்க்கும் குறைந்த பட்ச ஏலத்தொகையாக 9,10,000 ரூபாய்க்கும் அணிகள் ஏலம் விடப்பட்டுள்ளன, தமிழ்நாட்டில் இருந்து ஒருவரு கூட இந்த தொகையை முதலீடு செய்யும் அளவிற்கு இல்லையா என்ன.

நடிகர்களுக்கு இடையே நடக்கும் ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டி எந்த விதமான விளையட்டு மேம்பாட்டையும் கொடுக்காத வெறும் விளம்பரமாகவும், பொழுது போக்கிற்காகவும் நடக்கும் இந்த போட்டியின் சென்னை அணியை வாங்கிய ராதிகா சரத் குமார் போன்றவர்களுக்கு இந்த 12 லட்சம் பெரிய தொகையா என்ன. தமிழ் நாட்டி மானத்தை கட்டி காப்போம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று பேசுபவர்கள் இங்கு பலர் உண்டு ஆனால் இப்படி ஒரு போட்டி அதை முதலில் முன்னெடுத்து இருக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அதுவும் ஒரு முக்கியமான விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இதற்கு விளம்பரதாராகவும் நேரடி ஒளிபரப்பும் செய்கிறது இத்தகைய ஒரு போட்டி அதுவும் தமிழர்களின் விளையாட்டை நடத்த தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் தயார் இல்லை. அதாவது பரவாயில்லை தமிழ் நாட்டில் இருந்து ஒரு அணி கூட கிடையாது.
தமிழ் நாடு கபடி கழகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றால் இரண்டு நபர்களின் பெயரும் எண்ணும் இணையத்தில் இருக்கிறது ப்ரெசிடெண்டாக திரு. சோலை எம். ராஜா மதுரையை சேர்ந்தவரும், செகரட்டரியாக திரு, சைபுல்லா, திருப்பூரை சேர்ந்தவரையும் குறிப்பிட்டுள்ளார்கள் அவர்கள் எண்களை தொடர்பு கொண்டால் ஒரு நம்பரில் அப்படிப்பட்ட பெயரில் இங்கு யாருமே இல்லை என்கிறார். அடுத்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. இதில் பிரசிடண்டாக இருக்கும் சோலை எம் ராஜா அனைவரும் அறிந்தவரே ஒரு காலத்தில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர், இவரது தந்தை மதுரை காவல் துறையில் துணை ஆணையளாராக ப்ணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் குடும்பத்தின் அடிதடி கட்டப்பஞ்சாயத்து சாம்ராஜ்யம் மதுரை மாவட்டம் அறிந்ததே ராஜா அவர்களின் தம்பி ரவியும் தந்தை சோலை முத்தையாவும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ரவியின் மீது பல நூற்றுக் கணக்கான கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது. ராஜாவின் மீதும் பல வழக்குகள் உண்டு. இவர் தான் தமிழ் நாடு கபடி கழகத்தின் தலைவராக இருக்கிறார்.


இங்கு கபடி கழகம் மட்டும் தவறு செய்யவில்லை நாம் அனைவருமே தவறு செய்துள்ளோம், தமிழ்நாட்டின் விளையாட்டை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம், இன்னும் பத்து வருடத்தில் இல்லை இந்திய கபடி கழகத்தில் கபடி வரலாறு என்று பழங்காலத்தில் இருந்து இந்தியா முழுவதும் அனைவரும் விளையாடிய விளையாட்டாக சித்தரித்துள்ளனர். இந்தியா என்ற நாடே 1800களில் தான் உருவானது என்ற வரலாற்றையே மறைத்துவிட்டு. தமிழர் விளையாட்டாக இது எங்கும் அகில இந்திய கபடி கழகத்தின் இணையத்தில் எங்குமே குறிப்பிட படவில்லை. நமது அடுத்த தலைமுறை கபடி என்ற விளையாட்டை எதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டாக பார்க்க போகிறது என்பது என்னவோ நிதர்சனமாகத் தெரிகிறது.

Thursday, July 24, 2014

பச்சைமுத்துவின் துரோகம்.. புலிப்பார்வையில்..




திருவாளர் பிரவீன் காந்தி என்ன நினைத்து இப்படிப் பட்ட காட்சிகளை வைத்தார் என்பது தெரியவில்லை. இதில் தோழர் சீமானிடம் கதையை சொல்லி அனுமதி வாங்கினேன் என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார், அப்படி வாங்கியிருக்கலாம் ஆனால் அவருக்கு இத்தகைய காட்சிகள் இருப்பது தெரியுமா என்று தெரியவில்லை. இன்னொரு பேட்டியில் இலங்கை தூதரகத்திடம் அனுமதி வாங்கினேன் என்கிறார் அதை தொடர்பு கொண்டு கேட்டால் கண் துடைப்புக்காக என்கிறார்.. இந்த அரசியல் பெரும் அரசியல் இதை கடைசியில் பார்க்கலாம்...

முதலில் பாலச்சந்திரனை கைது செய்யும் பொழுது ஈழ இராணுவ உடையில் இருப்பது போல் சித்தரித்துள்ளனர். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச அரங்கில் தமிழ் சமூகம் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது. சிங்கள இனவாத அரசு பாலச்சந்திரன் Cross Fireல் அதாவது சண்டை நடக்கும் பகுதியில் குறுக்கே வந்ததால் இறந்திருக்கலாம் என்று சொல்லி வருகிறது. அதையும் தாண்டி இங்கு சிங்கள இனவாத அரசுக்கு உதவும் வகையில் பாலச்சந்திரனை ஒரு புலிகள் இராணுவத்தின் போராளியாகவும் சித்தரித்து உள்ளார். இதைத் தான் சுப்பிரமணியன் சுவாமி பாலச்சந்திரன் புகைப்படம் வெளிவந்து மாணவர் போராட்டம் நடந்த பொழுது சொன்னான் “பாலச்சந்திரனும் புலிகள் இயக்கத்தின் ஒரு போராளிஅவன் ஒன்றும் சாதரண பாலகன் இல்லை புலிகள் இயக்க உறுப்பினர் என்று.  இனி இனவாத சிங்கள அரசு சொல்லும் கைது செய்து வைத்திருந்த ஒரு புலிகள் இராணுவ உறுப்பினரான பாலச்சந்திரன் தப்பிச் செல்ல முயன்றதால் சுட்டுக் கொன்றோம் என்று அடுத்தக்கட்ட புளுகுமூட்டையை அவிழ்த்துவிட வழிவகை செய்கிறீரார் போல் தெரிகிறது. இல்லை சிங்கள தூதரகத்தில் இவர் சென்று கதை சொன்ன பொழுது இப்படி காட்சி அமையுங்கள் எங்களுக்கும் வசதியாக இருக்கும் என்று சொல்லி அதன் படி செய்திருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.

இது வரை பாலச்சந்திரன் படங்கள் பல இணையத்தில் இருக்கின்றன ஆனால் அதில் எதாவது ஒரு பட்த்திலாவது அவன் தமிழீழ தேசிய இராணுவத்தின் உடையுடன் இருப்பதை ஆதாரமாக காட்ட முடியுமா. ஒரு இராணுவத்திலோ அல்லது காவல்துறையிலோ ஏன் எந்த ஒரு சீருடை பணியில் இருக்கும் ஒருவரின் குழந்தை தனது தந்தை தாய் போல் ஆடை அணிந்துகொள்ள விரும்புவது இயற்கை அதைப் போன்று நீங்கள் காட்சியை வ்டிவமைத்தது போல் தெரியவில்லை, சிங்கள பேரினவாத அரசுக்கு மிகவும் உதவிகரமாக கை கொடுப்பது போல் சிறுவர் போராளிகள் என்ற குற்றச்சாட்டை மறுபடியும் நிறுவ உதவுவது போலவே உங்கள் காட்சி அமைப்புகள் உள்ளன, அதுவும் பல சிறுவர்களின் நடுவே அனைவரும் ஆயுதங்களுடன் இருப்பதைப் போன்ற உங்களது காட்சி அமைப்பு.


மேலும் 2009ம் ஆண்டு கடைசியாக தமிழீழ தேசிய இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்த ஈழ தேசியத்தில் இருந்து வெளியேறிய அமைப்பு ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பு UNICEF. இந்த அமைப்புடன் இணைந்து புலிகள் பல உடன்பாடுகளை செய்து கொண்டு சிறுவர்களின் மறுவாழ்வுக்காகவும், மற்றும் அவர்களின் படிப்பு முதற்கொண்டு வாழ்க்கை முன்னேற்றத்திற்காக செய்த பல காரியங்கள் இருக்கின்றன, ஏன் செஞ்சோலை, காந்தரூபன் போன்ற சிறு குழந்தைகளுக்கான இல்லங்களைப் பற்றி எங்குமே பேசப்படுவதில்லை. ஏன் செஞ்சோலை படுகொலைகளும் தமிழ் சமூகத்தின் நினைவில் இருந்து அகற்ற விரும்புகிற நோக்கத்தில்இங்கு திருவாளர். ப்ரவீன் காந்தி திரும்பவும் சிங்கள பேரினவாத இராணுவத்திற்கு உதவ தனது காட்சி அமைப்புகளில் மிகவும் மெனக்கெட்டு நாம் எல்லாம் பெருமை கொள்வது போல் இருக்க செய்து, அதாவது வீர வசனங்களையும் வீரதீர செயல்கள் கயிறு ஏறுவது, மேலிருந்து குதிப்பது என்று பல செயல்களை நம் முன் நிறுத்திவிட்டு, அதில் இருக்கும் வீரத்தை ரசிக்கும் நேரத்தில் சிறுவர் போராளிகள் என்ற இல்லாத கட்டமைப்பை நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்த முயல்வது போலவே தெரிகிறது. 

மேலும் தமிழீழ அரசங்காத்தின் காலகட்டத்தில் அன்பு பிள்ளை பாலச்சந்திரன் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான் அவன் தனது பள்ளிக்கூட சீரூடையுடன் இருப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக தெரியவில்லை. இவரது விளம்பரப்படத்தில், ஒரு வேளை முழு படத்தில் எங்காவது வரலாம் ஆனால் அதை ஒரு சிறு துளியை இவரது ட்ரைலரிலும் காட்டியிருக்கலாம் ட்ரைலர் முழுவதுமே ஒன்று சீருடையில் இருப்பது போலவும் இல்லாவிடில் கடைசியில் பாலச்சந்திரன் இறந்த உடலில் இருக்கும் உடையுடன்  பாலச்சந்திரனாக நடித்த சிறுவன் இந்த இரண்டு உடைகளை மட்டுமே அணிந்திருந்தாக மட்டுமே காட்டி இருக்கிறார்.   

ஒரு படம் அதுவும் நடந்த சம்பவத்தை ஒட்டி சித்தரிக்கப்படும் பொழுது அதன் கூறுகள் சிறிதாவது நடந்த சம்பவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமையவேண்டும். அதைவிடுத்து சித்தரிப்பு என்ற பெயரில் அதுவும் நமக்கு ஆதரவாக என்ற நிலையில் இருந்தால் கூட அது தவறானதாகவே முடியும். மேலும் இன்றைய காலகட்டத்தில் அதுவும் சர்வதேச நாடுகளின் முன்பு நாம் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நியாயத்தை கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் நிகழ்வு பாலச்சந்திரனின் மரணம் இதை ஒட்டிய கதையை பின்ணனியாக வைத்து ஒருபடம் எடுக்கப்படும் பொழுது பாலச்சந்திரனின் மரணத்திற்கு முழுப் பொறுப்பு ஏற்கவேண்டிய இந்தியாவை, நாம் விரும்புகிறோம் என்று தனது படத்தின் இடைச்சொறுகலாக வைத்துவிட்டு பிராபகரன் ஈழத்திற்காக இந்தியா பேச வேண்டும் என்று என்றோ விரும்பியதை இன்று கோடிட்டு காட்டுகிறார். அதே போல் இந்தியாவில் ஈழ விடுதலை போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்த பொழுது சென்னை பெசண்ட் நகரில் அனிதா பிரதாப் அவர்கள் எடுத்த பேட்டியில் இன்று பயிற்சி கொடுக்கும் இந்தியாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும் என்று சொன்னதையோ அதன்பிறகு இந்திய அமைதிப் படையுடன் சண்டையிட்டதையோ அவருடன் பேசிய தோழர்களிடம் எடுத்துக்காட்டி பேசியதாக தெரியவில்லை.. 

இதையெல்லாம் தாண்டி இந்த படத்தின் ஒரு படலை எழுதியவர், இந்த படத்தை வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் தயாரித்த பச்சை முத்து ஈழ விடுதலையை ஒரே ஒருவர் தான் கேட்டார் அவருக்காக 1,50,000 லடசம் பேர் செத்தார்கள் என்று 2014 தேர்தல் நேரத்தில் பத்திரிக்கை பேட்டியில் சொன்னார். இதே பாரி வேந்தரிடம் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன தமிழர் மீட்சிக்காக கட்சி நட்த்துகிறேன் என்று சொல்கிறார் தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை தமிழனும் வந்து இவர் கட்சி ஆரம்பிக்க தவம் இருந்தானா என்ன என்று.. இவர் தூக்கி பிடிக்கும் இந்திய தேசிய விடுதலைக்காக இந்தியாவில் இருக்கும் அனைவரும் போராடி சிறை சென்றானா என்ன என்று எல்லாம்.. ஆனால் ஈழ விடுதலைப் போராட்ட்த்தை கொச்சைப் படுத்தி பேசிய அதுவும் தேசியத்தலைவரை சர்வதேச நாடுகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று வைத்த குற்றச்சாட்டை வழிமொழியும் இந்த பச்சைமுத்து தயாரிக்கும் படம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்ப நாம் என்ன முட்டாளா... 

பச்சைமுத்துவின் ஊடக பேட்டி... ஈழத்தைப் பற்றி...

https://www.youtube.com/watch?v=-lC4FvzpFDk

Thursday, July 10, 2014

மா.பொ.சியும் ஈழத் தமிழர்களும்


தமிழ் தமிழர் தமிழ்நாடு என்றாலே பல பிரச்சனைகள் முன்வைக்கப்படுகிறது, அதுவும் திராவிட எதையும் தமிழருக்காக சாதிக்கவில்லை என்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது தார் கொண்டு இந்தி எழுத்துகளை அழித்தால் பின்னாலேயே மண்ணெண்ணெய்யுடன் சென்று தாரை சுத்தம் செய்து இந்தியை வெளிக்கொணர்ந்த மா.பொ.சியை தமிழ் தேசிய அடையாளமாக முன்னிருத்துகிறார்கள் நவீன தமிழ்தேசியவாதிகள். தனது கொள்கையாக மா.பொ.சி சொன்னது.. 


உரிமைக்கு எல்லை வேங்கடம்
உறவுக்கு எல்லை இமயம்
நட்புக்கு எல்லை உலகம்

என்று முழங்கினார். இப்படி இந்திய தேசியத்தின் கீழ் தான் தமிழ்நாட்டின் விடிவைத் தேடினார் இப்படி இந்திய தேசியத்தின் கீழ் விடிவு தேடியவர்களே இங்கு தமிழ் தேசியத்தின் மண்ணுரிமை போராளியாகவும், தமிழ்தேசியத்தின் வழிகாட்டியாகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள்.
மா.பொ.சி ஒரு விடுதலை போராட்ட காலத் தலைவர் அவரின் இந்தியப் பாசம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கீழாக ஒருங்கிணைக்கப்பட்டது என்பது நாம் அறிந்ததே. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நமக்கு, ஆனால் தமிழர்களுக்கான தீர்வுகளாக அவரின் போராட்டங்கள் என்பது இந்திய தேசியத்தின் கீழாகவே இருந்தது. இன்னும் சொல்லப் போனால் ஈழப் பிரச்சனைகளில் பல வேலைகளை செய்துள்ளார் என்று மார்தட்டுவார்கள். அவரின் ஈழப்பிரச்சனையின் பார்வை எனபது தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால் ”அது சிங்களவர்களின் செயல்பாட்டை பொறுத்து இருக்கிறது ஈழத் தமிழ்மக்களின் விருப்பம் நான் அன்னியன் என்னால் எதுவும் சொல்ல இயலாது” என்றே கூறுவார். அதாவது இன்றைய காங்கிரஸும் பிஜேபியும் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஈழம் என்பது அந்நிய நாட்டு பிரச்சனை அதில் நாங்கள் எப்படி தலையிடுவது என்று கைகழுவும் பழக்கத்தை முன்மாதிரியாக நின்று சொல்லிக் கொடுத்தவர் மா.பொ.சி தான். 

இது மட்டுமல்ல ஈழ போராட்ட இயக்கங்கள் அனைவரும் இந்தியா சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற ஊதுகுழலாக செயல்பட்டவர் தான் மா.பொ.சி. ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் ஏற்பட்டபொழுது இந்திய அரசும் அமைச்சர்களுக்கு கேட்டு கொண்டதற்கிணங்க ஈழப் போராட்ட தலைவர்களுடன் பேசி ஒப்பந்தத்தை ஒத்துக் கொள்ள வேலை பார்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர் மா.பொ.சி அவர்கள் தான். ஈழத்தைச் சார்ந்த யாருமே இல்லாத ஒப்பந்தத்தை இந்தியாவின் நலனுக்காகவும் சிங்களவரின் நலனுக்காகவும் போடப்பட்டபொழுது அதற்கு பிரசார பிரங்கியாக செயலாற்றியவர் மா.பொ.சி. இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் கைப்பாவைகளாக இருந்த பல ஈழ போராட்ட இயக்கங்கள் ஏற்றுக் கொண்டன இந்தியாவின் மீறி எதுவும் செய்ய முடியாது என்ற தங்களின் இயலாமையின் கீழாக. ஈழத் தமிழர் நலனை பிரதிபலிக்காத ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் இது எங்களுக்கு தேவை இல்லை என்று சொன்னவர்களே கடைசி வரை போராட்டத்தை காப்பாற்றினர், அன்று இந்தியாவிற்காக வளைந்து கொடுத்து இருந்தால் இன்று ஈழத் தமிழினத்தை நாம் தேட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும்.

இப்படி வருங்கால நோக்கம் எதுவும் இல்லாமல் இந்திய அரசின் பிராசார பிரங்கியாக செயல்பட்டவர் மா.பொ.சி அதே காலகட்டத்தில் யாழ்ப்பாண பல்கலையில் இருந்த பேராசிரியர்கள் அனைவரையும் இவருக்கு தெரியும் அவர்கள் அனைவருமே இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவியலாது என்றார்கள். ராஜிவ் ஜெயவர்தனா ஒப்பந்தம் ஜூலை 29, 1987 அன்று கை சாத்திடப்பட்டது. ஆனால் ஜுலை 19ம் தேதி யாழ்ப்பாணப் பல்கலையில் நடத்தபப்ட்ட கருத்தரங்கில்

திரு க.சிற்றம்பலம் அவர்கள் பேசியது  “திம்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட தமிழர் தாயகம், தமிழர் தேசிய இனம், சுயநிர்ணய உரிமை என்பனவும் அங்கீகரிக்கபப்ட வேண்டும், மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் இதனடிப்படையில் தான் பேச்சுவார்த்தைக்கு போகலாம். இதற்கும் குறைந்த தீர்வுக்கு நாம் பேச்சு வார்த்தைக்கு போகக் கூடாது என்று கூறினார்.  

மு. திருநாவுக்கரசு அவர்கள் பேசியது “சில நியாயங்களை சுட்டி காட்டி போராட்டத்தை அழித்துவிடுவது சரியல்ல, எமக்குள்ளே சில முரண்பாடுகளுக்காக சரணாகதி அடையக் கூடாது. எமது தேசிய இனத்தின் சுயாதீனதிற்கான வாய்ப்புகளை செயலுருப்படுத்த வேண்டும். அதற்காக ஒர் அரசியல் தளம் வளர வேண்டும். அந்த அடித்தளத்தில் சரணாகதியற்ற தீர்வுக்கே நாம் போக வேண்டும்” என்று கூறினார். 



பேராசிரியர் கா.சிவத் தம்பி அவர்கள் பேசியது ”எமது போராட்டத்தின் தன்மை சர்வதேசரீதியில் நியாய முக்கியத்துவம் பெற்றுவரும், முகிழ்விடும் இக்காலகட்டத்தில் இப்படிப்பட்ட இடைக்கால தீர்வுகள் ஆபாத்தானவை, மேலும் இவ்வளவு அழிவுகள், உயிர்சேதங்கள், உடமை இழப்புகள் பின்னரும் நிச்சயமற்ற தீர்வினை விட நாம் தொடர்ந்து அல்லல் படுவதே மேல், எமது துன்பத்தின் மூலமாகவேனும் எதிர்காலச் சந்ததியின் இன்பத்துக்கும் வழி கோலலாம்” முரசொலி (26-7-1987)

இந்த கருத்தரங்கத்தில் மேலும் கலைபீடாதிபதி பேராசிரியர் என். பாலகிருஷ்ணன், கலாநிதி எஸ். கிருஷ்ண ராஜா, கலாநிதி. வ. நித்தியானந்தன், திரு. எஸ். சத்தியசீலன் போன்றவர்களும் கலந்து கொண்டு ஒப்பந்தத்தின் கூறுகள் எந்த தீர்வையும் தரவில்லை என்பதை வலியுறுத்தினர்.

இப்படி ஒரு பல்கலை பேராசிரியர்கள் மற்றும் அங்கிருந்த அறிவியலாளர்கள் என்று அனைவரும் மறுதளித்த ஒப்பந்தத்தினைத் தான் ஈழத் தமிழர்கள் மீது திணிக்க விரும்பினர். இவரைப் போன்றவர்களால் கட்டமைக்கப்பட்ட மாபெரும் ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது அதற்கு அங்கு போராடிய சில இயக்கங்களும் துணை போனது. புலிகள் இயக்கம் முதலிருந்தே தனது எதிர்ப்பை தெரிவித்தது, இருந்த போதும் ஒப்பந்தம் திணிக்கபப்ட்ட பிறகு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒத்துழைப்பு கொடுக்கவும் ஒப்புக்கொண்டது புலிகள் இயக்கம். ஆனால் நிபந்தனைகள் மீறப்பட்டு சிங்கள இராணுவம் செய்த அனைத்து விசயங்களையும் இந்திய இராணுவமும் செய்த பொழுது இந்தியா எனும் பெரிய நாடு என்பதைவிட எம்மக்களின் வலிக்கான தீர்வே முக்கியம் என்று எதிர்த்து நின்று போராடினர் புலிகள் இயக்கம். ஆனால் அன்று இந்த ஒப்பந்தத்தை திணித்த மா.பொ.சியோ கடைசிவரை ஒபந்த்திற்கு வக்காலத்து வாங்கவே செய்தார். 1990ல் பத்மநாபாவிற்காக இரங்கல் கூட்டம் நடந்தபொழுது அதிலும் திரும்பவும் ஒப்பந்தத்தை வலியுறுத்தியே பேசினார் (விடீயோ இணைக்கபப்ட்டுள்ளது)
                                     

சிறு குழந்தைகள் கூட படித்தால் ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தில் இந்திய நலனும் சிங்களர் நலனும் பேனப்படுவது மட்டுமே இருப்பது தெரியும் ஆனால் அதை தூக்கி பிடித்துக்கொண்டு நின்றவர் தான் மா.பொ.சி, அதுமட்டுமல்லாமல் இந்த ஒப்பந்தத்திற்காக் ஒரு மூவர் அணியாக செயல்பட்டிருக்கிறார் அதில் இருந்த மற்ற இருவர் எழுத்தாளர் ஜெயகாந்தனும் இன்று வரை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதா  இரட்டை நாக்கு சோமாறி “சோ”. இப்படி சோவுடன் கூட்டணி அமைத்து ஈழத்தமிழர்கள் நலனைப் பற்றி பேசாத ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாதது புலிகள் இயக்கம் செய்த தவறு என்று பிதற்றி திரிந்தார்.

இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை இன்று வரை முரண்பட்ட இயக்கங்களாக இருந்தாலும் அனைத்து இயக்கங்களும் போராளிகளாகவே ஈழப்போராட்டத்தில் நின்றனர் அதில் புலிகள் இயக்கத்தை புலிப்படை என்று கூறி வேறு முத்திரை வருமாறு பேசியதை இந்த காணொளியில் நன்றாக பார்க்கலாம், இவர்கள் ஒரு 50 பேர் கூட்டத்தில் இப்படி பேசுவதால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இன்று இவர் தான் தமிழ்தேசியத்தின் வழிகாட்டி என்பது தான் நகைப்புக்கு இடமளிக்கிறது.

முதலில் தமிழ் தேசியம் என்பதில் சரியான வரையறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இவர்கள் அனைவரும், ஒரு பக்கம் விடுதலைப் போராட்ட மாவீரர்களான புலிகள் இயக்கத்தை ஆதரித்துக் கொண்டே மா.பொ.சி போன்றவர்களை மண்ணுரிமை, தமிழ் தேசிய வழிகாட்டி என்று கூறுவது சரியான அரசியலா என்பதை சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் நாளை சமூகம் இவர்களைப் பார்த்து சிரிப்பா சிரிக்கும்.